Thursday, March 11, 2010

இரண்டாவது ஈழப் போரின் நினைவுக் குறிப்புகள்



[இலங்கையில் இரண்டாவது ஈழப்போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது. சுவிஸ் "தமிழ் ஏடு" மாதப் பத்திரிகையில் "எடிட்டோர் பக்கம்" பகுதியில் பிரசுரமானது.]

இரண்டாவது தமிழீழ யுத்தம் என அழைக்கப்படும், இன்றைய "புலிகள் - ஸ்ரீ லங்கா இராணுவ யுத்தம்" 3 வது ஆண்டை நிறைவு செய்து, 4 வது ஆண்டுக்குள் பிரவேசிக்கின்றது. ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தில், இம் மூன்றாண்டு காலம் என்பது மிகச் சொற்பமே, எனச் சுலபமாக கூறிடலாம். பெருமளவு இழப்புகளையும், சிறிதளவு வெற்றிகளையும் சந்தித்து விட்ட இவ்விரு பக்க படைகளும், இதுவரை சாதித்தது என்று எதையும் கூறிக் கொள்ள முடியாத நிலை. சமாதான மூச்சிற்கு அவகாசம் எடுக்காது சமரைத் தொடர்வது பற்றி நாம் புரிதல் அவசியம். தம் இருத்தலுக்காகவோ, அன்றில் கௌரவ தடைக்கோ தயங்கி நிற்றல் பலர் அறியாதவொன்றல்ல.

இருப்பினும் மரணத்திற்குள்ளும், பட்டிநிக்குள்ளும் தமது வாழ்வை இழந்து விட்ட மக்களையிட்டு உணராதிருத்தலும் முடியாது. இன்றைய நிலையில், இழப்பதற்கு உயிரை விட ஏதுமற்ற நிலையில், மக்கள் வாழும் ஒரு தேசத்தில் சமதர்மம் பிறக்குமா? அல்லது தமிழீழம் பிறக்குமா? என்பதை ஆராயும் அளவிற்கு யாரும் வரவில்லை. 1990 ல் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் இருந்த நட்புறவு அறுந்து விட்ட தருணம். இந்த யுத்தத்தின் நன்மை,தீமைகளை பகுத்தாயும் முன்பே மக்கள் போர்ச் சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள்.

ஆரம்பத்தில் இராணுவத்தை முகாமுக்குள் முடக்கி விட்டு, முழுத் தமிழீழ பிரதேசங்களையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க புலிகள் எடுத்த முயற்சி. குறுகிய காலத்திற்குள் கிழக்கை மீட்டெடுத்த ஸ்ரீலங்கா இராணுவ நடவடிக்கை, போராளிகளை காடுறையும் கெரில்லாச் சமருக்கு தள்ளியது. சில மாதங்களுக்கு போர் ஓய்ந்த வேளை, வடக்கில் புலிகளின் ஆட்சி, கிழக்கில் இராணுவ ஆட்சி எனும் வரையறையை ஏற்படுத்தியது. யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதை விட, வவுனியா போன்ற எல்லைப்புறங்களை தக்க வைத்தலையே இராணுவம் விரும்பியது. ஒரு வகையில் இப்படி இருப்பதுவே தமக்கும் சிறந்தது, என இரு பக்கமும் கருதுவது போல தெரிந்தது.

யாழ் குடாநாட்டை சிங்கள முழுமையாக பார்த்தே ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. இடையில் இடம்பெற்ற வடமராட்சி தாக்குதலும் இந்திய தலையீட்டால் இடையில் நின்றது. கிழக்கில் மக்கள் தொகையில் சரிபாதிக்கு மேல் சிங்கள,முஸ்லிம் இனங்கள் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், அங்கு தனது காலைப் பலப்படுத்தவே இலங்கையரசு விரும்பியது. அது போல நூறு வீதம் தூய தமிழினத்தை (முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் பின்) கொண்ட வடபகுதியில் தமது நிரந்தர தளத்தை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் புலிகள் இறங்கினர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால செயற்பாடுகள், யாழ் குடாநாட்டுக்குள்ளே கருக்கொண்டதும், உருக் கொண்டதும், இவ்விடத்தே குறிப்பிடத் தக்கது. இதுவே "வட இலங்கைப் போராளிகள்" என உலக நாடுகள் அழைப்பதற்கு காரணமானது.

அப்பாவி தமிழ் மக்களின் வீடுகள் மீது, விமானக் குண்டுகளைப் பொழிவதால், இடம்பெயரும் மக்கள். போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையிலான நெருக்கம் விரிவடையும் என்பது இலங்கை இராணுவத்தின் கணக்கு. பெருமளவு இழப்புகளை சந்தித்த போதிலும், மக்கள் அரசின் மீது வெறுப்புக் கொண்டுள்ளனர். புலிகள் இவ் வெறுப்பை தமக்கான ஆதரவாக மாற்றி வருதையும் கண்கூடாக காணக் கூடியதாகவிருந்தது.

முன்பு போராட்டப் பாதையில் இருந்து வழி மாற்றி விரட்டப்பட்ட மாற்று இயக்கங்கள். தமது இருத்தலுக்காய் முன்பு இந்திய இராணுவம், தற்போது இலங்கை இராணுவம் என்று கொழு கொம்பாய் பற்றிக் கொண்டுள்ளனர். தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முயற்சிக்காத இவர்களது போக்கு. பழிவாங்கலை முதன்மைப் படுத்தல். அரசின் எடுபிடிகளாக செயற்படுதல். இவை யாவும் இவர்களையும் இராணுவ தாகம் கொண்ட குழுக்களாகவே இனங்காட்டுகின்றன. பலம் வாய்ந்த மாற்று அரசியல் இயக்கமாக தம்மை வளர்த்துக் கொள்ளாததும் இக் குழுக்களின் பலவீனமாகும்.

இப் போராட்ட வரலாற்றில் பல தலைமைகள் கொல்லப்பட்டதும், இம் மூன்றாண்டு காலகட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரச தரப்பில் பாதுகாப்பு அமைச்சர், வட பகுதி இராணுவ பொறுப்பதிகாரி, கடற்படைத் தளபதி, ஜனாதிபதி ஆகியோர் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் மத்திய குழு உறுப்பினர்களான செங்கதிர், சர்வதேச தொடர்பாளர் கிட்டு ஆகியோர் கொல்லப்பட்டனர். இதைத் தவிர முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை. அதை தொடர்ந்த விசாரணைகள் புலிகளை குற்றவாளிகளாக சுட்டி நின்றன. அது சர்வதேசத்தின் பார்வையை சிறு தீவின் பக்கம் திரும்பச் செய்தது.

போரின் அகோரத்திற்கு அப்பாவி மக்கள் முகம் கொடுப்பது ஒரு பக்கம். இவர்களும் எதிரிகளா? எனக் கேட்கும் வகையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் கிராமங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. வயோதிபர், பெண்கள், குழந்தைகள் என பாரபட்சம் பாராது, ஈவிரக்கமின்றி கொள்வதும் அவ்வப்போது நடந்துள்ளன. இவற்றை நியாயப்படுத்த யார் எத்தகைய காரணங்களைக் கூறிய போதிலும், இவை இனங்களுக்குள்ளே ஆறாத ரணங்களை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது.

இரு பக்கமும் இராணுவரீதியிலான பலப்பரீட்சையிலேயே நம்பிக்கையோடு தொடரும் வேளை, எதிர்காலம் குறித்த அச்சவுணர்வு பலரிடம் குடிகொண்டிருத்தல் இயல்பு. புலிகளும், இலங்கையரசும் சமரசத்திற்கு இடம் கொடாத நிலையில், இந்தியாவின் தலையீடு அடிக்கடி வலியுறுத்தப் பட்டது. ஆனால் ஏற்கனவே சூடு கண்ட இந்தியா, தனக்குள்ளே உள்ள முடிச்சுகள் இறுகிய நிலையில் மீண்டும் இலங்கைக் களத்தில் குதிக்கும் நிலையிலிருக்கவில்லை. அகதிகளை வைத்திருப்பதைக் கூட ஒரு சுமையாகவே, இந்திய துணைக்கண்டம் கருதுகின்றது. சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட மேற்குலக நாடுகளும் இந்தியாவை தாண்டி வர முடியாத நிலை. இந்நிலையில், முற்றிலும் தனிமைப் படுத்தப்பட்ட தீவாக காட்சி தரும் இலங்கை. எந்தவொரு தீர்வும் இராணுவ சக்திகளுக்குட்பட்டதாகவோ, அல்லது அவர்களின் பங்கேற்புடனோ அமையும் என அரசியல் அவதானிகள் கருதினார்கள்.

எது எப்படியிருப்பினும், சமாதானம் என்பது இன்னும் நீண்ட காலத்தின் பின்பே சாத்தியப் படக் கூடியது. நாட்டின் வட-கிழக்கு பகுதி மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கும் அளவு மோசமடைந்த நிலை. கிழக்கில் ஸ்ரீலங்கா படையினர் எதிரிகளை அளிப்பதை விட வயல்களை அழிப்பதே சிறந்தது எனக் கருதி செயற்பட்டனர். இயற்கையாகவே வறண்ட பிரதேசமான யாழ் குடாநாட்டை யுத்தம் பாலைவனமாக்கியது.

Saturday, March 6, 2010

பருவமடையாத பாலியல் தொழிலாளர்கள் (ஆவணப்படம்)

பருவமடையாத பாலியல் தொழிலாளர்கள் (ஆவணப்படம்)

சிங்கப்பூருக்கு அருகில் இருக்கும், இந்தோனேசியாவுக்கு சொந்தமான "Batam " தீவு விபச்சார விடுதிகளுக்கு பிரபலமானது. இங்கே வரும் பணக்கார காமுகர்களுக்கு உடல் இச்சைக்கு தீனியாக்கப் படும் பருவமடையாத இளம் நங்கைகளைப் பற்றிய ஆவணப்படம்.
பருவமடையாத பாலியல் தொழிலாளர்கள் (ஆவணப்படம்)

thanks:kalaiyakam

Tuesday, March 2, 2010

வறுமை ஒழிப்பு ஒரு வரலாற்றுக் கடமை

"ஒரு நாட்டில், மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகையின் வறுமையை போக்க முடியவில்லை என்றால், அந்த நாடு கடைப்பிடிக்கும் ஜனநாயகத்தால் பிரயோசனம் என்ன?" - நெல்சன் மண்டேலா

"உலகமயமாக்கல்" என்றால் என்ன? பணக்கார நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளில் சென்று முதலிடுவது ஒரு புறமிருக்க, ஏழை நாடுகளை சேர்ந்த மக்கள் பணக்கார நாடுகளுக்கு சென்று குடியேறுவது மறுபுறம் நடந்து கொண்டிருக்கும். இது எவ்வளவு தூரம் யதார்த்தமான கூற்று என்பதை, நாம் நாள் தோறும் கண்கூடாக காண்கிறோம். 21 ம் நூற்றாண்டின் பொருளாதாரக் கொள்கையாக, உலகமயமாக்கல் சக்தி வாய்ந்த பணக்கார நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று வரை சமூகத்தை பீடித்துள்ள ஏழ்மை என்ற நோயை தீர்க்கும் மருந்தாக பிரகடனப் படுத்தப் படுகின்றது. இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த உலக வர்த்தக நிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புகள் முடுக்கி விடப் படுகின்றன. உலகில் இன்று உலகமயமாக்கல் வலைக்குள் விழாத நாடுகள் எதுவும் இல்லை.

உலகில் ஏழை-பணக்கார நாடுகளுக்கு இடையிலான பிரிவினையானது, வடக்கு-தெற்கு பிரிவினையாக புரிந்து கொள்ளப்படுகின்றது. அனேகமாக எல்லா பணக்கார நாடுகளும் பூமியின் வட புலத்தில் அமைந்துள்ளதும், தென் புலத்தில் அமைந்துள்ள ஏழை நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் கசப்பான உண்மை. அவர்கள் எப்படி "பணக்கார நாடுகள்" ஆனார்கள்? மற்றவர்கள் எப்படி "ஏழை நாடுகள்" ஆக்கப்பட்டார்கள்? ஏழை நாடுகளில் வாழும் மூன்றில் இரண்டு உலக சனத்தொகை அவசியம் அறிந்திருக்க வேண்டிய உண்மை அது.

ஆதிகாலத்து மனிதன் குகைகளில் வாழ்ந்த போது, அந்த சுற்றாடலில் கிடைத்ததை உண்டு வாழ்ந்தான். கால்நடைகள் பராமரிப்பை அறிந்து கொண்ட போது நாடோடி கலாச்சாரம் ஆரம்பமாகியது. குறிப்பிட்ட இடத்தில் இயற்கை வளம் அருகிய போது, அது கிடைக்கக் கூடிய வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தார்கள். ஆகவே செல்வம் இருக்கும் இடம் தேடி மக்கள் குடிபெயர்வது நவீன காலத்திற்கே உரிய தோற்றப்பாடு அல்ல. ஒரு தேசத்தின் உள்ளேயே, கிராம மக்கள் வாய்ப்பு தேடி நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். துரித காதியில் வளர்ச்சியடையும் நகரங்களும், புறக்கணிக்கப்படும் கிராமங்களும், சமூக இடைவெளியை விரிவு படுத்துகின்றன.

உள்நாட்டில் இடம்பெயரும் மக்கள் திரளைப் போல, வசதியானவர்கள் வெளி நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். ஆனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வருபவர்களை, பணக்கார நாடுகள் எப்போதும் இருகரம் நீட்டி வரவேற்பதில்லை. தேவைப்படும் பொழுது பயன்படுத்தி விட்டு, அபரிதமாக தேங்கி விடும் தொழிலாளரை வெளியே தள்ளுகின்றன. மேலும் "ஏழைகளின் படையெடுப்பை" கண்டு அஞ்சி புதுப்புது சட்டங்களை போடுகின்றனர். யுத்த அகதிகளும் பொருளாதார அகதிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.

பத்து வருடங்களுக்கு முன்னர் கோபன்ஹெகன் நகரில் இடம்பெற்ற வறுமை ஒழிப்பு மகாநாடு, குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வறுமையை ஒழிப்பதில் பணக்கார நாடுகளின் கடமை வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் வறிய நாடுகள் மீது சுமத்தப்பட்ட கடன்சுமை குறையவில்லை. பணக்கார நாடுகள், வறுமை ஒழிப்பு திட்டம் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை முடுக்கி விடுகின்றன. "மூன்றாம் உலக நாடுகளுக்கான சமூக நலன்புரி திட்டம்" என்ற பதாகையின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி, தொண்டு நிறுவனங்களில் வேலை செய்யும் மேலைத்தேய முகாமையாளரின் சம்பளத்திற்கே போதாது. எது எப்படியிருப்பினும், பணக்கார நாடுகள் வறுமை ஒழிப்பில் தமது பங்கை மறுக்கவில்லை.

பணக்கார நாடுகள் தமது நாடுகளுக்குள் புக முனையும் ஏழை அகதிகளை, குடியேறிகளை தடுக்க முயல்கின்றன. மறு பக்கம் ஏழைப் பங்காளனாக காட்டிக் கொள்கின்றன. ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகள் யாவும், அவற்றை தம்மில் தங்கியிருக்க வைப்பதற்காகவே செய்யப்படுகின்றன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது நாட்டினுள் குடியேற விரும்புபவர்களை "பொருளாதார அகதிகள்" என குறிப்பிடுகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, மேற்கு ஐரோப்பியர்கள் பொருளாதார அகதிகளாக அமெரிக்க, அவுஸ்திரேலிய கண்டங்களுக்கு படையெடுத்தார்கள். தாயகத்தில் நிலவிய வறுமை அவர்களை புதிய உலகம் நோக்கி குடிபெயர தூண்டியது. இரண்டாம் உலகப்போர் வரை ஐரோப்பிய நாடுகளில் நிலவிய வறுமை, இன்றைய அபிவிருத்தியடையாத நாடுகளின் நிலையை ஒத்தது.

ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் பத்து வீதத்திற்கும் குறைவானோரே செல்வந்தர்களாக வாழ்ந்தார்கள். பெரும்பான்மை மக்கள் கொடிய வறுமைக்குள் உழன்றனர். ஐரோப்பிய வறிய மக்களின் எழுச்சி, பிரெஞ்சுப் புரட்சி போன்ற பல புரட்சிகளுக்கு வழி சமைத்தது. மேலும் பல எதிர்கால புரட்சிகளை தடுக்கும் நோக்கில், "நலன்புரி அரசு" உருவாக்கப்பட்டது. சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டது.

பசுபிக் சமுத்திரத்தில் உள்ள சிறு தீவுகள் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளின் காலடி பட்ட பின்னர் "நாகரீகமடைந்தன." தீவுவாசிகள் ஐரோப்பியரின் நவீன சாதனங்களை கண்டு வியப்புற்றனர். ஐரோப்பியரின் கடவுள் அவர்களுக்கு கப்பல்களையும், துப்பாக்கிகளையும், நவீன இயந்திரங்களையும் கொடுத்ததாக கருதினர். தாமும் ஐரோப்பியரின் மதத்தை தழுவினால் இவற்றைப் பெறலாம் எனக் கருதினர். ஆனால் ஆண்டுகள் பலவாகியும், "ஐரோப்பியக் கடவுள்" தமக்கு நவீன கருவிகளை கொடுக்காததையிட்டு விசனமுற்றனர். தற்போது இந்த மக்கள் கிறிஸ்தவ மத உட்பிரிவை உருவாக்கி ஐரோப்பிய எதிர்ப்பாளராக மாறியுள்ளனர்.

இன்று மூன்றாம் உலக நாட்டு மக்களின் மனநிலை மேற்குறிப்பிட்ட பசுபிக் தீவுவாசிகளின் மனநிலைக்கு ஒப்பானது. தன் பிள்ளை ஆங்கிலம் கற்றால் போதும், ஆங்கிலேயரைப் போல பணக்காரர் ஆகலாம் என பல பெற்றோர் நினைக்கின்றனர். சில நேரங்களில் அவர்களது கனவுகள் நிஜமாகின்றன. ஆனால் அதற்கு காரணம் ஐரோப்பியமயமாகிய (அல்லது ஆங்கிலமயமாகிய) வாழ்க்கைத் தரமல்ல. ஆங்கிலம் பேசும் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் மேன்நிலையில் உள்ளது. இந்த நாட்களில் தகமை சார்ந்த தொழிலாளரின் பற்றாக்குறையை, மூன்றாம் உலகில் இருந்து வரும் பட்டதாரிகளை கொண்டு நிரப்புகின்றனர்.

19 ம் நூற்றாண்டில் காலனிகளை ஐரோப்பியமயப்படுத்தும் முயற்சி நடைபெற்றது. ஸ்பானிய, பிரெஞ்சு, ஆங்கில, மொழிகளும், கலாச்சாரங்களும் பரப்பப்பட்டன. அங்கே ஏற்கனவே இருந்த பூர்வீக கலாச்சாரங்கள் நசுக்கப்பட்டன, அல்லது புறக்கணிக்கப்பட்டன. கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் பரப்பவும், கூடவே ஐரோப்பிய கலாச்சாரத்தை பரப்பவும் உதவின. கல்விக்கூடங்கள் ஐரோப்பிய கல்வி முறையை இறக்குமதி செய்தன. இவ்வாறே காலனிகளில் வாழ்ந்த மக்களின் மூளைக்குள் ஐரோப்பிய கலாச்சாரம் புகுத்தப்பட்டது. ஐரோப்பியமயப்பட்ட புதிய மத்தியதர வர்க்கம் தோன்றியது. அவர்களின் சேவைக்காக காலனிய அரசு அதிகபட்ச சம்பளத்தை வெகுமதியாக வழங்கியது. அதாவது, காலனியில் சுரண்டிய பணத்தில் ஒரு பங்கு அவர்களுக்கும் போய்ச் சேர்ந்தது.

ஐரோப்பிய காலனிகள் யாவும் ஏற்றுமதி-இறக்குமதி பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டிருந்தன. ஐரோப்பாவில் ஏற்கனவே வளர்ச்சியடைந்திருந்த தொழிற்துறைக்கு தேவையான மூலப்பொருட்களை தமது காலனிகளில் இருந்து பெற்றுக்கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட காலனிகளில் மக்களை அடிமைகளாக, அல்லது குறைந்த கூலிக்கு அமர்த்தி திருடப்பட்ட மூலப்பொருட்கள் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டன. அவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயத்த உடைகள் பின்னர் அதே மக்களுக்கு விற்கப்பட்டன. சுதந்திரமடைந்த முன்னாள் காலனிகள், தொழிலகங்களை நிறுவி முடிவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பின. ஆனால் அப்போதெல்லாம் (ஐரோப்பாவை வந்து சேரும் போது) "இறக்குமதி தீர்வை" விதிக்கப்பட்டது. அந்த வரியை செலுத்திய பின்னர் விற்கும் விலை மிக அதிகமாக இருக்கும்.

ஐரோப்பிய சந்தையில் விற்கப்படும் மூன்றாமுலக நாடுகளின் பாவனைப் பொருட்கள் பல ஐரோப்பிய நிறுவனங்களாலேயே சந்தைப் படுத்தப்படுகின்றன. இலங்கையில் வாங்கும் தேயிலையை பிரித்தானியக் கம்பனிகள் வாங்கி, பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகிக்கின்றன. பிரேசிலில் வாங்கும் காபியை சுவிஸ் கம்பனிகள், கவர்ச்சிகரமான போத்தல்களில் அடைத்து உலகம் முழுவதும் விற்கின்றன. அண்மைக் காலங்களில் இந்தியாவை சேர்ந்த பிரபல ஐ.டி. கம்பனிகள் சில ஐரோப்பாவில் முதலிட விரும்பின. ஆனால் அவை கூட்டு ஒப்பந்தத்திற்கு அணுகிய ஐரோப்பிய கம்பனிகள் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஐரோப்பிய கம்பனிகளின் பொருளாதார பலம் மிக அதிகமாக இருந்ததால், இந்திய கம்பனிகளை விலை கொடுத்து வாங்க மட்டுமே விரும்பின.

பிரேசிலில் இருந்து ஏற்றுமதியாகும் காபி, இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் தேயிலை, மத்திய அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதியாகும் வாழைப்பழம். இவையெல்லாம் ஐரோப்பாவிலோ, அல்லது அமெரிக்காவிலோ உற்பத்தியாவதில்லை. ஆனால் அமெரிக்க-ஐரோப்பிய கம்பெனிகளே மேற்படி உணவுப் பொருட்களை சந்தைப் படுத்துகின்றன. பெரும் மூலதனத்துடன் நடத்தப்படும் மேற்குலக பன்னாட்டுக் கம்பனிகள் ஆதிக்கம் செலுத்தும் உலக சந்தையை மாற்றுவது அவ்வளவு இலகு அல்ல. இவை மூலப்பொருட்களை வழங்கும் மூன்றாம் உலக நாடுகள், உலக சந்தைக்கு வர விடாமல் தடுக்கின்றன. இத்தகைய நியாயமற்ற வர்த்தகத்தை நிரந்தரமாக உறுதி செய்ய, GATT அமைப்பு உருவாக்கப்பட்டது.
thanks:kalaiyakam

Tuesday, January 19, 2010

மதவெறியன் தலாய் லாமாவின் வன்முறைகள்

சீனாவில் திபெத்திய பௌத்த மதத்திற்கு சுதந்திரம் கேட்டு போராடும் தலாய் லாமா, அதற்காக நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதே தலாய் லாமா திபெத்திய பௌத்த மதத்திற்குள் ஷுக்டன் என்ற தெய்வத்தை வழிபாடும் பிரிவினரை அடக்கி வருகிறார். இந்தியாவில் திபெத்திய அகதிகள் வாழும் முகாம்களில், ஷுக்டன் மதப் பிரிவினர் தீண்டாமைக்கு உள்ளாகின்றனர். திபெத்தியர்களால் நடத்தப்படும் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு தடை. தலாய் லாமாவின் குண்டர் படையினர் ஷுக்டன் மதத்தவர்களை தாக்குகின்றனர். ஷுக்டன் மதப் பிரிவினரும் திபெத்தில் இருந்து அகதிகளாக இந்தியா வந்தவர்கள் தாம். தலாய் லாமா இவர்களை "சீன அரசின் கைக்கூலிகள்" என்று அவதூறைப் பொழிகிறார். கீழே உள்ள இரண்டு ஆவணப் படங்களும் தலாய் லாமாவின் மதவெறியையும், வன்முறைகளையும் பதிவு செய்துள்ளன.



நன்றி;கலையகம்

ஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்

அன்புடன் ஒபாமாவுக்கு,
அமெரிக்கா உலகில் மிக முன்னேறிய ஜனநாயக நாடு என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஹைத்தியின் நிலநடுக்கத்தில் அந்த நம்பிக்கை நொறுங்கி விட்டது. நிலநடுக்கத்திற்கு மறு நாள், "நிவாரணப் பணிக்கென 2000 மரைன் துருப்புகளை இன்னும் சில நாட்களில் அனுப்புவதாக" புதன்கிழமை AP செய்தி தெரிவித்தது. "இன்னும் சில தினங்களில்?"



திருவாளர் ஒபாமா அவர்களே, அமெரிக்காவில் இருந்து ரொம்ம்ம்ப தூரத்தில் இருக்கும் ஐஸ்லாந்து ஜனாதிபதி ஒலாபூர் கிராம்சொன் உங்களை முந்திக் கொண்டு உதவினார். உங்கள் அறிவிப்பை உலகத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதற்கு முன்னரே, 4000 மைல் தூரத்தில் உள்ள ஐஸ்லாந்தில் இருந்து உதவி வந்து சேர்ந்து விட்டிருந்தது. வெறும் 700 மைல் தூரத்தில் இருக்கும் அமெரிக்காவில் இருந்து உதவி கிடைப்பதற்கு "இன்னும் சில தினங்கள்" காத்திருக்க வேண்டும். 8000 மைல் தொலைவில் உள்ள சீனா 48 மணி நேரத்திற்குள் மோப்பம் பிடிக்கும் நாய்களையும், பிற உதவிப் பொருட்களையும் அனுப்பி வைத்தது. ஹைத்திக்கு மிக அருகாமையில் மியாமியிலும், புவேட்டோரீகொவிலும் (700 மைல்) அமெரிக்க தளங்கள் உள்ளன. அங்கிருந்து மரைன் துருப்புகளின் உதவியைப் பெறுவதற்கு நாம் இன்னும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும்.

ஒபாமா அவர்களே! ஹைத்தியின் மீட்பு பணிக்கும், நிவாரணத்துக்கும் எத்தனையோ மில்லியன் டாலர்கள் ஒதுக்கியிருப்பதாக அறிவித்தீர்கள். உண்மையிலேயே மிகப் பெரிய தொகை தான். ஆனால் அந்த தொகை கூட, நீங்கள் ஈராக்கில் ஒரு மாதத்திற்கு செலவிடும் தொகையின் சிறு பகுதி என அறியும் போது மனதை நெருடுகின்றது. யுத்தம் என்று வந்துவிட்டால், காற்றிலும் விரைவாக அமெரிக்க படையினர் அனுப்பப்படுவார்கள் என்பதை அறிந்திருக்கிறேன். ஹைத்திக்கு நீங்கள் அனுப்பிய உதவி மூன்று தினங்களில் வந்து சேர்ந்தது. அது ஒரு விமானம் தாங்கிக் கப்பல். (USS Carl Vinson) அந்தக் கப்பலில் எந்த வித அவசர கால உதவிப் பொருளையும் காணாதது ஏமாற்றமளித்தது. அதற்கு பதிலாக 19 ஹெலிகாப்டர்களும் ஏவுகணைகளும் இருந்தன.

ஒருவேளை நிவாரணப் பொருட்களை கப்பலில் அனுப்ப மறந்து விட்டீர்களா, ஒபாமா? கவலை வேண்டாம். ஏற்கனவே சர்வதேச மீட்புக் குழுக்கள் (அமெரிக்கர்களுக்கு முன்னர்)களத்தில் இறங்கி விட்டன. பத்து மெட்ரிக் தொன் உணவுப்பொருட்கள், குடிநீர், கூடாரங்கள், பிற மீட்பு உபகரணங்கள் எல்லாம் சின்னச்சிறு நாடான ஐஸ்லாந்தில் இருந்து வந்து சேர்ந்து விட்டன. உடனடியாக எமக்கு உதவிய ஐஸ்லாந்து, கடந்த வருட நிதி நெருக்கடியில் சிக்கி பொருளாதாரம் திவாலாகும் நிலையில் இருந்தது. "அமெரிக்கா உடனடியாக உதவி அனுப்பாததற்கு காரணம், ஹைத்தியில் நிலவிய பாதுகாப்புக் குறைபாடு..." உங்களது பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். ஆமாம், ஏற்கனவே பஞ்சத்தில் அடிபட்ட ஹைத்தி ஏழைகள் நீங்கள் அனுப்பும் நிவாரணப் பொருட்களை கொள்ளையடித்தால் என்ன செய்வது? அதைத் தடுக்க ஆயுதந் தரித்த Blackwater கூலிப்படையினரை அனுப்பியிருக்கிறார். சபாஷ்! நாம் கேட்டது drinking water , கிடைத்ததோ Black water.

திரு. ஒபாமா அவர்களே ஹைத்தியின் அவலத்திற்கு நிலநடுக்கம் மட்டும் காரணமல்ல. எல்லாவற்றுக்கும் இயற்கை அன்னையை குறை கூறாதீர்கள். அமெரிக்க ஆசியுடன் ஹைத்தியை மூன்று சகாப்தங்களாக ஆட்சி செய்த கொடுங்கோலன் டுவாலியர் காலத்தில் தான் பெருமளவு கட்டடங்கள் கட்டப்பட்டன. எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுப் போட்ட சர்வாதிகாரியின் கீழ், ஊழல் செய்து கட்டிய தரங்குறைந்த கட்டிடங்கள், எவ்வாறு பூகம்பத்தை எதிர்த்து நிற்கும்? சர்வதேச நிதி உதவியில் என்பது சதவீதம் டுவாலியர் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்துகளாக மாறின. மிகுதியை ஐ.எம்.எப்.பின் சலுகைக் குறைப்பு திட்டம் செய்து முடித்தது. ஐ.எம்.எப். நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கட்டப்பட்ட சேரி வீடுகள் இடிந்து விழுந்து லட்சக்கணக்கான மக்களை பலி எடுத்துள்ளன. சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஹைத்தி முழுவதற்கும் இரண்டே இரண்டு தீயணைப்பு நிலையங்கள் மட்டுமே இருந்தன. குடிநீர் விநியோகமோ, வைத்தியசாலைகளோ இன்றி அவதிப்பட்ட மக்களின் துன்பத்தை நிலநடுக்கம் முடித்து வைத்தது.

தசாப்த கால சர்வாதிகார ஆட்சியின் முடிவில் வந்த 1991 பொதுத் தேர்தலில் மக்கள் அரிஸ்டீட்டை தெரிவு செய்தார்கள். அவர் ஐ.எம்.எப். நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, அமெரிக்க அரசு படை அனுப்பி ஆட்சியைக் கவிழ்த்தது. (அப்போது மட்டும் என்ன விரைவாக படைகள் வந்தன?) 2004 ம் ஆண்டு, அரிஸ்டீட்டை மக்கள் மீண்டும் ஜனாதிபதியாக்கினார்கள். இம்முறை உங்கள் படைகள் தலையிட்டு அவரை கடத்திச் சென்று விட்டன. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ், இராணுவ நடவடிக்கையை நியாயப் படுத்தி என்னனவோ எல்லாம் பேசினார். எமது நாட்டின் ஜனநாயகத்தை முளையிலேயே கிள்ளி எறிந்த அமெரிக்கர்களின் கடமை உணர்ச்சி எம்மை புல்லரிக்க வைத்தது.

இராணுவத் தலையீடு என்று வந்து விட்டால் மட்டும் உங்கள் படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்திறங்கி விட்டன. அப்போது மட்டும் உங்கள் அரசின் விரைவான நடவடிக்கை எம்மை வியப்பில் ஆழ்த்தின. ஆனால் இப்போது உங்கள் பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார்: "தவிர்க்கவியலாத காரணங்களால் மீட்புப் பணிகள் தாமதமடைகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் கடற்படையின் நடமாடும் மருத்துவமனை அனுப்பி வைக்கப்படும்." கடவுளே! அமெரிக்க மருந்துகள் வரும் வரையில் ஹைத்திய மக்கள் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்க வேண்டும்.

ஒபாமா அவர்களே! ஹைத்தி உலகில் மிகவும் வறிய நாடு என்று உங்கள் ஊடகங்கள் எம் மேல் அனுதாபப்படுகின்றன. அவர்களின் அனுதாபத்திற்கு நன்றி கூறும் தருணத்தில், அறியாமையையும் இடித்துக் கூற வேண்டியுள்ளது. ஒரு காலத்தில் எமது தாயகமான ஹைத்தி செல்வந்த நாடாக இருந்தது. 18 ம் நூற்றாண்டு பிரெஞ்சு சிந்தனாவாதி வோல்டேயர் ஹைத்தியின் செல்வம், "கறுப்புத் தங்கம்" என அழைக்கப்படும் அடிமைகள் தான் என்றார்.

அந்தோ பரிதாபம்! ஹைத்தியின் கறுப்பின அடிமைகள் பிரெஞ்சு காலனிய எஜமானுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். அடிமைகளின் புரட்சி வென்றது. நவீன உலகின் முதலாவது அடிமைகளின் குடியரசு உருவானது. ஏதோ காரணத்தால், ஹைத்தியை விட்டோடிய பிரெஞ்சுப் படைகள் திரும்பி வரவேயில்லை. ஆனால் அதற்காக அவர்கள் ஹைத்தியின் சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தமா? இல்லை. இல்லவே இல்லை. 1825 முதல் 1947 வரை, ஹைத்தி பிரான்சுக்கு நஷ்டஈடு கட்டுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டது. எதற்காக அந்த நஷ்டஈடு? அடிமைகள் கிளர்ச்சி செய்து விடுதலை ஆனதால், எஜமானர்களுக்கு பெருந்தொகை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். அந்த நஷ்டத்தை அடிமைகள் சந்ததி சந்ததியாக அடைத்து வர வேண்டுமாம்.

மனிதர்களை தனித்தனியாக அடிமைகளாக வைத்திருப்பதை விட, முழு தேசத்தையுமே அடிமையாக வைத்திருப்பது லாபகரமானது. இதைத் தான் பிரான்ஸின் "நவ-காலனித்துவம்" என்கிறார்களா? எமது உழைப்பில் பிரெஞ்சு மக்கள் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்களா? அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய அரசியல் அவ்வளவுதான். ஒரு வேளை எமது மக்களின் வறுமைக்கான காரணியை, 18 ம் நூற்றாண்டு காலனிய சரித்திரத்தில் தேட வேண்டுமா?

இப்படிக்கு,
ஒரு ஹைத்தி அகதி


Haiti needs a relief effort that doesn't continue oppression Carl Dix of the Revolutionary Communist Party says that US Haitian relations has influenced the way the relief efforts have unfolded in Haiti Is there

நன்றி:கலையகம்

இஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி

இலங்கையில் முதன்முதலாக இஸ்லாமிய மதம் அரேபிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப் பட்டது. அதே காலத்தில் இந்தியாவிலும் கேரளா கரையோரம் இஸ்லாம் என்ற புதிய மதத்தை கண்டுகொண்டது. உண்மையில் இஸ்லாமிய மதத்தின் தோற்றத்திற்கு முன்னரே, அரேபிய வணிகர்கள் இந்திய உப கண்டத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். பண்டைய காலத்தில் வருடக்கணக்கான கடல் போக்குவரத்தின் ஆயாசம் காரணமாக, புலம்பெயர்ந்த நாட்டில் தங்கி விட்டவர்களும் உண்டு. இவையெல்லாம் இந்திய உபகண்டத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சங்கதிகள்.

நெடுந்தீவு, மன்னார் கரையோரங்களில் பிரமாண்டமாக நிற்கும் பவோபப் மரங்களை இன்றும் காணலாம். கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட ஆலமர இனத்தை சேர்ந்த பவோபப் மரங்கள், அரேபிய வணிகர்களால் கொண்டு வரப்பட்டன. பல்லாண்டுகள் நிலைத்து நிற்கும் மரங்களை, இஸ்லாமுக்கு முந்திய அரேபியர்கள் தெய்வமாக வழிபட்டனர். இந்தக் காலத்தில் மத நம்பிக்கையாளர்கள் சாமிப் படங்களை புலம்பெயர்ந்த நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். அது போல, பண்டைய அரேபியர்கள் பவோபப் மரங்களை இலங்கையில் நட்டு வணங்கியிருக்க வாய்ப்புண்டு. இவர்களை விட, முத்துக் குளிக்கும் அரேபிய சுழியோடிகள் ஆயிரம் ஆண்டுகளாக மரிச்சுக்கட்டி (மன்னார்) வந்து சென்றனர். ஈழத்து முத்துக்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி இருந்த காலம் அது. பண்டைய துறைமுகமான சிலாபத்துறையில் இருந்து முத்துகள் மூட்டை மூட்டையாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகின. நிச்சயமாக, ஏற்றுமதி வாணிபத்திலும் அரேபியர் ஆதிக்கம் செலுத்தினார்கள். 16 ம் நூற்றாண்டில், போர்த்துக்கேயர் வரும் வரையில் அரேபிய ஏகபோகம் தொடர்ந்தது.

இந்த விபரங்களை எல்லாம் இங்கே கொடுக்கக் காரணம், எவ்வாறு பக்கச் சார்பான கருத்துகள் தகவல் சுதந்திரத்தை தடுக்கின்றன என்பதைக் காட்டத்தான். அரேபியர் என்ற இனத்தை, இஸ்லாம் என்ற மதத்தின் பிரிக்கவியலாத அம்சமாக கருதப்படுகின்றது. மேற்குலகில் இருந்து கிழக்குலகம் வரையில், இந்த கருத்தியல் பொதுவானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஈழத்துடன் வர்த்தக உறவு கொண்டிருந்த அரேபியர்கள், ஓமான் அல்லது யேமன் நாட்டை சேர்ந்தவர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமியராக இருந்திருக்க வாய்ப்பில்லை. கி.பி. 500 ம் ஆண்டுக்கு பின்னர் தோன்றிய இஸ்லாம் என்ற புதிய மதம், அரேபிய தீபகற்பம் முழுவதும் பரவ நீண்ட காலம் எடுத்தது. லெபனான் முதல் ஓமான் வரையிலான நிலப்பரப்பு சுமார் இரண்டாயிரம் கி.மி. தூரம் கொண்டது. ஒட்டகத்தின் துணை கொண்டு கடப்பதற்கு மாதக்கணக்காகும். இந்தியாவை போல, அரேபிய தீபகற்பமும் ஒரு துணைக் கண்டம்.

துபாய், அபுதாபி ஆகிய வளைகுடா செல்வந்த நாடுகள், தமது கலாச்சார பாரம்பரியத்தை அருங்காட்சியகத்தில் போற்றிப் பாதுகாக்கின்றனர். அங்கே அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடி மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் எனப் பார்க்க முடியும். அதே கலாச்சாரத்துடன், அரபு மொழியில் "பெதூயின்" என அழைக்கப்படும் நாடோடிகள் இன்று அருகி வரும் பழங்குடியினராவர். எந்தப் பயிரும் முளைக்காத கட்டாந்தரையில் (பாலைவனம் என்பதற்கு அரபியில் பல சொற்கள் உள்ளன) ஆடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை மட்டுமே வளர்க்க முடியும். பெதூயின்கள் ஒரு இனக்குழுச் சமுதாயம். அவர்களுக்கென்று ஒரு அரசனோ, தேசமோ கிடையாது. "எமக்கென்று ஒரு நாடு இல்லையே" என்று கவலையும் இல்லை. ஒவ்வொரு நாடோடிக் குழுவுக்கும் ஒரு மூத்தோர் தலைவராக இருப்பார். மூத்தோர் வாய் வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். எந்த இடத்தில் கூடாரம் அடிக்க வேண்டும்? எந்த தரை கால்நடைகளுக்கு உகந்தது? எங்கே நிலத்தடி நீர் உண்டு? இதையெல்லாம் குழுத் தலைவர் தீர்மானிப்பார்.

அரபு நாடோடிக் குழு (அல்லது குலம்) ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயருண்டு. அவர்களின் மூதாதையர் ஒருவரின் பெயரை தமது குழுவுக்கு சூட்டியிருப்பார்கள். அந்தக் குழுவின் உறுப்பினர் யாவரும், பொதுவான மூதாதையர் ஒருவரின் வம்சாவழி எனக் கூறிக் கொள்வார்கள். குலத் தலைவர் ஒரு பரம்பரைப் பதவி, அல்லது உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டிருப்பார். அவர்கள் தமது தலைவரை "ஷெரீப்" (பன்மை: அஷ்ரப்) என்று அழைத்தனர். பெதூயின் குழுக்கள் எந்த நகரத்தையும் கட்டவில்லை. எந்த சரித்திரத்தையும் எழுதி வைக்கவில்லை. அவர்களின் இலக்கியம் முழுவதும் கர்ண பரம்பரைக் கதைகளாகவும் செய்யுள்களாகவும் இருந்தன. அவையெல்லாம் பரம்பரையாக கடத்தப்படும் வாய்வழி இலக்கியங்கள். செய்யுள்கள் பெரும்பாலும் குலத் தலைவரின் வீர தீர பராக்கிரமங்களை பறைசாற்றின. இஸ்லாம் "அறியாமையின் காலகட்டம்" எனக் குறிப்பிடும் காலத்து அரபி செய்யுள்கள் பலவற்றில் காமரசம் ததும்பி வழிந்தன. இன்று சில அரபு புத்திஜீவிகள், அந்த செய்யுள்களை இஸ்லாமுக்கு முந்திய அரேபியரின் பாலியல் சுதந்திரத்திற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்.

அரபு பெதூயின் குலங்கள் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வது சர்வ சாதாரணம். கால்நடைகளை பிறிதொரு குலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையிட்டு செல்வார்கள். அல்லாதுவிடின் ஒரு கிணறு தமதே என்று ஆதிக்கத்தை நிலைநாட்ட பார்ப்பார்கள். இது போன்ற சம்பவங்கள் யுத்தங்களை தோற்றுவிக்கும். சாதாரண பெதூயின் இளைஞன் சிறு வயதில் இருந்தே யுத்தத்திற்கும், கடுமையான பாலைவன வாழ்க்கைக்கும் தன்னை தயார் படுத்திக் கொள்கிறான். பெதூயின்களின் போர்க்குனாம்சமும், நாடோடி வாழ்க்கை முறையும் பிற்காலத்தில் இஸ்லாமிய படையெடுப்புகளின் வெற்றிக்கு காரணமாகின. அப்போது கூட அவர்கள் தனித்தனி குலங்களாக தான் போரிட்டார்கள். அவர்களுக்கு உலகில் வேறெதையும் விட குலப்பெருமையே முக்கியமானது. உயிரை விட மானம் பெரிதென்று கருதுபவர்கள். ஒன்றுக்கொன்று ஜென்ம விரோதிகளான அரபு குழுக்களை இஸ்லாம் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ப்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை.

எந்த ஒரு அரேபியனும் தான் சார்ந்த குலத்தை விட்டு பிரிந்து செல்ல மாட்டான். அப்படி சென்றால், ஆளரவமற்ற பாலைவனப் பூமியில் தனித்து வாழ முடியாது. அரசாங்கமோ, வேறெந்த நிர்வாகமோ இல்லாத ஒரு சமூகத்தில், குல உறுப்பினர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள். இஸ்லாம் இந்த சவாலை செயலூக்கத்துடன் எதிர்கொண்டது. "உம்மா" என்ற அமைப்பை ஸ்தாபித்தது. ஒரு குலச் சமுதாயம் வழங்கிய பாதுகாப்பை உம்மா வழங்கியது. ஏற்கனவே இருந்த குலக் கட்டமைப்பை உடைத்து, முஸ்லீம் என்ற புதிய சமூகத்தினுள் உள்வாங்கியது. பெதூயின்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். தமது பிரதேசத்திற்குள் ஒரு அந்நியன் வந்தாலும், உபசரித்து வழி அனுப்பி வைப்பார்கள். தொடர்பூடகம் எதுவுமற்ற அன்றைய காலகட்டத்தில், அந்நிய விருந்தாளிகள் செய்தி பரிமாறும் தூதுவர்களாக விளங்கினர். புதிய மதமான இஸ்லாம், இந்த "ஊடகத்தை" திறமையாக கையாண்டது. "இஸ்லாம் என்ற புதிய மதம்" பற்றிய செய்தியை அரேபிய தீபகற்பம் முழுவதும் காவிச் சென்று பரப்பினார்கள்.

இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர், அரேபியர்கள் அனைவரும் நாகரீகமடையாத நாடோடிகளாக வாழ்ந்தனர் என்பது அறியாமை. யேமன் தேச அரேபியர்கள் மூவாயிரம் வருட நாகரீகத்தை கொண்டவர்கள். அணை கட்டி நீர்ப்பாசனம் செய்யுமளவிற்கு தொழிநுட்ப தேர்ச்சி பெற்றிருந்தனர். சிரியா அரேபியர்கள் கிறிஸ்தவ ராஜ்ஜியம் ஒன்றை ஸ்தாபித்திருந்தார்கள். மாளிகைகளில் வாழ்ந்த மேட்டுக்குடியினர் கிரேக்க மொழியில் அரசகருமமாற்றினர். செங்கடல் கரையோர ஜெத்தா போன்ற நகர மக்கள் விவசாயத்திலும், வணிகத்திலும் சிறந்து விளங்கினர். மெக்கா நகரில் முகமது தலைமையிலான சிறு குழு, இஸ்லாம் என்ற புதிய மதத்தை பிரச்சாரம் செய்தது. மாற்று உலகிற்காக போராடிக் கொண்டிருந்த முஸ்லிம்களை, அரேபியர்கள் தேடித்தேடி அழிக்கத் துடித்தார்கள்.

(தொடரும்)
நன்றி:கலையகம்

Friday, January 15, 2010

அமெரிக்காவில் அதிகரிக்கும் வெள்ளை நிற வெறி

அமெரிக்காவில் பகிரங்கமாக நாஸிஸ பிரச்சாரம் செய்யும், ஹிட்லர் துதி பாடும் வெள்ளை நிற வெறி அமைப்புகள் பெருகி வருகின்றன. அவற்றின் உறுப்பினர் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரிக்கின்றன. அண்மைய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட தீய விளைவு இது. கடந்த வருடம் மட்டும் பதிவு செய்யப்பட்ட இனவெறித் தாக்குதல்கள் முன்னெப்போதையும் விட அதிகம்.
வெள்ளை நிற வெறி அமைப்புகளினுள் ஊடுருவி படம் பிடித்த ஆவணப்படம். அல் ஜசீராவில் ஒளிபரப்பானது.



White Power USA

Video Report By Al Jazeera

Racially motivated threats against Obama rose to new heights in the first months of his presidency, with the US seeing nine high-profile race killings in 2009. Meanwhile white supremacist and neo-Nazi groups claim their membership is growing and that visits to their websites are increasing. Filmmakers Rick Rowley and Jacquie Soohen went inside the white nationalist movement to investigate.
நன்றி:கலையகம்