Thursday, March 11, 2010

இரண்டாவது ஈழப் போரின் நினைவுக் குறிப்புகள்



[இலங்கையில் இரண்டாவது ஈழப்போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது. சுவிஸ் "தமிழ் ஏடு" மாதப் பத்திரிகையில் "எடிட்டோர் பக்கம்" பகுதியில் பிரசுரமானது.]

இரண்டாவது தமிழீழ யுத்தம் என அழைக்கப்படும், இன்றைய "புலிகள் - ஸ்ரீ லங்கா இராணுவ யுத்தம்" 3 வது ஆண்டை நிறைவு செய்து, 4 வது ஆண்டுக்குள் பிரவேசிக்கின்றது. ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தில், இம் மூன்றாண்டு காலம் என்பது மிகச் சொற்பமே, எனச் சுலபமாக கூறிடலாம். பெருமளவு இழப்புகளையும், சிறிதளவு வெற்றிகளையும் சந்தித்து விட்ட இவ்விரு பக்க படைகளும், இதுவரை சாதித்தது என்று எதையும் கூறிக் கொள்ள முடியாத நிலை. சமாதான மூச்சிற்கு அவகாசம் எடுக்காது சமரைத் தொடர்வது பற்றி நாம் புரிதல் அவசியம். தம் இருத்தலுக்காகவோ, அன்றில் கௌரவ தடைக்கோ தயங்கி நிற்றல் பலர் அறியாதவொன்றல்ல.

இருப்பினும் மரணத்திற்குள்ளும், பட்டிநிக்குள்ளும் தமது வாழ்வை இழந்து விட்ட மக்களையிட்டு உணராதிருத்தலும் முடியாது. இன்றைய நிலையில், இழப்பதற்கு உயிரை விட ஏதுமற்ற நிலையில், மக்கள் வாழும் ஒரு தேசத்தில் சமதர்மம் பிறக்குமா? அல்லது தமிழீழம் பிறக்குமா? என்பதை ஆராயும் அளவிற்கு யாரும் வரவில்லை. 1990 ல் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் இருந்த நட்புறவு அறுந்து விட்ட தருணம். இந்த யுத்தத்தின் நன்மை,தீமைகளை பகுத்தாயும் முன்பே மக்கள் போர்ச் சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள்.

ஆரம்பத்தில் இராணுவத்தை முகாமுக்குள் முடக்கி விட்டு, முழுத் தமிழீழ பிரதேசங்களையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க புலிகள் எடுத்த முயற்சி. குறுகிய காலத்திற்குள் கிழக்கை மீட்டெடுத்த ஸ்ரீலங்கா இராணுவ நடவடிக்கை, போராளிகளை காடுறையும் கெரில்லாச் சமருக்கு தள்ளியது. சில மாதங்களுக்கு போர் ஓய்ந்த வேளை, வடக்கில் புலிகளின் ஆட்சி, கிழக்கில் இராணுவ ஆட்சி எனும் வரையறையை ஏற்படுத்தியது. யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதை விட, வவுனியா போன்ற எல்லைப்புறங்களை தக்க வைத்தலையே இராணுவம் விரும்பியது. ஒரு வகையில் இப்படி இருப்பதுவே தமக்கும் சிறந்தது, என இரு பக்கமும் கருதுவது போல தெரிந்தது.

யாழ் குடாநாட்டை சிங்கள முழுமையாக பார்த்தே ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. இடையில் இடம்பெற்ற வடமராட்சி தாக்குதலும் இந்திய தலையீட்டால் இடையில் நின்றது. கிழக்கில் மக்கள் தொகையில் சரிபாதிக்கு மேல் சிங்கள,முஸ்லிம் இனங்கள் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், அங்கு தனது காலைப் பலப்படுத்தவே இலங்கையரசு விரும்பியது. அது போல நூறு வீதம் தூய தமிழினத்தை (முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் பின்) கொண்ட வடபகுதியில் தமது நிரந்தர தளத்தை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் புலிகள் இறங்கினர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால செயற்பாடுகள், யாழ் குடாநாட்டுக்குள்ளே கருக்கொண்டதும், உருக் கொண்டதும், இவ்விடத்தே குறிப்பிடத் தக்கது. இதுவே "வட இலங்கைப் போராளிகள்" என உலக நாடுகள் அழைப்பதற்கு காரணமானது.

அப்பாவி தமிழ் மக்களின் வீடுகள் மீது, விமானக் குண்டுகளைப் பொழிவதால், இடம்பெயரும் மக்கள். போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையிலான நெருக்கம் விரிவடையும் என்பது இலங்கை இராணுவத்தின் கணக்கு. பெருமளவு இழப்புகளை சந்தித்த போதிலும், மக்கள் அரசின் மீது வெறுப்புக் கொண்டுள்ளனர். புலிகள் இவ் வெறுப்பை தமக்கான ஆதரவாக மாற்றி வருதையும் கண்கூடாக காணக் கூடியதாகவிருந்தது.

முன்பு போராட்டப் பாதையில் இருந்து வழி மாற்றி விரட்டப்பட்ட மாற்று இயக்கங்கள். தமது இருத்தலுக்காய் முன்பு இந்திய இராணுவம், தற்போது இலங்கை இராணுவம் என்று கொழு கொம்பாய் பற்றிக் கொண்டுள்ளனர். தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முயற்சிக்காத இவர்களது போக்கு. பழிவாங்கலை முதன்மைப் படுத்தல். அரசின் எடுபிடிகளாக செயற்படுதல். இவை யாவும் இவர்களையும் இராணுவ தாகம் கொண்ட குழுக்களாகவே இனங்காட்டுகின்றன. பலம் வாய்ந்த மாற்று அரசியல் இயக்கமாக தம்மை வளர்த்துக் கொள்ளாததும் இக் குழுக்களின் பலவீனமாகும்.

இப் போராட்ட வரலாற்றில் பல தலைமைகள் கொல்லப்பட்டதும், இம் மூன்றாண்டு காலகட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரச தரப்பில் பாதுகாப்பு அமைச்சர், வட பகுதி இராணுவ பொறுப்பதிகாரி, கடற்படைத் தளபதி, ஜனாதிபதி ஆகியோர் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் மத்திய குழு உறுப்பினர்களான செங்கதிர், சர்வதேச தொடர்பாளர் கிட்டு ஆகியோர் கொல்லப்பட்டனர். இதைத் தவிர முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை. அதை தொடர்ந்த விசாரணைகள் புலிகளை குற்றவாளிகளாக சுட்டி நின்றன. அது சர்வதேசத்தின் பார்வையை சிறு தீவின் பக்கம் திரும்பச் செய்தது.

போரின் அகோரத்திற்கு அப்பாவி மக்கள் முகம் கொடுப்பது ஒரு பக்கம். இவர்களும் எதிரிகளா? எனக் கேட்கும் வகையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் கிராமங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. வயோதிபர், பெண்கள், குழந்தைகள் என பாரபட்சம் பாராது, ஈவிரக்கமின்றி கொள்வதும் அவ்வப்போது நடந்துள்ளன. இவற்றை நியாயப்படுத்த யார் எத்தகைய காரணங்களைக் கூறிய போதிலும், இவை இனங்களுக்குள்ளே ஆறாத ரணங்களை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது.

இரு பக்கமும் இராணுவரீதியிலான பலப்பரீட்சையிலேயே நம்பிக்கையோடு தொடரும் வேளை, எதிர்காலம் குறித்த அச்சவுணர்வு பலரிடம் குடிகொண்டிருத்தல் இயல்பு. புலிகளும், இலங்கையரசும் சமரசத்திற்கு இடம் கொடாத நிலையில், இந்தியாவின் தலையீடு அடிக்கடி வலியுறுத்தப் பட்டது. ஆனால் ஏற்கனவே சூடு கண்ட இந்தியா, தனக்குள்ளே உள்ள முடிச்சுகள் இறுகிய நிலையில் மீண்டும் இலங்கைக் களத்தில் குதிக்கும் நிலையிலிருக்கவில்லை. அகதிகளை வைத்திருப்பதைக் கூட ஒரு சுமையாகவே, இந்திய துணைக்கண்டம் கருதுகின்றது. சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட மேற்குலக நாடுகளும் இந்தியாவை தாண்டி வர முடியாத நிலை. இந்நிலையில், முற்றிலும் தனிமைப் படுத்தப்பட்ட தீவாக காட்சி தரும் இலங்கை. எந்தவொரு தீர்வும் இராணுவ சக்திகளுக்குட்பட்டதாகவோ, அல்லது அவர்களின் பங்கேற்புடனோ அமையும் என அரசியல் அவதானிகள் கருதினார்கள்.

எது எப்படியிருப்பினும், சமாதானம் என்பது இன்னும் நீண்ட காலத்தின் பின்பே சாத்தியப் படக் கூடியது. நாட்டின் வட-கிழக்கு பகுதி மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கும் அளவு மோசமடைந்த நிலை. கிழக்கில் ஸ்ரீலங்கா படையினர் எதிரிகளை அளிப்பதை விட வயல்களை அழிப்பதே சிறந்தது எனக் கருதி செயற்பட்டனர். இயற்கையாகவே வறண்ட பிரதேசமான யாழ் குடாநாட்டை யுத்தம் பாலைவனமாக்கியது.

Saturday, March 6, 2010

பருவமடையாத பாலியல் தொழிலாளர்கள் (ஆவணப்படம்)

பருவமடையாத பாலியல் தொழிலாளர்கள் (ஆவணப்படம்)

சிங்கப்பூருக்கு அருகில் இருக்கும், இந்தோனேசியாவுக்கு சொந்தமான "Batam " தீவு விபச்சார விடுதிகளுக்கு பிரபலமானது. இங்கே வரும் பணக்கார காமுகர்களுக்கு உடல் இச்சைக்கு தீனியாக்கப் படும் பருவமடையாத இளம் நங்கைகளைப் பற்றிய ஆவணப்படம்.
பருவமடையாத பாலியல் தொழிலாளர்கள் (ஆவணப்படம்)

thanks:kalaiyakam

Tuesday, March 2, 2010

வறுமை ஒழிப்பு ஒரு வரலாற்றுக் கடமை

"ஒரு நாட்டில், மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகையின் வறுமையை போக்க முடியவில்லை என்றால், அந்த நாடு கடைப்பிடிக்கும் ஜனநாயகத்தால் பிரயோசனம் என்ன?" - நெல்சன் மண்டேலா

"உலகமயமாக்கல்" என்றால் என்ன? பணக்கார நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளில் சென்று முதலிடுவது ஒரு புறமிருக்க, ஏழை நாடுகளை சேர்ந்த மக்கள் பணக்கார நாடுகளுக்கு சென்று குடியேறுவது மறுபுறம் நடந்து கொண்டிருக்கும். இது எவ்வளவு தூரம் யதார்த்தமான கூற்று என்பதை, நாம் நாள் தோறும் கண்கூடாக காண்கிறோம். 21 ம் நூற்றாண்டின் பொருளாதாரக் கொள்கையாக, உலகமயமாக்கல் சக்தி வாய்ந்த பணக்கார நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று வரை சமூகத்தை பீடித்துள்ள ஏழ்மை என்ற நோயை தீர்க்கும் மருந்தாக பிரகடனப் படுத்தப் படுகின்றது. இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த உலக வர்த்தக நிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புகள் முடுக்கி விடப் படுகின்றன. உலகில் இன்று உலகமயமாக்கல் வலைக்குள் விழாத நாடுகள் எதுவும் இல்லை.

உலகில் ஏழை-பணக்கார நாடுகளுக்கு இடையிலான பிரிவினையானது, வடக்கு-தெற்கு பிரிவினையாக புரிந்து கொள்ளப்படுகின்றது. அனேகமாக எல்லா பணக்கார நாடுகளும் பூமியின் வட புலத்தில் அமைந்துள்ளதும், தென் புலத்தில் அமைந்துள்ள ஏழை நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் கசப்பான உண்மை. அவர்கள் எப்படி "பணக்கார நாடுகள்" ஆனார்கள்? மற்றவர்கள் எப்படி "ஏழை நாடுகள்" ஆக்கப்பட்டார்கள்? ஏழை நாடுகளில் வாழும் மூன்றில் இரண்டு உலக சனத்தொகை அவசியம் அறிந்திருக்க வேண்டிய உண்மை அது.

ஆதிகாலத்து மனிதன் குகைகளில் வாழ்ந்த போது, அந்த சுற்றாடலில் கிடைத்ததை உண்டு வாழ்ந்தான். கால்நடைகள் பராமரிப்பை அறிந்து கொண்ட போது நாடோடி கலாச்சாரம் ஆரம்பமாகியது. குறிப்பிட்ட இடத்தில் இயற்கை வளம் அருகிய போது, அது கிடைக்கக் கூடிய வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தார்கள். ஆகவே செல்வம் இருக்கும் இடம் தேடி மக்கள் குடிபெயர்வது நவீன காலத்திற்கே உரிய தோற்றப்பாடு அல்ல. ஒரு தேசத்தின் உள்ளேயே, கிராம மக்கள் வாய்ப்பு தேடி நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். துரித காதியில் வளர்ச்சியடையும் நகரங்களும், புறக்கணிக்கப்படும் கிராமங்களும், சமூக இடைவெளியை விரிவு படுத்துகின்றன.

உள்நாட்டில் இடம்பெயரும் மக்கள் திரளைப் போல, வசதியானவர்கள் வெளி நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். ஆனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வருபவர்களை, பணக்கார நாடுகள் எப்போதும் இருகரம் நீட்டி வரவேற்பதில்லை. தேவைப்படும் பொழுது பயன்படுத்தி விட்டு, அபரிதமாக தேங்கி விடும் தொழிலாளரை வெளியே தள்ளுகின்றன. மேலும் "ஏழைகளின் படையெடுப்பை" கண்டு அஞ்சி புதுப்புது சட்டங்களை போடுகின்றனர். யுத்த அகதிகளும் பொருளாதார அகதிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.

பத்து வருடங்களுக்கு முன்னர் கோபன்ஹெகன் நகரில் இடம்பெற்ற வறுமை ஒழிப்பு மகாநாடு, குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வறுமையை ஒழிப்பதில் பணக்கார நாடுகளின் கடமை வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் வறிய நாடுகள் மீது சுமத்தப்பட்ட கடன்சுமை குறையவில்லை. பணக்கார நாடுகள், வறுமை ஒழிப்பு திட்டம் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை முடுக்கி விடுகின்றன. "மூன்றாம் உலக நாடுகளுக்கான சமூக நலன்புரி திட்டம்" என்ற பதாகையின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி, தொண்டு நிறுவனங்களில் வேலை செய்யும் மேலைத்தேய முகாமையாளரின் சம்பளத்திற்கே போதாது. எது எப்படியிருப்பினும், பணக்கார நாடுகள் வறுமை ஒழிப்பில் தமது பங்கை மறுக்கவில்லை.

பணக்கார நாடுகள் தமது நாடுகளுக்குள் புக முனையும் ஏழை அகதிகளை, குடியேறிகளை தடுக்க முயல்கின்றன. மறு பக்கம் ஏழைப் பங்காளனாக காட்டிக் கொள்கின்றன. ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகள் யாவும், அவற்றை தம்மில் தங்கியிருக்க வைப்பதற்காகவே செய்யப்படுகின்றன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது நாட்டினுள் குடியேற விரும்புபவர்களை "பொருளாதார அகதிகள்" என குறிப்பிடுகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, மேற்கு ஐரோப்பியர்கள் பொருளாதார அகதிகளாக அமெரிக்க, அவுஸ்திரேலிய கண்டங்களுக்கு படையெடுத்தார்கள். தாயகத்தில் நிலவிய வறுமை அவர்களை புதிய உலகம் நோக்கி குடிபெயர தூண்டியது. இரண்டாம் உலகப்போர் வரை ஐரோப்பிய நாடுகளில் நிலவிய வறுமை, இன்றைய அபிவிருத்தியடையாத நாடுகளின் நிலையை ஒத்தது.

ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் பத்து வீதத்திற்கும் குறைவானோரே செல்வந்தர்களாக வாழ்ந்தார்கள். பெரும்பான்மை மக்கள் கொடிய வறுமைக்குள் உழன்றனர். ஐரோப்பிய வறிய மக்களின் எழுச்சி, பிரெஞ்சுப் புரட்சி போன்ற பல புரட்சிகளுக்கு வழி சமைத்தது. மேலும் பல எதிர்கால புரட்சிகளை தடுக்கும் நோக்கில், "நலன்புரி அரசு" உருவாக்கப்பட்டது. சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டது.

பசுபிக் சமுத்திரத்தில் உள்ள சிறு தீவுகள் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளின் காலடி பட்ட பின்னர் "நாகரீகமடைந்தன." தீவுவாசிகள் ஐரோப்பியரின் நவீன சாதனங்களை கண்டு வியப்புற்றனர். ஐரோப்பியரின் கடவுள் அவர்களுக்கு கப்பல்களையும், துப்பாக்கிகளையும், நவீன இயந்திரங்களையும் கொடுத்ததாக கருதினர். தாமும் ஐரோப்பியரின் மதத்தை தழுவினால் இவற்றைப் பெறலாம் எனக் கருதினர். ஆனால் ஆண்டுகள் பலவாகியும், "ஐரோப்பியக் கடவுள்" தமக்கு நவீன கருவிகளை கொடுக்காததையிட்டு விசனமுற்றனர். தற்போது இந்த மக்கள் கிறிஸ்தவ மத உட்பிரிவை உருவாக்கி ஐரோப்பிய எதிர்ப்பாளராக மாறியுள்ளனர்.

இன்று மூன்றாம் உலக நாட்டு மக்களின் மனநிலை மேற்குறிப்பிட்ட பசுபிக் தீவுவாசிகளின் மனநிலைக்கு ஒப்பானது. தன் பிள்ளை ஆங்கிலம் கற்றால் போதும், ஆங்கிலேயரைப் போல பணக்காரர் ஆகலாம் என பல பெற்றோர் நினைக்கின்றனர். சில நேரங்களில் அவர்களது கனவுகள் நிஜமாகின்றன. ஆனால் அதற்கு காரணம் ஐரோப்பியமயமாகிய (அல்லது ஆங்கிலமயமாகிய) வாழ்க்கைத் தரமல்ல. ஆங்கிலம் பேசும் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் மேன்நிலையில் உள்ளது. இந்த நாட்களில் தகமை சார்ந்த தொழிலாளரின் பற்றாக்குறையை, மூன்றாம் உலகில் இருந்து வரும் பட்டதாரிகளை கொண்டு நிரப்புகின்றனர்.

19 ம் நூற்றாண்டில் காலனிகளை ஐரோப்பியமயப்படுத்தும் முயற்சி நடைபெற்றது. ஸ்பானிய, பிரெஞ்சு, ஆங்கில, மொழிகளும், கலாச்சாரங்களும் பரப்பப்பட்டன. அங்கே ஏற்கனவே இருந்த பூர்வீக கலாச்சாரங்கள் நசுக்கப்பட்டன, அல்லது புறக்கணிக்கப்பட்டன. கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் பரப்பவும், கூடவே ஐரோப்பிய கலாச்சாரத்தை பரப்பவும் உதவின. கல்விக்கூடங்கள் ஐரோப்பிய கல்வி முறையை இறக்குமதி செய்தன. இவ்வாறே காலனிகளில் வாழ்ந்த மக்களின் மூளைக்குள் ஐரோப்பிய கலாச்சாரம் புகுத்தப்பட்டது. ஐரோப்பியமயப்பட்ட புதிய மத்தியதர வர்க்கம் தோன்றியது. அவர்களின் சேவைக்காக காலனிய அரசு அதிகபட்ச சம்பளத்தை வெகுமதியாக வழங்கியது. அதாவது, காலனியில் சுரண்டிய பணத்தில் ஒரு பங்கு அவர்களுக்கும் போய்ச் சேர்ந்தது.

ஐரோப்பிய காலனிகள் யாவும் ஏற்றுமதி-இறக்குமதி பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டிருந்தன. ஐரோப்பாவில் ஏற்கனவே வளர்ச்சியடைந்திருந்த தொழிற்துறைக்கு தேவையான மூலப்பொருட்களை தமது காலனிகளில் இருந்து பெற்றுக்கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட காலனிகளில் மக்களை அடிமைகளாக, அல்லது குறைந்த கூலிக்கு அமர்த்தி திருடப்பட்ட மூலப்பொருட்கள் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டன. அவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயத்த உடைகள் பின்னர் அதே மக்களுக்கு விற்கப்பட்டன. சுதந்திரமடைந்த முன்னாள் காலனிகள், தொழிலகங்களை நிறுவி முடிவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பின. ஆனால் அப்போதெல்லாம் (ஐரோப்பாவை வந்து சேரும் போது) "இறக்குமதி தீர்வை" விதிக்கப்பட்டது. அந்த வரியை செலுத்திய பின்னர் விற்கும் விலை மிக அதிகமாக இருக்கும்.

ஐரோப்பிய சந்தையில் விற்கப்படும் மூன்றாமுலக நாடுகளின் பாவனைப் பொருட்கள் பல ஐரோப்பிய நிறுவனங்களாலேயே சந்தைப் படுத்தப்படுகின்றன. இலங்கையில் வாங்கும் தேயிலையை பிரித்தானியக் கம்பனிகள் வாங்கி, பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகிக்கின்றன. பிரேசிலில் வாங்கும் காபியை சுவிஸ் கம்பனிகள், கவர்ச்சிகரமான போத்தல்களில் அடைத்து உலகம் முழுவதும் விற்கின்றன. அண்மைக் காலங்களில் இந்தியாவை சேர்ந்த பிரபல ஐ.டி. கம்பனிகள் சில ஐரோப்பாவில் முதலிட விரும்பின. ஆனால் அவை கூட்டு ஒப்பந்தத்திற்கு அணுகிய ஐரோப்பிய கம்பனிகள் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஐரோப்பிய கம்பனிகளின் பொருளாதார பலம் மிக அதிகமாக இருந்ததால், இந்திய கம்பனிகளை விலை கொடுத்து வாங்க மட்டுமே விரும்பின.

பிரேசிலில் இருந்து ஏற்றுமதியாகும் காபி, இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் தேயிலை, மத்திய அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதியாகும் வாழைப்பழம். இவையெல்லாம் ஐரோப்பாவிலோ, அல்லது அமெரிக்காவிலோ உற்பத்தியாவதில்லை. ஆனால் அமெரிக்க-ஐரோப்பிய கம்பெனிகளே மேற்படி உணவுப் பொருட்களை சந்தைப் படுத்துகின்றன. பெரும் மூலதனத்துடன் நடத்தப்படும் மேற்குலக பன்னாட்டுக் கம்பனிகள் ஆதிக்கம் செலுத்தும் உலக சந்தையை மாற்றுவது அவ்வளவு இலகு அல்ல. இவை மூலப்பொருட்களை வழங்கும் மூன்றாம் உலக நாடுகள், உலக சந்தைக்கு வர விடாமல் தடுக்கின்றன. இத்தகைய நியாயமற்ற வர்த்தகத்தை நிரந்தரமாக உறுதி செய்ய, GATT அமைப்பு உருவாக்கப்பட்டது.
thanks:kalaiyakam