Monday, November 30, 2009

True freindship for ever.

Monday, November 23, 2009

ஸ்பெக்ட்ரம் – தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்

கிணற்றில் போடப்பட்டக் கல்லைப் போல் கிடந்த அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இந்தியாவெங்கிலுமான தொலைபேசி சேவை 122 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட உரிமக் கட்டணத்தின்படி, 2008-இல் இந்த 122 மண்டலங்களும் முதலில் வருபவருக்கு முதலில் உரிமம் என்ற அடிப்படையில் 9 தனியார் நிறுவனங்களுக்கு (அந்நிய முதலீடும் இதில் உண்டு) விற்கப்பட்டுள்ளன.

ஒரு பொருள் 2001-இல் என்ன விலைக்கு விற்கப்பட்டதோ, அதே விலைக்கு 2008-இலும் விற்பதற்கு சந்தைப் பொருளாதாரம் இடம் தராது என்பது பாமரனுக்கும் தெரியும். ஆனால், சந்தையில் கிராக்கி அதிகமுள்ள இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வரிசையின் உரிமக் கட்டணமோ, 2008-இல் நிலவிய சந்தை மதிப்புக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படாமல், 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின்படி விற்கப்பட்டுள்ளது. சந்தைப் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மன்மோகன் சிங் அரசு, இந்தத் தவறை அறியாமலா செய்திருக்கும்?

அலைக்கற்றை வரிசைகளைப் பெற்ற ஒன்பது தனியார் நிறுவனங்களுமே இந்தப் பொன்னான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டன. 13 மண்டலங்களை 1,537 கோடி ரூபாய்க்குப் பெற்ற “ஸ்வான்” என்ற நிறுவனம், அதில் 45 சதவீதத்தை மட்டும் 4,200 கோடி ரூபாய்க்கு “எடில்சலாட்” என்ற நிறுவனத்துக்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடைந்திருக்கிறது. 22 மண்டலங்களை 1,658 கோடி ரூபாய்க்குப் பெற்ற “யூனிடெக்” நிறுவனம், தனது 60 சதவீதப் பங்குகளை 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது. எனவே, அலைக்கற்றை விற்பனையில் ஊழலும், மோசடியும் நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க மூளையைக் கசக்கிப் புலனாய்வு நடத்த வேண்டிய அவசியமேயில்லை. தனியார்மயம் என்பதே சட்டப்படி நடக்கும் கொள்ளைதான் என்பதற்கு இந்த ஊழல் விவகாரம் இன்னுமொரு சான்றாய் அமைந்திருக்கிறது.

இந்த விற்பனையில் கிடைத்த இலஞ்சப் பணத்தை வாரியிறைத்துத்தான் தி.மு.க.-காங்கிரசு கூட்டணி, அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்பாராத வெற்றியை அடைந்தது என்பது ஊரறிந்த உண்மை. எனவே, காங்கிரசும் இந்தக் கொள்ளையில் பலன் அடைந்திருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. ஆனால், கூட்டணியில் நிலவும் முட்டல் – மோதலின் காரணமாக, இந்த ஊழலின் முழுப் பொறுப்பையும் தி.மு.க.வைச் சேர்ந்த ராசாவின் தலையில் சுமத்திவிட முயலுகிறது, களவாணி காங்கிரசு. காங்கிரசுன் இந்த நரித்தனத்திற்கு எதிர்க்கட்சிகளும் தேசியப் பத்திரிகைகளும் முட்டுக் கொடுக்கின்றன.

ராசா தொடர்புடைய இந்த ஊழல் பத்திரிகைகளில் அலசப்பட்ட அளவிற்கு, கடந்த அக்டோபர் மாதம் அம்பலமான வேறு இரண்டு ஊழல்கள் குறித்து விரிவாக அலசப்படவில்லை. ஜார்கண்ட் மாநில சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மதுகோடா, பா.ஜ.க.வின் தயவில் அமைச்சராகி, பின்னர் காங்கிரசின் தயவில் அம்மாநில முதல்வராகி, ஆகஸ்டு 2006 முதல் ஜூன் 2008 முடிய ஆட்சி நடத்தினார். அவர் எம்.எல்.ஏ. ஆனபொழுது 40 இலட்சமாக இருந்த அவரது சொத்து மதிப்பு, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்ட சமயத்தில் 400 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தாதுப்பொருள் சுரங்கங்களைத் தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பட்டா போட்டுக் கொடுத்ததில் நடந்த முறைகேடுகள் காரணமாகத்தான் அவரது சொத்து மதிப்பு 1000 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த இலஞ்சப் பணத்தைக் கொண்டு, அவர் வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்து இப்பொழுது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய அரசுக்குச் சொந்தமான ஹைட்ரோகார்பன் இயக்குநரகத்தின் தலைவரான வீ.கே.சிபலின் மகளுக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி மும்பய் நகரில் மிக நவீனமான வீடொன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். கோதாவரி படுகையில் கிடைக்கும் எரிவாயுவைப் பகிர்ந்து கொள்வதில் அம்பானி சகோதரர்களுக்கு இடையே நடந்து வரும் தகராறில், முகேஷ் அம்பானிக்கு சாதகமாக வீ.கே.சிபல் நடந்து வருவதற்காகக் கொடுக்கப்பட்ட சிறு அன்பளிப்புதான் இந்த வீடு. இந்த அன்பளிப்பு பற்றி இப்பொழுது மையப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

தனித்தனியாகத் தெரியும் இந்த மூன்று ஊழல்களுக்கும் இடையே இருக்கும் பொதுவான அம்சம் தனியார்மயம். தனியார்மயத்தின் பின், பொதுச் சொத்துக்களை விற்பதற்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஊழலும் மோசடிகளும் நடந்திருப்பதற்குப் பல ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த மோசடிகள் மூலம் கிடைத்த எலும்புத் துண்டுகளைப் பொறுக்கிக் கொண்ட அதிகாரிகளும், ஓட்டுக்கட்சிகளும் அம்பலமான அளவிற்கு, கறித்துண்டு முழுவதையும் விழுங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி அடக்கியே வாசிக்கப்படுகின்றன. எனவே, ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், அதிகாரிகளையும் அமைச்சர்களையும் தண்டிக்கக் கோரினால் மட்டும் போதாது; ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் தனியார்மயத்தையும் ஒழிப்பதற்குப் போராட வேண்டும்.

- புதிய ஜனநாயகம், நவம்பர்’ 2009

நன்றி:வினவு

நம் சொந்தம் விவசாயி


ஊருக்கெல்லாம் சோத்தை போட்டுவிட்டு
அடுத்த வேளை சோத்துக்கே வழியில்லாமல்
தவிக்கும் விவசாயிகள்,
மகேஸ்முத்தையா.

Sunday, November 22, 2009

விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சார்பில் 16 நாடுகளில் 27-ந்தேதி மாவீரர் தின நிகழ்ச்சி



http://photos1.hi5.com/0065/387/580/loN61v387580-02.jpg


சென்னை, நவ. 22-

விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் ஆண்டு தோறும் நவம்பர் 27-ந்தேதி மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இலங்கையில் போர் மேகம் சூழ்ந்த நிலையிலும் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மாவீரர் தின உரை நிகழ்த்தினார்.

இந்த உரையின்போது அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். இதனால் இலங்கை மட்டு மல்ல உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் இந்த உரையை கேட்க ஆவலுடன் காத்திருப்பார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு சிங்கள ராணுவம் பொழிந்த விஷ குண்டு மழையில் லட்சக் கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர்.

இதில் பிரபாகரன், மற்றும் அவரது குடும்பத்தினர், முக்கிய தலைவர்கள் பலியாகி விட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது. பிரபாகரன் இறந்து விட்டதாகக் கூறி வீடியோ படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்தியா இலங்கையிடம் பிரபாகரன் இறப்பு சான்றிதழை கேட்டு வருகிறது. ஆனால் இதுவரை இலங்கை அந்த சான்றிதழை தராமல் இழுத்தடித்து வருகிறது.

இலங்கை அரசு பிரபா கரன் இறந்து விட்டதாக கூறுவதை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. அவர் உயிருடன் இருப்பதாகவே கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைச் செய லகம் 2 வாரத்திற்கு முன்பு ஒரு பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், நவம்பர் 27-நதேதி வழக்கம்போல் மாவீரர் தின கொள்கை விளக்க உரை வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் மாவீரர் தின உரையை நிகழ்த்தப்போகும் தலைவர் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இலங்கை அரசும் விடுதலைப்புலிகளின் மாவீரர் தின உரையில் இடம் பெறப்போகும் விஷயங்கள் என்ன, என்பதை எதிர் நோக்கி காத்திருக்கிறது.

மேலும், வன்னி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ராணுவ பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது. கடற்கரை ஓரங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஒருவேளை கடல் வழியாக விடுதலைப்புலிகள் வந்து திடீர் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதியும் சிங்களர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையே விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சார்பில் 16-க்கும் மேற்பட்ட நாடுகளில் மாவீரர் தின நிகழ்ச்சிகள் நடக்கிறது பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜெர்மனி, நார்வே, பெல்ஜியம், சுவீடன், கனடா, இத்தாலி, டோகா, பின்லாந்து, அயர்லாந்து, தாய்லாந்து உள்பட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் நடத்தப்படுகிறது.

இவ்விழாவின் போது விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் சமீபத்தில் தமிழ் ஈழம் பற்றிய தமிழர் நமக்கு, காலம் தந்த தலைவர், புயலுக்கு பின் மலரும் நம் தேசம், தமிழ்நாதத்தில் தமிழீழ கானங்கள் ஆகிய 4 இசை ஆல்பங்கள் வெளியிடப்படுகிறது.

http://www.maalaimalar.com/2009/11/22144018/CNI03902201109.html
thanks:otumnadhi

Friday, November 20, 2009

புரட்சியாளர் பிரபாகரனை வணிகச்சின்னமாக்காதீர்..


வாழ்நாள் புரட்சியாளர் சேகுவேராவின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரின் மூத்த மகள் அலைடா, கியுபாவில் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

“என் தந்தையின் பெயரையும் படத்தையும் வணிக முத்திரையாக்காதீர்கள். பிரிட்டானிகா வோட்காவிற்கும் ஃபிஸ்ஸி பானத்திற்கும் ஸ்விஸ் கைபேசிக்கும் என் தந்தையின் படத்தை விளம்பரச்சின்னமாகப் பயன்படுத்துவது அவரை அவமதிக்கும் செயலாகும்.

“நிகரமைப் பொருளியலுக்காகப் போராடியவரை மிகைத்துய்ப்பு வாதத்திற்குப் பயன்படுத்துவது முரண்பட்ட செயல். எங்களுக்குப்பணம் தேவை இல்லை. மரியாதைதான் தேவை”.

சேகுவேராவின் புகழ், வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவதை அருவருத்தார் அவர் மகள்.

காமத்திற்கு கண் இல்லை என்பதுபோல் முதலாளியப் பண மோகத்திற்கு முறை கிடையாது. சேகுவேராவை வேட்டையாடியது முதலாளியம்; அவரது புகழ், அவரது பெயர் உலகெங்குமுள்ள இளைஞர்களின் உணர்வுகளில் மின்சாரம் பாய்ச்சுகிறது என்பதைத் தெரிந்துகொண்டபின், அவரைப் பண்டங்களின் விற்பனைச் சின்னமாக மாற்றுகிறது அதே முதலாளியம்.

கொடிய நஞ்சாக சித்தரித்த ஒருவரையே, கொன்றபின் சிறந்த குளிர்பானமாக சித்தரிக்கிறது. இந்த இரண்டுவகை ஹிμ�ம்முறையிலும் தனது லாபம் தான் முதலாளியத்திற்கு முதன்மை நோக்கு.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை வணிகச் சின்னமாகத் தமிழ் நாட்டு இதழ்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அட்டையில் அவர் படம் போட்டால் அமோக விற்பனை. அவர் பற்றிக்கட்டுரை வெளியிட்டால் கடைகளில் இதழ்கள் தீர்ந்து விடுகின்றன.

இந்தப்பின்னணியில் தான் அவர் பற்றிக் கட்டுக்கதைகள் எழுதத் தொடங்கினர் எழுத்தாளர்களும் உளவுத்துறை ஒட்டுண்ணிகளும்.

வாரம் ஒருமுறை வன்னிக்குச் சென்று பிரபாகரனுடன் பிஸ்கட்டும் தேநீரும் அருந்திவிட்டுத் திரும்பியவர்கள் போன்ற தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இவர்களைக் கேட்டுக்கொண்டு தான் பிரபாகரன் அரசியல் உத்திகள் வகுத்தது போலவும், பிரபாகரன் சொற்படிதான் இவர்கள் இங்கே இயங்கியது போலவும் எழுதிக் கவர்ச்சி காட்டுகிறார்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டு, வெளிநாட்டுக்கு ஓடிப்போய்; சிங்கள அரசுக்குக் கைக் கூலிகளாக செயல்படும் சிலர், பிரபாகரன் பற்றி புத்தகம் போடுகிறார்கள்; ஏடுகளில் கட்டுரைகள் எழுதுகிறார்கள்.இலக்கியக் குத்தகைக்காரர்கள் நடத்தும் ஏடுகள் சில, புலம்பெயர்ந்த சிங்களக் கைக் கூலிகளின் புலம்பல்களை “நடுநிலையோடு” வெளியிடுகின்றன.

விடுதலைப்புலிகளை ஆதரிப்பது போல் தொடங்கி பின்னர் தூற்றி எழுதுவது அல்லது கழிவிரக்கம் காட்டுவதுபோல் நடித்துப் பின்னர் கடிப்பது அவர்கள் உத்தி. எல்லாம் சந்தை மயம்! சிங்களத்தின் சின்னத் தூதுவர் அம்சாவிடம் ஊதியம் பெற்ற ஊடகத்துறையினர் பற்றி செய்திகள் அம்பலமாகி வருகின்றன. புலனாய்வு வாரமிருமுறை ஏடொன்றின் செய்தி ஆசிரியர் ஒருவர் கைக்கூலி வாங்கியே கோடீஸ்வரன் ஆகிவிட்டாராம். அதனால் அந்த ஏடும் அவரை நீக்கிவிட்டதாம்.

இன்னொரு பக்க வேதனை, தமிழக அரசியலில் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை வணிகச் சின்னமாகப் பயன்படுத்துவது இன்னொருபக்க வேதனையாகும். பிரபாகரன் சொல்லியதால்தான் மக்களவைத் தேர்தலில் காங்கிரசை ஆதரித்தேன் என்று ஒரு தலைவர் கூறுகிறார். இன்னொருவரோ பிரபாகரன் கட்டளைக்கேற்ப என் அரசியலை வகுத்துக்கொண்டேன் என்கிறார்.

தமிழ்நாட்டில் அவரவர் எடுக்கும் அரசியல் சந்தர்ப்பவாத நிலைபாடுகளை ஞாயப்படுத்த பிரபாகரன் பெயரைப் பயன்படுத்துவதும், அவர் சொல்லித்தான் செய்தேன் என்பதும் அவர் பெயருக்குக் களங்கம் சேர்ப்பதாகும்.

பிரபாகரன் நிகழ்காலத்தின் ஈடு இணையற்ற விடுதலைப் புரட்சியாளர். விடுதலை இயக்கத் தலைவர். போர் முறையில் தேர்ந்த திறனும், அரசியலில் ஆழ்ந்த அறிவும் பெற்றவர். அவருடைய ஆற்றல், அர்ப்பணிப்பு ஆகியவை தமிழ்நாட்டு மக்களிடையே அவர்க்குப் பெரும் புகழை ஈட்டித்தந்துள்ளன. தமிழகத் தமிழர்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய கல்வி நிறைய இருக்கிறது. தமிழ்த் தேச விடுதலைக்கு, தமிழ்மொழி விடுதலைக்கு, சாதி ஒழிப்பிற்கு, பெண் விடுதலைக்கு, சமத்துவப் பொருளியல் வளர்ச்சிக்கு என அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம், ஏராளம்.

அதேபோல் போலிப்பட்டங்களைப் புனைந்து கொள்ளாத அவரது எளிமையும் தன்னடக்கமும் தமிழ்நாட்டிற்குத் தேவையான பாடங்கள். குடும்பப் பதவி அரசியல் கொடி கட்டிப் பறக்கும் இந்நாட்டில், குடும்பத்தையே போர்க்களத்தில் போராளிகளாக இறக்கிவிட்ட அவரது ஈகம் நாம் பின்பற்ற வேண்டிய அரியசெயல்.

“கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை”

என்ற வள்ளுவப் பெருந் தகையின் போர் வரிகளுக்கேற்ப புலிப்படையை மட்டுமின்றி தம் குடும்பத்தையே பகைப்படையை எதிர்த்துக் போர்க்களத்தில் நிறுத்தியவர் பிரபாகரன்.

இத்தனைச் சிறப்புகள் கொண்ட அரிய தலைமை தமிழினத்தில் தோன்றியதால் தமிழினத்தின் பெருமை உலகு தழுவி விரிந்தது. ஆனால் அத்தகு தலைமையைத் தமிழ்நாட்டில் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அவரை மலினப்படுத்துதல் கூடாது. தமிழின உணர்வாளர்களில் சிலர் ரசனை உணர்வுகளில் மூழ்கி விடுகின்றனர். வீரத்தின் வர்ணனையையும் ரசிப்பது, சோகத்தின் வர்ணனையையும் ரசிப்பது என்ற நிலையில் இருக்கின்றனர்.

“பிரபாகரனோடு பேசி விட்டு வந்தேன்”

“பிரபாகரன் எனக்குக் கட்டளை இட்டார்”

என்று ஒருவர் சொன்னால் அச் சொற்களில் மயங்கிவிடுகின்றனர்.

யாராக இருந்தாலும் பின்வருமாறு கேளுங்கள்:

“பிரபாகரன் பெருமைகளைப் பேசுங்கள்; விடுதலைப்புலிகளின் சாதனைகளைப் போற்றுங்கள். ஆனால் ஈழ விடுதலைக்கும், தமிழ்நாட்டு விடுதலைக்கும் நீங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள்? உங்கள் வேலைத்திட்டம் என்ன? உங்கள் புரட்சிப்பணி என்ன?”

இப்படிப்பட்ட வினாக்கள் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியலை செம்மைப்படுத்த உதவும். மேனாமினுக்கி அரசியலைத் தடுக்கும்.



நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்

நன்றி:மின்னஞ்சல் அனுப்பியஎன் தோழிக்கு.

Thursday, November 19, 2009

சரத் பொன்சேகா: வருங்கால சர்வாதிகாரி உருவாகிறார்


தமிழகத் தமிழ் தேசிய அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று இகழ்ந்தவர், இன்று தானே கோமாளியாகி நிற்கிறார். இலங்கையில் புலிகளை அழிக்கும் இறுதிப்போரை தொடங்கி, கூடவே கணிசமான தமிழ் மக்களை அழித்த, சரத் பொன்சேகா என்ற முன்னாள் இராணுவத் தளபதியை தான் சொல்கிறேன். உலகம் எப்படி கணித்திருந்தாலும், சிங்கள மக்கள் சரத் பொன்சேகாவை ஒரு மாபெரும் வீரனாக பார்த்தார்கள். யாரும் வெல்ல முடியாத போரில் தமிழரை அடக்கி வெற்றிவாகை சூடிய மகிந்த மகாராஜாவின், தானைப் படைத்தளபதியின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவி இருந்தது. நாடெங்கும் முக்கிய நகரங்களில் தென்னை மர உயர கட்-அவுட்களில் சரத், மகிந்தவுடன் சிரித்துக் கொண்டிருந்தார். ரஜனி ரசிகர்கள் போல பாலபிஷேகம் செய்யாதது மட்டுமே பாக்கி. அநேகமான கட்-அவுட்கள், போஸ்டர்களில் இவர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷவும் மும்மூர்த்திகளாக காணப்பட்டனர். சரத் பொன்சேகா தளபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு, ராஜபக்ஷ சகோதரர்களுக்கு எதிராக அரசியலில் குதிப்பதாக அறிவித்தார். உடனே நாடெங்கிலும் இருந்த போஸ்டர்களில் சரத் பொன்சேகாவின் படம் கிழித்தெறியப்பட்டது. கதாநாயகன் நகைச்சுவை நடிகராக மாறிய கதை இது.

புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகியதைப் போல, ராஜபக்ஷ அரச இயந்திரத்தில் இருந்து சரத் பொன்சேகா ராஜினாமா செய்ததும் பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்தது. பலர் வெளிப்படையாகவே அவரை தேசத்துரோகியாக வசை பாட ஆரம்பித்தனர். சிங்கள தேசியத்தின் காவலர்களாக தம்மை கருதிக் கொள்ளும் பிக்குமார் சங்கம் ஒன்றும், சரத் தனது முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என நிர்ப்பந்தித்தது. போர் முடிந்த பின்னர் சில காலமாகவே ஜனாதிபதிக்கும், இராணுவ தளபதிக்கும் இடையில் பிரச்சினை என்று அரசல்புரசலாக கதைகள் வந்தன. அப்போது இருவரும் "வதந்திகளை நம்ப வேண்டாம்" என கேட்டுக்கொண்டனர். "கிரீன் கார்ட்" வைத்திருந்த சரத், அமெரிக்கா பயணமான போது விரிசல் வெளித்தெரிய ஆரம்பித்தது. சரத் பொன்சேகாவின் இரண்டு மகள்மார் அமெரிக்காவில் வசிப்பதும், கிரீன் கார்ட் புதுப்பிக்கப்பட வேண்டியிருந்ததும் அவரது தனிப்பட்ட விஷயங்கள் தான். இருப்பினும் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் பற்றி துப்புத்துலக்கிக் கொண்டிருந்த அமெரிக்கா, சரத் பொன்சேகாவுடன் பேச வேண்டும் என கூட்டிச் சென்றது தேநீர் விருந்துக்காக என்று கருத முடியாது.

சரத் பொன்சேகாவுடன் என்ன பேசப்பட்டது என்பதைக் கூற அமெரிக்க அரசு மறுத்து விட்டது. கவனிக்கவும், போர்க்குற்றங்களில் நேரடியாக பங்கெடுத்த சரத் விசாரணைக்கு அழைத்து சென்றதாக தகவல் இல்லை. ஆனால் சரத் மீது நீதி விசாரணை வரும் என அஞ்சிய இலங்கை அரசு, இராஜ தந்திர அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது. இலங்கை அரசிற்கு சரத் மீதான தனிப்பட்ட அக்கறை என்று இதனைக் கொள்ள முடியாது. போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையில், சரத் அப்ரூவராக மாறி, ராஜபக்ஷ சகோதரர்களுக்கு எதிராக சாட்சியம் சொல்லலாம் என ஊடகங்கள் ஊகங்களை கிளப்பின. அமெரிக்காவில் புலம்பெயர் தமிழர் அமைப்பொன்று சரத் பொன்சேகாவை நீதிமன்றத்திற்கு இழுக்க காத்திருந்தது. சரத் விஜயம் செய்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் தான், அமெரிக்க இராஜாங்க அமைச்சின் இலங்கை பற்றிய அறிக்கை வெளியானது. அதில் நடந்து முடிந்த போரில் தாரளமாக மனித உரிமைகளை மீறியதாக இலங்கை அரசை (கூடவே புலிகளையும் தான்) கடுமையாக குற்றம் சுமத்தியிருந்தது.

அமெரிக்க அரசு, இலங்கை அரசை நீதி மன்றத்திற்கு இழுக்கவோ, விசாரணையில் சரத் பொன்சேகாவை ஆஜர் படுத்தவோ எண்ணியிருக்கவில்லை. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தான், ஐ.நா.சபையின் வருடாந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ள கோத்தபாய ராஜபக்ஷ நியூ யார்க் சென்றிருந்தார். அமெரிக்க அரசு நினைத்திருந்தால் பாதுகாப்பு அமைச்சரை அப்போதே கைது செய்திருக்க முடியும். சரத் பொன்சேகாவை தூண்டிலில் மாட்டி, கோத்தபாயவை பிடிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. இதற்கிடையே எந்த விசாரணையும் நடக்காமல் சரத் நாடு திரும்பினார். வந்தவுடன் முதல் வேலையாக ஜனாதிபதியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். இராணுவ சீருடையை களைந்து, சிவில் உடையை மாட்டிக் கொண்டார். சரத் அரசியலுக்கு வருவது ஊர்ஜிதமான அந்தக் கணத்தில் இருந்து, ஊடகங்களுக்கு சரியான தீனி கிடைத்து விட்டது. வருங்கால ஜனாதிபதி சரத் பொன்சேகாவை வரவேற்கத் தொடங்கி விட்டன. ஆச்சரியப்படத் தக்கவாறு, சில தமிழ் ஊடகங்களும் இந்த கோரஸில் சேர்ந்து விட்டன. யு.என்.பி., மற்றும் பல சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுடன் சரத் பொன்சேகா ஜனாதிபதியாவார் என விகடன் குழுமம் ஆரூடம் கூறியது. இலங்கைக்கு வெளியேயுள்ள "தமிழ் தேசிய" ஊடகங்களின் செய்தி கூறல், சரத் பொன்சேகாவின் வெற்றியை எதிர்பார்ப்பதாகவே அமைந்துள்ளது.

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தற்போது பொதுவான நிலைப்பாட்டில் உள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்ஷவும், சரத் பொன்சேகாவும் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஒன்று தான். எரியும் கொள்ளியில் எது நல்ல கொள்ளி என கேட்பது போல, இருவரையும் தமிழரை அழிக்கவும் தயங்காத பேரினவாதிகளாகவே பார்க்கின்றனர். வன்னிப் போரில் கொல்லப்பட்ட மக்களும், முகாம்களில் அகதிகளாக வாழும் எஞ்சிய மக்களும் வட-கிழக்கு மாகாணங்களில் உறவினர்களை கொண்டுள்ளனர். அன்புக்குரியவரின் இழப்பு, அதனால் ஏற்படும் அரசின் மேலான வெறுப்பு என்பன எதிர்பார்க்கக் கூடியதே. போர் ஏற்படுத்திய வடுக்களால் சிங்கள ஆட்சியாளர் மீது வன்மம் கொண்ட மக்கள் இனியும் இருப்பர். அதனால் தான் ராஜபக்ஷ, பொன்சேகாவிற்கு இடையிலான போட்டி, சிங்கள மக்களின் பிரச்சினையாக கருதப்படுகின்றது. இருப்பினும் வட-கிழக்கு நிலைமை கருப்பு-வெள்ளையாக பார்க்கக் கூடியவாறு இலகுவான ஒன்றல்ல. வடக்கில் ஈ.பி.டி.பி. ஆதரவாளர்கள், கிழக்கில் TVMP அல்லது கருணா ஆதரவாளர்கள், தேர்தலில் ராஜபக்ஷக்கு வாக்களிப்பார்கள். இதைவிட கணிசமான நடுநிலை வாக்காளர்கள் தேர்தலை பகிஷ்கரிக்கக் கூடும்.

ஆனால் சரத் பொன்சேகாவிற்கு தமிழர் வாக்குகள் விழுமா? சாத்தியமுண்டு. கொழும்பிலும், வடக்கிலும் வாழும் தமிழ் நடுத்தர வர்க்க வாக்காளர்கள், யு.என்.பி.யை "தமிழர் நண்பனாக" பார்க்கின்றனர். (யு.என்.பி.யும் அவ்வப்போது தமிழரை தாஜா பண்ண தயங்குவதில்லை.) அதே நேரம், தமிழ் தேசிய அரசியலை கொண்டவர்கள் இறுதிக்கட்டத்தில் யு.என்.பி.க்கு வாக்களிக்கலாம். சரத் பொன்சேகா அந்த வாக்கு வங்கியை பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதை சமீபத்திய மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன. மனோ கணேசனின் மேல் மாகாண மக்கள் (கொழும்புத் தமிழர்) முன்னணி ஏற்கனவே யு.என்.பி.க்கு தனது ஆதரவை தெரிவித்து விட்டது. (உண்மையில் அந்தக் கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் யாவும், யு.என்.பி.யின் தமிழ் பிரிவு போன்றே அமைந்துள்ளது.) தென்னிலங்கை முஸ்லிம் வணிக சமூகத்தின் பிரதிநிதிகளான முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிப்பது உறுதியாகி விட்டது. தமிழ் தேசியக் கூட்டணியை, யு.என்.பி தலைமையிலான கூட்டணியில் சேர்ப்பதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் தூது போகின்றது. தமிழ் தேசியக் கூட்டணி மதில் மேல் பூனையாக காத்திருக்கிறது. கட்சிக்குள் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்றும், எதிர்ப்பது என்றும் இரண்டு பிரிவுகள் தோன்றி விட்டன. இத்தனைக்கும் மத்தியில் இனவழிப்புப் போரை தலமையேற்று நடத்திய சரத் பொன்சேகாவின் பாத்திரத்தை மறக்க விரும்புகிறார்கள். தமிழ் தேசிய கொள்கையை காற்றிலே பறக்க விட்டு, வர்க்க பாசத்துடன் யு.என்.பி.யை தழுவிக் கொள்கின்றனர். தமிழரசுக் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து, இது அடிக்கடி நடக்கும் கூத்து தான். "அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ கிடையாது" என மாக்கியவல்லி மீண்டும் விளக்கம் கொடுக்கலாம்.

இலங்கை இராணுவ வரலாற்றில், இராணுவ தளபதிகள் அரசியல் கருத்துக்களை கூறுவது மிக அரிது. பொதுவாக இராணுவம் பாராளுமன்ற அரசுக்கு கட்டுப்பட்ட, கீழ்ப்படிவான பாத்திரத்தையே ஏற்றிருந்தது. போரை தொடருவதா, முடிப்பதா என்பதை கூட பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுகளுக்கு அமைவாகவே செயற்படுத்தி வந்தது. ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவான நாளில் இருந்து, அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்களிடையே மாற்றம் காணப்பட்டது. பாகிஸ்தானில், அல்லது துருக்கியில் உள்ளதைப் போல இராணுவத்திற்கு கூடுதல் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்குப் பின்னர் நடந்தவைகள் அனைவருக்கும் தெரிந்த வரலாறு. தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க கூடிய அதிகாரம் பெற்ற இராணுவம், வாகரை தொடங்கி முள்ளிவாய்க்கால் துரித பாய்ச்சலில் முன்னேறியது. புஷ்ஷின் தத்துவமான "ஈடு செய்யப்படக் கூடிய இழப்பு" போன்ற வார்த்தை ஜாலங்களால், புலிகளோடு ஒரு பகுதி தமிழரையும் அழித்து முடித்தது. "யுத்தம் நீடிக்குமானால் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணிப்பார்கள். அதற்காக பத்தாயிரம் பேரை பலி கொடுத்து யுத்தத்தை முடிப்பது தவறல்ல." இவ்வாறு ஒரு அமெரிக்க பத்தி எழுத்தாளர் ஹெரால்ட் ட்ரிபியூன் பத்திரிகையில் தத்துவ விளக்கம் அளித்தார்.

இதிலே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், 35 வருட கால புலிகளின் ஆயுதப் போராட்டம் தீர்மானகரமான முடிவுக்கு வருகிறது என்பது அமெரிக்காவுக்கு தெரிந்திருந்தது. அமெரிக்க அரசு, ஈராக்கில் சதாம் ஹுசையின் ஆட்சியை அகற்றுவதற்கு ஆயிரக்கணக்கான மக்களை பலி கொண்டது. இலங்கையில் இறுதி யுத்தத்தில் இரத்தக்களரி ஏற்படும் என்றோ, அங்கே இனப்படுகொலைக்கான சாத்தியம் உள்ளது என்றோ, அறியாத அப்பாவிகள் அல்ல அமெரிக்க அதிகாரிகள். அமெரிக்கா, தமிழின அழிப்பு போரை முன்னெடுக்கும் இலங்கை இராணுவத்திற்கு தடையேதும் போடாது வாளாவிருந்தது. இலங்கை அரசுக்கு அமெரிக்க ஆசீர்வாதம் கிடைத்திருந்தது என்பது இதன் அர்த்தம் அல்ல. ஈராக்கில் சதாம் ஹுசையின் குர்து, ஷியா இன அழிப்பு, யூகோஸ்லேவியாவில் மிலோசோவிச்சின் போஸ்னியர், கொசொவர் இன அழிப்பு எல்லாமே அமெரிக்காவுக்கு தெரியாமல் நடக்கவில்லை. அப்படி ஏதாவது நடக்க வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த நாடுகளில் சர்வ வல்லமை படைத்த சர்வாதிகாரிகளை அகற்றவும், அதற்குப் பின்னர் முழுமையான காலனியாதிக்கத்திற்கும், "இனப்படுகொலை தொடர்பான நீதி விசாரணை" உதவியிருக்கிறது.

இந்த இடத்தில் தான் இனவழிப்பு செய்த போர்க்குற்றவாளியான சரத் பொன்சேகாவை யு.என்.பி. ஆதரிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுகின்றது. "தமிழர்களின் நண்பன்" யு.என்.பி., சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் இறக்கவிருக்கிறது. அது தனது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஒதுக்கி விட்டு, இந்த தெரிவை செய்துள்ளது. மகிந்த ராஜபக்ஷவாவது தன்னை ஒரு இலங்கை தேசியவாதி என வெளியுலகிற்கு காட்டிக் கொண்டார். அனால் சரத் பொன்சேகாவோ "இது சிங்களவர்களின் தேசம்" என்று அப்பட்டமான பேரினவாதியாக காட்டிக் கொண்டவர். இருப்பினும் யு.என்.பி.க்கு சரத் பொன்சேகாவை நன்றாக பிடித்து விட்டது.

மகிந்த பதவிக்கு வந்த உடனே, எதிர்க்கட்சியான யு.என்.பி.யை உடைத்து, கட்சி தாவியவர்களுக்கெல்லாம் அமைச்சர் பதவி கொடுத்தது வந்தார். அதே நேரம், சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில், "ரணிலின் அரசு புலிகள் விரும்பியதை கொடுத்துக் கொண்டிருந்தது" போன்ற தகவல்கள் பிரச்சாரப்படுத்தப்பட்டன. இத்தகைய இருமுனைத் தாக்குதல்களால் துவண்டு போன யு.என்.பி. ரணிலின் கையாலாகாத தலைமையை கேள்விக்குள்ளாக்கியது. போரில் வென்றால், மகிந்தவின் புகழ் வானுயர உயருமென்று ரணில் விசுவாசிகளுக்கும் தெரியும். இத்தகைய பின்னடைவுகளால், போர்க்கால கதாநாயகனான சரத் பொன்சேகாவை கண்டு ஆனந்தித்ததில் வியப்பில்லை. இன்று பலரையும் குடையும் கேள்வி; சரத் பொன்சேகா ரணிலை பயன்படுத்துகிறாரா? அல்லது ரணில் சரத் பொன்சேகாவை பயன்படுத்துகிறாரா? இருவரும் ஒருவரில் மற்றவர் தங்கியிருப்பதை மறுக்க முடியாது.

அரசியலில் குதிக்கும் போது, ஆதரிக்க தொண்டர்கள் இல்லாத சரத் பொன்சேகா, யு.என்.பி. ஆட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் சிறுபான்மையினத்தவர் வாக்குகளை எடுத்து தரும் வேலையை யு.என்.பி. பார்த்துக் கொள்ளும். அது சரி. சரத் பொன்சேகாவால் ரணிலுக்கோ, அல்லது யு.என்.பி.க்கோ என்ன நன்மை? நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றப் போவதாக யு.என்.பி. சூளுரைத்து வருகின்றது. ஜனாதிபதியாக தெரிவாகும் சரத் பொன்சேகா, ஆறு மாதங்கள் மட்டுமே ஜனாதிபதி பதவியில் இருப்பாராம். அதற்குப் பிறகு, நாட்டின் தலைவர் பிரதமர் என்று, யாப்பு திருத்தி எழுதப்படும். அதாவது ரணிலை பிரதமராகக் கொண்ட பாராளுமன்றத்தின் கைகளில் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டு, சரத் பொன்சேகா ஒதுங்கி விடுவாராம். நினைத்தபடி ஆட்டுவிக்க சரத் பொன்சேகா ஒரு பொம்மை என கருதி விட்டார்கள் போலும். ஆறு மாதம் ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து பதவி சுகம் கண்ட சரத், அதற்குப் பிறகு நகர மாட்டேன் என அடம்பிடித்தால் என்ன செய்வது? பாகிஸ்தானில் முஷாரப் செய்ததைப் போல, "தேசத்தின் தேவை, இராணுவ தளபதியின் சேவை." என்று இராணுவ ஆட்சியை நிறுவ மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இராணுவ சதிப்புரட்சி பற்றி கூட கதை அடிபடுகின்றது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பலம் பொருந்திய இராணுவத்தை வழி நடாத்திய நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற பெருமைக்குரியவர் சரத் பொன்சேகா. புதிதாக தோன்றிய பூதத்தை கண்டு அஞ்சிய மகிந்த ராஜபக்ஷ, "தனக்கு எதிராக இராணுவ சதிப்புரட்சி வருமென்று அஞ்சினார். இதனால் இந்திய இராணுவத்தின் உதவியை நாடினார்." சரத் பொன்சேகாவின் ராஜினாமாக் கடிதத்தில் அவ்வாறு எழுதப் பட்டிருந்தது. (இலங்கை இராணுவத்தை மதிக்கவில்லை என்பது சாராம்சம்) அந்த தகவல் உண்மையில்லை என்று இந்தியா மறுத்த போதிலும், இலங்கை அரச மட்டத்தில் "சதிப்புரட்சி" பற்றிய எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இராணுவத்தில் கடமையாற்றிய சரத் பொன்சேகாவின் உறவினர்கள் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சரத் விவகாரம் வெளிவர முன்னரே, டெயிலி நியூஸ் பத்திரிகை எச்சரிக்கை மணி அடித்தது. ஹொண்டூரஸ் நாட்டில் ஏற்பட்ட இராணுவ சதிப்புரட்சியை அரசாங்க நாளேடான டெயிலி நியூஸ் முதன்மைச் செய்தியாக பிரசுரித்திருந்தது. சில இடதுசாரி ஊடகங்களை தவிர, இதுவரை உலகில் எந்தவொரு வெகுஜன ஊடகமும் ஹொண்டூராஸ் குறித்து அக்கறைப்படவில்லை. டெயிலி நியூஸ் செய்தி, அரசுக்கான எச்சரிக்கை ஆகவே கருதப்படுகின்றது.

இந்த களேபரங்களுக்கு நடுவில், பின்னணியில் இருந்து ஊக்குவிக்கும் சக்திகள் பலர் கண்களுக்கு தெரிவதில்லை. இந்தியாவைப் போல, இலங்கையிலும் சாதி, வர்க்க அரசியல் இன்றுவரை கோலோச்சுகின்றது. தென்-மேற்கு மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்தும் கரவ சாதியை சேர்ந்த சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் தற்செயலானதல்ல. கரவ சமூகம், பிரிட்டிஷ் காலத்தில் இருந்து, மேலை நாட்டு மோகம் கொண்ட முதலாளித்துவ நலன்விரும்பிகளாவர். அத்தகைய பின்புலத்தை கொண்ட ஒருவரை, மேற்குலக சார்பு லிபரல் யு.என்.பி. அணைத்துக் கொண்டதில் வியப்பில்லை. சிங்கள சாதிய சமூகத்தில் பெரும்பான்மையாகவும், மேல்நிலையிலும் உள்ள கொவிகம (தமிழரில்: வெள்ளாளர்கள்), கரவ (தமிழரில்: கரையார்) சாதியினரை சேர்ந்தவர்களே, இலங்கை அரசியலிலும், பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சரத் - யு.என்.பி. கூட்டு, இந்த ஆதிக்க அரசியலை நிலை நாட்ட எடுக்கும் முயற்சியாகும். அனேகமாக அத்தகைய சமூகப் பின்னணி, சர்வாதிகார ஆட்சியமைக்க உறுதுணையாக இருக்கும். அப்படி அமையின், சிங்கள ஆதிக்கம் தமிழர் மத்தியில் இன்னும் ஆழமாக ஊடுருவும். மலேசியாவில் இருப்பதைப் போல, "சிங்களவர்களே மண்ணின் மைந்தர்கள், அனைத்து துறைகளிலும் அவர்களுக்கே முன்னுரிமை" என்பது சட்டமாக்கப்படலாம்.

போர் முடிவடைந்து மாதக் கணக்கு கூட ஆகாத நிலையில், இராணுவத்தின் பலத்தை இரு மடங்காக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இராணுவம் என்ற மிருகத்திற்கு, இன்னுமின்னும் தீனி போட்டு வளர்ப்பதற்கான அந்த திட்டத்தை முன்மொழிந்தவர் சரத் பொன்சேகா. அதே நேரம், வட மாகாண இராணுவ முகாம்களில் கடமையாற்றும் (சிங்கள) படையினரின் குடும்பங்களை குடியேற்றும் யோசனையும் அவருடையது தான். துருக்கியில் ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. குர்திய சிறுபான்மையின மக்கள் செறிவாக வாழும் பிரதேசத்தின் முக்கிய நகரங்களின் சனத்தொகையில், துருக்கியரின் விகிதாசாரம் அதிகம். துருக்கி இராணுவவீரர்களும், அவர்களது குடும்பத்தினருமே அங்கு சனத்தொகை பரம்பலை மாற்றியமைத்தவர்கள். துருக்கியில் நடந்ததைப் போல, கணிசமான வடக்கு தமிழர்கள் தென்னிலங்கையில் குடியேற்றப்படலாம். தென்னிலங்கையில் உள்ள அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வளிக்கும் முகாமில், ஆயிரக்கணக்கான முன்னாள் புலிப் போராளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிங்கள மொழி, தொழிற்கல்வி என்பன கற்பிக்கப்படுகின்றன. இவர்கள் விடுதலை செய்யப்படும் நேரம், கொழும்பு அல்லது பிற தென்னிலங்கை நகரங்களில் குடும்பத்துடன் தங்கிவிடுமாறு ஊக்குவிக்கப் படுகின்றனர். பல இளைஞர்கள் கொரியா போன்ற நாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்று சென்றுள்ளனர். வட இலங்கை பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நிலையில், பலர் இந்த பொறிக்குள் மாட்டிக் கொள்ள இடமுண்டு. எதிர்பார்த்த படியே, மேற்குலக நாடுகள் புனர்வாழ்வுத் திட்டத்திற்கு ஆதரவாக உள்ளன. வருங்காலத்தில் சரத்பொன்சேகா-யு.என்.பி. சர்வாதிகாரம் நிலைநாட்டப்பட்டால், ஈழம் என்ற தாயகப் பிரதேசத்தில் தமிழர்கள் சிறுபான்மையாக்கப்படுவர். உலகமயமாக்கல் என்ற பெயரில், மேற்குலகின் நிபுணத்துவத்தோடு அது நடைபெறும்.

ராஜபக்ஷ சகோதரர்களுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான பனிப்போர், வன்னியில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே ஆரம்பமாகிவிட்டதாக கருதப்படுகின்றது. மகிந்தவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சருமான கோத்தபாய ராஜபக்ஷவும், சரத் பொன்சேகாவும் ஒன்றாக இராணுவத்தில் பணியாற்றியவர்கள். 1987 ம் ஆண்டு, வடமராட்சி "ஒப்பரேஷன் லிபரேஷன்" இராணுவ நடவடிக்கையில் இருவரும் பங்குபற்றியவர்கள். இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியான சரத் பொன்சேகா கேணல் தரத்திலும், கோத்தபாய அதற்கு கீழான லெப்டினன்ட் கேணல் தரத்திலும் கடமையாற்றியுள்ளனர். மகிந்த ஜனாதிபதியான பிற்காலத்தில், கோத்தபாய பாதுகாப்பு அமைச்சராக்கப்பட்டார். சரத் இராணுவ தளபதியாக பதவி உயர்வு பெற்ற போதிலும், பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டிய நிலை உருவானது. இதனால் தாழ்வுச் சிக்கலுக்கு உள்ளான சரத், தனது மனஸ்தாபத்தை நண்பர்களுடன் பகிர்ந்திருக்கிறார். எப்படியோ நக்கல், நையாண்டி கதைகள் எல்லாம் கோத்தபாய காதுகளுக்கு எட்டின. கோத்தபாய போர் முடியும் வரை பொறுமையாக இருந்திருக்கலாம். இந்தக் காரணத்தோடு, இராணுவம் ஈட்டிய வெற்றிகளால் சரத், தனக்கு மேலே வளர்ந்து விடுவாரோ என்ற அச்சம், ஜனாதிபதி மகிந்தவிற்கு தோன்றியிருக்கலாம். போர் முடிந்த பின்னர், முக்கியமில்லாத அமைச்சர் பதவியை கொடுத்து சரத்தின் "செருக்கை" அடக்க நினைத்திருக்கலாம்.

போரின் இறுதி நாட்களில் நடந்த சம்பவம் ஒன்று எரியும் நெருப்பில் எண்ணை வார்த்தது. முள்ளிவாய்க்காலில் புலிகள் இயக்க தலைவர்கள் அனைவரும் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட தினங்களில், மகிந்த ஜோர்டானில் நடந்த மகாநாட்டிற்கு சென்றிருந்தார். மே 16 ம் திகதி, புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக மகிந்தவுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் மகிந்த நாடு திரும்பிய பின்னர், மே 18 அல்லது 19 ம் திகதியே பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதியானது. இதனால் இந்த சம்பவத்தை ஜனாதிபதி அறிவிக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது. இறுதியில் அந்த வராலற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை அறிவித்தவர் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. அதாவது ஒரேயொரு அறிவிப்பால் மகிந்தவை ஓரங்கட்டிய சரத், (சிங்களவர் மத்தியில்) தனது புகழை உயர்த்திக் கொண்டார். வெகுஜன தளத்தில், சரத் புகழ் பாடும் பாடல்கள், எல்லாளனை வென்ற துட்டகைமுனுவோடு ஒப்பிடும் ஓவியங்கள் என்பன சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமாகின. ராஜபக்ஷ சகோதரர்கள் இவற்றை எல்லாம் வயிற்றெரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம்.

சரத் பொன்சேகா இராணுவ கண்ணோட்டத்தில் மட்டுமே சிந்திக்க பழகியவர். கிழக்கு மாகாணத்தில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றிய வெற்றிச் செய்தியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. தேர்தல்கள் போன்ற அரசியல் லாபங்களுக்காக இராணுவ செய்திகளை மட்டுப்படுத்தும் செயலை, சரத் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல்வாதிகள் "குறுகிய நலன் கருதிகள், நேர்மையற்றவர்கள், நாட்டை பாழாக்குபவர்கள்" போன்ற கருத்துகளையே சரத் கொண்டிருந்தார். யு.என்.பி. தொண்டர்கள், ஆதரவாளர்கள் மத்தியில், இராணுவ சர்வாதிகாரம் தேவை என்று கருதுபவர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் பி.ஜே.பி. ஆதரவு தளத்தில் நிலவும் கருத்தியலோடு ஒப்பிடத்தக்கது இது. இலங்கையில் சிலருக்கு, இராணுவ சர்வாதிகாரத்தை நிலைநாட்டி, ஜனநாயகத்தை இரத்து செய்யும் நோக்கம் இருக்கிறது. நாட்டின் பிரச்சனைகளை தீர்க்க அதுவே சிறந்த மருந்து என நினைக்கின்றனர். தற்போது மகிந்த ஒரு நீண்ட இனப்பிரச்சினை போரை வென்று விட்டாலும், வறுமைக்கு எதிரான போரில் தோற்றுப் போய் விட்டார். வேலைவாய்ப்பின்மை, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, உணவுப்பற்றாக்குறை, வறுமை என்பன அரசாங்கத்தை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் மகிந்தவின் சிம்மாசனத்திற்கு கீழே வைக்கப்பட்டுள்ள குண்டுகள். இவை வெடிக்கும் நேரம் மகிந்தவும் தூக்கிவீசப்படுவார். அந்த தருணத்திற்காக எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.

அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்கள், இலங்கையை இன்னும் மறக்கவில்லை. போரில் வீழ்ந்த பிணங்களை சுற்றி வட்டமிடும் கழுகுகளாக வட்டமிடுகின்றன. இது வரை காலமும், வருடாந்த வெளிநாட்டுக் கடன்கள் மூலம் ஏகாதிபத்தியத்தின் பிடி தளராமல் தொடர்ந்திருந்தது. அண்மைக்காலமாக ஜப்பானை விட சீனா இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ளது. போரின் போது பெருமளவு சீன, ஈரான் ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்துமாக்கடலில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அம்பாந்தோட்டையில் சீன துறைமுகம் கட்டப்பட்டு வருகின்றது. இதையெல்லாம் அமெரிக்கா சும்மா கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கவில்லை. மகிந்த ராஜபக்ஷ, அமெரிக்கா - ஈரான், இந்திய - சீனா, என்று எதிரும் புதிருமான நாடுகளை எல்லாம் நண்பனாக வைத்திருக்கும் ராஜதந்திரம் நீண்ட நாட்களுக்கு எடுபடாது. இன்றைய இலங்கை அரசு, மேற்குலக நாடுகளுடன் முட்டி மோதிக் கொண்டு சீனாவுடன் நெருக்கமாகி வருவது கண்கூடு. அத்தகைய நிலையில், சரத் பொன்சேகா போன்ற ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிற்பது அமெரிக்காவுக்கு உவப்பான விஷயம் தான். அமெரிக்கா சென்ற சரத் பொன்சேகாவை தனியாக அழைத்துப் பேசிய அரச அதிகாரிகள், அவரை விசாரணை செய்தார்களா, அல்லது ஆலோசனை வழங்கினார்களா? ஜனாதிபதியாக தெரிவாகும் சரத், கிழக்கே நகரும் இலங்கையை, மீண்டும் மேற்கு நோக்கி திருப்புவாரா?

ஒரு வேளை சரத் பொன்சேகா தேர்தலில் தோல்வியுற்றால் என்ன நடக்கும்? பாகிஸ்தான், பங்களாதேஷ் போல இராணுவம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றுமா? இராணுவத்திற்கு எத்தனை பேர் சரத்திற்கு ஆதரவானவர்கள்? தமது ஆட்சிக்கு எதிரான ஆபத்தை மகிந்த சகோதரர்கள் எவ்வாறு எதிர்கொள்வர்? புலனாய்வுத் தகவல்கள் சதிப்புரட்சியை நிச்சயப்படுத்தினால், இராணுவத்தினுள் சரத் ஆதரவாளர்கள் களையெடுக்கப்படுவார்களா? சரத் ஆதரவாளர்களுக்கு எதிரான ஒழுங்காற்று நடவடிக்கை கூட இராணுவ சர்வாதிகாரமாகத் தான் இருக்கும். எது எப்படி இருப்பினும், ஒன்று மட்டும் நிச்சயம். இலங்கையில் எதிர்கால அரசியல், முன்பிருந்ததைப் போல இனி எப்போதும் இருக்கப் போவதில்லை. இதுவரை ஜனநாயக நிறுவனங்கள் பெயரளவிலாவது இயங்கிக் கொண்டிருந்தன. இனிமேல் அதற்கு இடமே இருக்கப் போவதில்லை.

நன்றி: கலையகம்

Wednesday, November 18, 2009

தழிழர்களை அடிமை கொள்ளுவதை நினைவூட்டும் புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியீடு!


சிங்களவர்களால் தமிழர்கள் அடிமை கொள்ளப்பட்டதை நினைவுகூரும் முகமாக சிறீலங்கா மத்திய வங்கியினால் புதிய 1000 ரூபா தாள் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் தாயகபூமி ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர்களின் இறைமை நசுக்கப்பட்டு, சிங்கள தேசத்தின் இறைமை தமிழ்த் தேசத்தின் மீது திணிக்கப்படுவதை வெளிப்படுத்தும் வகையில் ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய நாணயத் தாள் வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆயிரம் ரூபா நாணயத் தாளை சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் வழங்கி வெளியிட்டு வைத்துள்ளார்.

பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமூலம் – விகடன்




தமிழகத்திலிருந்து வெளிவரும் விகடன் சஞ்சிகையில் வெளிவந்த “பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமூலம்” கட்டுரை மீனகம் வாசகர்களுக்காக…

இலங்கை நிகழ்வுகளைத் தொடர்ந்து துல்லியமாக அளித்து வரும் ஜூ.வி., ‘அதிபருக்கும் தளபதிக்குமான வெ(ற்)றிக் கூட்டணியில் விரிசல் விழுகிறது என்பதையும் முதன்முதலில் மிகவிரிவாகச் சொன்னது! கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற அலங்காரப் பதவியைக் கொடுத்து தன்னை அவமானப்படுத்தும் ராஜபக்ஷேவுக்கு எதிராக, தன் பதவியைத் துறந்துவிட்டு அரசியலில் சரத் ஃபொன்சேகா குதிக்கப் போகிறார் என்றும் அடித்துச் சொன்னது ஜூ.வி.! அதிபர் மற்றும் தளபதியின் மனைவியர் தங்களுக்குள் இருந்த நட்பைப் பயன்படுத்தி கடைசியாக சில முயற்சிகள் செய்ய… அதுவும் பலிக்காமல் போய், ஃபொன்சேகா தன் பதவியைத் துறந்தேவிட்டார்! அதிரடியாக அதிபருக்கு சவால்களும் விடத் தொடங்கிவிட்டார்!

”அகத்தியரை விழுங்கப் பார்த்த வாதாபி, இல்வலனுக்கு நேர்ந்தது போல… புலிகள் இயக்கத்தைக் கூட்டாகக் கரைத்து விழுங்கப் பார்த்த இந்த இருவருக்குமே இப்போது பேராபத்து!” என்று வர்ணிக்கிறார் இலங்கைப் பத்திரிகையாளர் ஒருவர்!

அடுத்தடுத்து இலங்கையில் அரங்கேறப் போகும் அதிரடிகள் குறித்து அவரிடமும், இன்னும் சில இலங்கைப் பிரதானிகளிடமும் நாம் விசாரித்தோம்.

புறப்பட்ட ஃபொன்சேகா!

”ஃபொன்சேகாவின் எண்ணத்தில் அரசியல் குறித்த எள்ளளவு ஆசையும் எழாத

நேரத்திலேயே, ‘அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது!’ என தேசியபௌத்த அமைப்புகளின் ஒன்றியத்தை சேர்ந்த மெதகம தம்மானந்த தேரர் மிரட்டினார். உடுவே தம்மாலோக தேரர், அதிபரின் ஆலோசகர் தெடிகமுவ நாயக்க தேரர், சாஸ்திரிபதி மெதகம தம்மானந்த தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் மற்றும் சிங்ஹலயே மகா சம்மத பூமி பத்ர கட்சி தலைவர் ஹரிசந்திர விஜேதுங்க, கலாநிதி குணதாச அமரசேகர, ஒல்கட் குணசேகர போன்றோர்கள்தான் இந்த தேசிய பௌத்த அமைப்புகளின் ஒன்றியத்தைத் தொடங்கி ஃபொன்சேகாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.

அதோடு, 10,000 பிக்குகள் கலந்துகொள்ளும் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் மிரட்டினர். இன்னொரு பக்கம் அனுர பிரியதர்சன யாப்பா, மேர்வின் சில்வா, மஹிந்தானந்த அளுத்கமகே, டக்ளஸ் அழகம்பெரும போன்ற அமைச்சர்களும் ஃபொன்சேகாவுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். இப்படி அடுத்தடுத்த தாக்குதல்களால் அவரை அடக்கி விடலாம் என்று நினைத்தவர்களின் எண்ணம் எதிர்மறையாகப் போய்விட்டது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவரை அதிபர் தரப்பே வம்பிழுத்ததுதான் முரட்டுத் தேரை இழுத்துத் தெருவில் விட்டுவிட்டது!” என்கிறார்கள் இலங்கை அரசியல் நோக்கர்கள்.

கோதாவுக்கு காரணம் கோத்தபய!

”இலங்கையில் நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் மூலகாரணியே கோத்தபயதான்! விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்ததுமே முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் ஆயுதங்களும், தங்கமும் மீட்கப்பட்டன. இந்த ஆயுதப்புதையல் சத்தமின்றி பாகிஸ்தான் ராணுவத்துக்கு விலை பேசி விற்கப்பட்டதாக ஃபொன்சேகா தரப்பு நினைக்கிறது. இதுபற்றிய முழு விவரங்களும் கோத்தபயவுக்குத் தெரியும் என்றும் நினைக்கிறது. ராணுவ வீரர்கள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த ஆயுதக்குவியல் தனிப்பட்ட ஒருவரின் பாக்கெட்டுக்கு போவதை ஃபொன்சேகா விரும்பவில்லை. புலிகளிடமிருந்து கைப்பற்றப் பட்ட தங்கத்தில் கிட்டத்தட்ட 4,000 கிலோ தங்கமும் எந்தக் கணக்கும் இல்லாமல் காணாமல் போனது. இதையெல்லாம் ஃபொன்சேகா தட்டிக் கேட்கப் போய்த்தான் கோத்தபயவுக்கும் அவருக்குமான ஆரம்ப மோதல் வெடித்தது. உடனே பாதுகாப்பு செயலர் பதவியை பயன்படுத்தி கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக ஜெனரலை (ஃபொன்சேகாவை) நியமித்தார் கோத்தபய.

இதற்கிடையில், இலங்கை யின் அரச பத்திரிகையான ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையில் ஹோண்டுராஸ் நாட்டில் நடந்த ராணுவப் புரட்சியைப் பற்றியும், அந்நாட்டு ராணுவத் தளபதியைப் பற்றியும் விரிவான கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அந்த நாட்டுடன் இலங்கைக்கு எந்த உறவும் இல்லாத நிலையில், ஜெனரலை குறிவைத்து எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரையைப் பார்த்ததும் பத்திரிகைக்குப் பொறுப்பாளரான கோத்தபயவிடம் கோபப்பட்டிருக்கிறார் ஜெனரல். அந்த சமயத்தில் இருவருக்குள்ளும் மிகக் கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்து போனை துண்டித்திருக்கிறார் ஜெனரல். இதன் பிறகுதான் ராணுவப் பொறுப்பைத் துறக்கிற அளவுக்கு ஜெனரல் ஃபொன்சேகா துணிந்தார்!” என்கிறார்கள் ராணுவ வட்டாரத்தில்.


எடுபடாத சமாதானம்!

”ராஜபக்ஷேயின் செயலாளரான லலித் வீரதுங்க ஆறு முறை அழைப்பு விடுத்தும் ஃபொன்சேகா சென்று சந்திக்கவில்லை. இதனால் ராஜபக்ஷேவின் மனைவி சிராந்தி, ஃபொன்சேகாவின் மனைவியான அனோமாவை கொழும்பில் உள்ள ஒரு புத்த விகாரையில் சந்தித்துப் பேசியிருக்கிறார். கொஞ்சம் சமாதானமான ஃபொன்சேகா, கடந்த 15-ம் தேதி ராஜபக்ஷேயை சந்தித்திருக்கிறார். 45 நிமிடங்கள் இருவரும் மனம்விட்டுப் பேசினார்கள். கோத்தபயவை மன்னிப்புக் கேட்கச் சொல்வதாகவும் கவலையோடு பேசியிருக்கிறார் ராஜபக்ஷே. பாதுகாப்பு அமைச்சர் அல்லது பிரதமர் பதவி வரை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சமாதானம் பேசியிருக்கிறார். ஆனால், ஃபொன்சேகா ‘போரின் முழு வெற்றிக்கு தன்னைக் காரணமாக அறிவிக்க வேண்டும், கோத்தபயவின் பாதுகாப்பு செயலர் பதவியை ஒழித்துவிட்டு, அந்த அதிகாரங்களை கூட்டுப்படை தலைமை தளபதிக்கு வழங்க வேண்டும்’ என அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இதில் கடுப்பாகிப் போன ராஜபக்ஷே, ‘நீங்க என்ன முடிவெடுத்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராகி விட்டேன்’ எனச் சொல்லி அவரை அனுப்பிவிட்டார்…” என்கிறார்கள் அதிபர் மாளிகை வட்டாரத்தினர்.


ராஜினாமாவும், 17 காரணங்களும்!

ராஜபக்ஷேயின் கோபம் எத்தகைய கொடூரத்துக்கும் நீளும் என நினைத்த ஃபொன்சேகா, 17 காரணங்களைப் பட்டியலிட்டு தனது ராஜினாமா கடிதத்தை அரசுக்கு அனுப்பிவிட்டார். தனக்குப் பிறகு ராணுவத் தளபதியாக நியமிக்க வேண்டிய மேஜர் ஜெனரல் சந்திரசிறீயை தவிர்த்துவிட்டு, ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டிருந்த ஜெகத் ஜெயசூர்யாவை நியமித்ததையும் கண்டித்திருக்கிறார். கூடவே, ‘புலிகளை ஒழித்துக் கட்டிய ராணுவம் சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக சந்தேகித்து, கடந்த அக்.15-ம் தேதி இந்திய அரசாங்கத்தை எச்சரிக்கையாக இருக்குமாறும், ராணுவத்தை அனுப்பி உதவுமாறும் அதிபர் கேட்டுக் கொண்டார்’ என்றும் ஃபொன்சேகா ஒரு குண்டு போட்டிருக்கிறார். இது, ஃபொன்சேகா நினைத்தபடியே சிங்கள மக்களையும் சிங்கள ராணுவத்தின் விசுவாச ஊழியர்களையும் ராஜபக்ஷேவுக்கு எதிராகக் கொதிக்க வைத்துவிட்டதாம் (இப்படியெல்லாம் இந்திய ராணுவத்திடம் எந்த உதவியும் கேட்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் சசி தரூர் உறுதியாக மறுத்திருப்பது தனிக் கதை!).

ஃபொன்சேகா தனது ராஜினாமா கடிதத்தில், ‘போராடிப் பெற்ற வெற்றியை சரியான விதத்தில் பயன்படுத்த அதிபர் தவறி விட்டார். தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு வழி செய்யாமல், அவர்களை அடைத்து வைத்திருப்பது, பல போராளிகளை உருவாக்கிவிடும் அபாயமிருக்கிறது’ என தமிழ் மக்களுக்கும் ஆதரவாக பரிந்து பேசியிருப்பதுகூட, அவருடைய எதிர்கால தேர்தல் திட்டத்தின் ஓர் அங்கம்தான்.

இதுபற்றிப் பேசும் கொழும்பு பத்திரிகையாளர்கள், ”அதிபருக்கு ரகசியமாக அனுப்பிய கடிதத்தை மீடியாக்களுக்கும் பரப்பிவிட்டு, எடுத்த எடுப்பிலேயே கைதேர்ந்த அரசியல்வாதியாக ராஜபக்ஷேவுக்கு செக் வைத்திருக்கிறார் ஃபொன்சேகா. அவருடைய தந்திரம் சிங்கள மக்களை உசுப்பி வசியப்படுத்துமே தவிர, கூர்மையான தமிழ் மக்களிடத்தில் ஒருபோதும் எடுபடாது!” என்கிறார்கள்.


களனி விகாரையில் களேபரம்!

ராஜினாமா கடிதத்தை அனுப்பிய கையோடு அக்மார்க் அரசியல்வாதியாக பளீர் வெள்ளை உடையில் களனி ரஜமகா விகாரைக்கு வழிபாட்டுக்குச் சென்றார் ஃபொன்சேகா. விகாரைக்குள் சென்று அங்குள்ள தேரரிடம் ஆசி பெற்றவர், தனது அரசியல் நிலைப்பாடு பற்றியும், அடுத்து வரும் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கத் திட்டமிட்டிருப்பதையும் அவரிடம் விளக்கியிருக்கிறார். நேரத்துக்குத் தகுந்தபடி கொடியசைக்கக்கூடிய அந்த தேரர்களும் அவருக்கு ஆசி வழங்கியதாகக் கூறப்படுகிறது. வழிபாடு முடிந்து ஃபொன்சேகா வெளியில் வந்ததுமே அதிபருக்கு நெருக்கமான எம்.பி-யான மேர்வின் சில்வா தலைமையில் அவரது ஆதரவாளர்கள் அவரை வழிமறித்திருக்கின்றனர். தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, அவரை அங்கிருந்து நகர முடியாதபடி கெரோ செய்திருக்கிறார்கள். இதெல்லாம், எதிர்கால ரசாபாசத்துக்கான துளியூண்டு தொடக்கம்தான்!

ஃபொன்சேகாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அரசுப் பொறுப்பில் அங்கம் வகித்த அவருடைய உறவினர்களும் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஒன்று… வியூகம் ரெண்டு!

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக ராணுவப் பதவியை ஃபொன்சேகா ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரிடம் தேர்தல் தொடர்பாக இரண்டு வியூகங்களை முன் வைத்திருக்கின்றன இலங்கை எதிர்க்கட்சிகள். இலங்கையை ஆளும் எண்ணத்தைவிட ராஜபக்ஷே சகோதரர்களை பழிவாங்கும் எண்ணம்தான் ஃபொன்சேகாவிடம் அதிகமிருக்கிறதாம். அதனால் ஐ.தே. முன்னணியின் சார்பில் ரணில் விக்ரமசிங்கே அதிபர் தேர்தலில் போட்டியிடுவார். அதே நேரத்தில் ராஜபக்ஷே பெரிதாக நம்பியிருக்கும் சிங்கள வாக்குகளை உடைக்கும் எண்ணத்தில் ஜே.வி.பி-யின் வேட்பாளராக ஃபொன்சேகா களமிறக்கப்படுவாராம். இதனால் சிங்கள வாக்குகள் மூன்றாகச் சிதறி உடையும்.

அதோடு, ராஜபக்ஷேவுக்கு கடந்த தேர்தலில் போன வாக்குகளில் பெரும்பகுதியை இம்முறை ஃபொன்சேகாவே பிரித்துவிடுவார். இந்த நிலையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் சிறுபான்மை வாக்குகளை வாங்கி ரணில் எளிதில் வென்று விடுவார் என கணக்கு போடுகின்றனவாம் எதிர்க்கட்சிகள். ஒருவேளை பொது வேட்பாளராக ஃபொன்சேகாவே களமிறங்க வேண்டிய நிலை உருவானால், தமிழ் கட்சிகள் எந்தளவுக்கு அவரை ஆதரிக்க இயலும் என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.


இந்தியாவா? அமெரிக்காவா?

இலங்கையைவிட இந்தியாவும், அமெரிக்காவும்தான் சிங்கள அரசாங்க சிக்கலை உற்று கவனித்து வருகின்றன. சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த நினைக்கும் அமெரிக்கா ஃபொன்சேகாவை அதிபராக்கி, அதன் மூலம் தெற்காசியாவிலும் தங்களது காலை வலுவாக ஊன்ற நினைக்கிறது. இந்தியாவோ, பாகிஸ்தானுடன் நெருக்கமாயிருக்கும் ஃபொன்சேகாவை அதிபராக்க விடாமல் தடுக்க நினைக்கிறது. அதற்கேற்ப ராஜவியூகங்களை வகுப்பதோடு, முதல்கட்டமாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் இலங்கைக்கு அனுப்பி நிலவரம் பார்த்து வரச் செய்திருக்கிறது! இதற்கும் முன்னதாக, இலங்கையில் இந்த அரசியல் குழப்பங்களுக்கு ஃபொன்சேகா அடிபோட ஆரம்பித்த சமயத்திலேயே கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் ரணிலை அவசர அவசரமாக அழைத்தது இந்தியாஅவரிடம், சில அந்தரங்கமான ஆலோசனைகளையும் நடத்தியது.

”இலங்கை சென்ற இந்திய மந்திரி பிரணாப் முகர்ஜி ராஜபக்ஷேயிடம் பேசியதோடு, ஃபொன்சேகாவையும் சந்திக்க முயன்றார். ஆனால், அதனை ஃபொன்சேகா தவிர்த்துவிட்டார்!” என்று செய்தி சொல்லும் சிலர்… பிரணாப் வந்து போன சூட்டோடு ‘இலங்கையில் முன்கூட்டி தேர்தல் நடக்காது’ என்று ராஜபக்ஷே சொல்லத் தொடங்கியிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்!

மொத்தத்தில் இலங்கை விவகாரத்தில் வெல்லப்போவது இந்திய ராஜதந்திரமா, அமெரிக்க ராஜதந்திரமா என்பது போகப் போகத்தான் தெரியும்.


உயிருக்கு உத்தரவாதம் இல்லை!

ராணுவப் பதவியை ராஜினாமா செய்யும்போதே, தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஃபொன்சேகா சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க, 800 படையினரும் 50 வாகனங்களுமாக இருந்த அவருடைய பாதுகாப்பு… 35 வீரர்கள், ரெண்டு ஜீப் என சுருக்கப்பட்டுவிட்டது. அதோடு, அமெரிக்காவில் உள்ள ஃபொன்சேகாவின் மகளுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பும் விலக்கப்பட இருக்கிறதாம். இதனால், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை, அவர் அமெரிக்காவில் தங்கியிருக்க முடிவெடுத்திருக்கிறாராம். ஆனால், அதற்கிடையில், அவர் பணியாற்றிய அலுவலகத்தில் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான ஃபைல்கள் காணாமல் போய்விட்டதாகச் சொல்லி, அவரை விசாரணைக்கு அழைக்க எத்தனித்திருக்கிறதாம் சிங்கள அரசு. உண்மையிலேயே சர்வதேச அளவில் கோத்தபயவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்துவதற்காக,நிஜமாகவே ஃபொன்சேகா சில ஆவணங்களைக் கைப்பற்றி வைத்திருப் பதாகவும் ஒரு பேச்சு உலவுகிறது இலங்கையில்.

நன்றி – ஜீனியர் விகடன்

”பிரபாகரனை கொல்லச் சொன்னதே இந்தியாதான்!” – போட்டுத் தாக்கத் தயாராகும் ஃபொன்சேகா



sarathகார்டிஹேவா சரத் சந்திரலால் ஃபொன்சேகா… இதுதான் இலங்கையில் புயலைக் கிளப்பி இருக்கும் ஃபொன்சேகாவின் முழுப்பெயர். அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்த அவர், விளையாட்டு வீரராகவும் விளங்கியவர். 1970-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்தவர், 1995-ம் ஆண்டு ஹிட்லரையே மிஞ்சுகிற அளவுக்கு அரக்கத்தனமான கொடூரம் ஒன்றை அரங்கேற்றினார். போரின்போது பிடிபட்ட விடுதலைப் புலிகளையும், காயம்பட்ட மக்களையும் செம்மணி என்கிற இடத்தில் உயிரோடு அள்ளிப்போட்டு புதைத்து, அப்போதே ஆவேசக் குற்றச்சாட்டில் சிக்கினார். பெரிய அளவில் குழி தோண்டி, 600-க்கும் மேற்பட்டோரைஅதற்குள் தள்ளி உயிரோடு புதைத்த கொடூரத்தை ஆதாரத்துடனேயே ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள் அப்போது கண்டித்தன.

இலங்கை கதைதான் தெரியுமே… இந்த கொடூரத்தைச் செய்ததற்காகவே ராணுவத்தின் 18-வது தளபதியாக உயர்ந்தார்.

ஃபொன்சேகாவின் மனசாட்சியற்ற கொடூரங்களை சகிக்க முடியாத விடுதலைப் புலிகள், 2006-ம் ஆண்டு அவர் மீது மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தினார்கள். அதில் எப்படியோ தப்பிவிட்ட ஃபொன்சேகா, ஒருவழியாய் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், விடுதலைப் புலிகளை அடியோடு ஒழிக்க நினைத்த ராஜபக்ஷே அரசு, அவரை வலிய அழைத்து, ராணுவத் தளபதியாக அறிவித்தது.

”ஃபொன்சேகா இப்போது முழுக்க முழுக்க அமெரிக்கா வின் கைப்பாவையாக இருக்கிறார். ராஜபக்ஷே அரசைக் காப்பாற்ற இந்தியா முயற்சித்தால், அமெரிக்கத் துணையோடு அதனை முறியடிக்க ஃபொன்சேகா தயாராகி வருகிறார். கண்ணிவெடிகளை அகற்றுகிறோம் என்கிற பெயரில், 2,000-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் இப்போது இலங்கையில் தங்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இலங்கை ராணுவத்தின் அனுதின நடவடிக்கைகளை ஆராயவும், புலிகள் பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை அழிப்பதற்காகவும்தான் இருக்கிறார்கள். அமெரிக்காவின் சிக்னலுக்காக காத்திருக்கும் ஃபொன்சேகா, போர்க் காலத்தில் இந்திய அரசு காட்டிய அக்கறையைப் போட்டு உடைக்கவும் தயாராகி வருகிறார்.

போர் நடந்த நேரத்தில், தமிழர்களைக் காக்கும் கோரிக்கையோடு இலங்கை அதிபரை சந்தித்த சில இந்தியப் பிரதிநிதிகள், ‘பிரபாகரன் கொல்லப்பட வேண்டும்’ என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியதாக, சில ஆதாரங்களை முன்வைத்துச் சொல்ல ஃபொன்சேகா தயாராகிவிட்டார்…” என்கிறார்கள் அவருக்கு ஆதரவாகச் செயல்படும் எதிர்க்கட்சித் தரப்பினர்.

- இரா.சரவணன்

நன்றி: விகடன்

டெண்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி! குறிச்சொற்கள்:

தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவை பார்ப்பனியத்தின் சாதி அமைப்பு, கிரிக்கெட் மோகம் என இரண்டு விசயங்கள் வலிமையாக இணைக்கின்றன. ஒன்று நிலப்பிரபுத்துவம் என்றால் மற்றது முதலாளித்துவம். இரண்டுக்கும் இரண்டு நாயகர்கள் ஒரு பிராண்டு மதிப்புடன் இந்தியாவெங்கும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனியத்திற்கு ராமன், முதலாளித்துவத்திற்கு டெண்டுல்கர்.

ராமனுக்கு கோவில் என்று பாபர் மசூதியை இடித்து ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ( இன்றைக்கு இந்தப் பருப்பு வேகவில்லை என்பது வேறுவிசயம்). ஆனால் முதலாளிகளால் முன்னிறுத்த்தப்பட்ட டெண்டுல்கரால் நுகர்வு கலாச்சாரப் பொருள்களின் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த முதலாளிகள் இன்றைக்கும் இந்த நட்சத்திர நாயகனுக்கு ஒளிவட்டம் போட்டே வருகிறார்கள்.

அதிலொன்றுதான் சச்சினின் இருபதாண்டு கிரிக்கெட் வாழ்க்கை. ஊடகங்கள் இதையே பல்வேறாக வியந்தோதி மாய்ந்து மாய்ந்து எழுதின, காட்டின. இந்த ஒளிவட்ட அத்தியாத்திற்கு ஏதாவது பேட்டி கொடுக்க வேண்டுமென்ற சடங்குப்படி சச்சின் சில வாக்கியங்களை கடமைக்காக உதிர்த்தார். அதிலொன்றும் புதுமையில்லை. “நான் மராட்டியன் என்பதற்கு பெருமைப்படுகிறேன், ஆனால் முதலில் நான் இந்தியன், மும்பை மாநகரம் எல்லா இந்தியர்களுக்கும் சொந்தமானது” இவைதான் நட்சத்திர நாயகன் உதிர்த்த தத்துவ முத்துக்கள். காலணாவுக்கு பிரயோசனமில்லாத இந்த வாக்கியங்களை பயங்கரமான அரசியல் சவடால்களாக ஊடகங்கள் கட்டியமைத்தன. அதற்கு உகந்த விதத்தில் காலாவதியான கிழட்டு நரி பால்தாக்கரே சில கருத்துக்களை சச்சினுக்கு எதிராக உதிர்த்தார்.

“சச்சின் தேவையில்லாமல் ஆடுகளத்திலிருந்து அரசியலுக்குள் நுழைகிறார். மராட்டியர்களுக்கு சொந்தமான மும்பையை இந்தியர்களுக்கு என்று சொன்னதால் அவர் மராட்டிய இதயங்களில் ரன் அவுட்டாகி விட்டார். மும்பையை பெறுவதற்காக 105 மராட்டியர்கள் உயிர் தியாகம் செய்திருக்கின்றனர். அந்தப் போராட்டம் நடைபெறும்போது அவர் பிறக்கக்கூட இல்லை.” இவைதான் வேலைவெட்டியில்லாத கிழடு பால்தாக்கரே சொன்ன பதிலடி.

இதை வைத்து சச்சின் மதவெறி, இனவெறி அமைப்புகளுக்கு எதிராக பெரும் போர் நடத்துவது போன்று ஊடகங்கள் பில்டப் கொடுத்தன. இந்த பில்டப்பில் மாதவராஜூம் சரண்டராகி நாயகனுக்கு தாங்கமுடியாத பாராட்டு பத்திரங்களை அள்ளி வீசுகிறார். வேறு எந்தப் பதிவர்களெல்லாம் இந்த ஜோடனையில் மனதை பறிகொடுத்தார்களோ தெரியவில்லை. அது என்னவோ போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும், நமக்கும் எல்லா பிரச்சினைகளிலும் மலையளவு வேறுபாடு இயல்பாகவே வருகிறது. போகட்டும். விசயத்திற்கு வருவோம்.

பால்தாக்கரேவின் சிவசேனா இயக்கம் தனது ‘வரலாற்றுக்’ கடமைகளை முடித்துவிட்டு, அதாவது இனவெறி, மதவெறிக் கலவரங்களை நடத்தி ஆட்சியைப் பிடித்து, இப்போது சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்து அய்யோ பாவம் என நாதியற்று கிடக்கிறது. பிரிந்து போன மருமகன் ராஜ்தாக்கரே சம்சா விற்கும் பீகாரி மக்களை மிருகத்தனமாக அடித்து தான்தான் மராட்டியர்களின் சேம்பியன் என சில சில்லறைகளை வைத்து காட்டிக்கொண்டார். அதன் தொடர்ச்சிதான் சட்டசபையில் இந்தியில் பதவிப்பிராமணம் எடுத்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபுஆஷ்மியைத் தாக்கி ரகளை செய்தது.

வளர்த்த கடா மார்பில் பாய்வது ஒரு புறம் என்றால் எந்த இனவெறியை வைத்து அரசியல் ஆதாயம் செய்தோமோ அதையே மருமகப்பிள்ளை அப்பட்டமாக போட்டிக்கு செய்வதை தாக்கரேவால் தாங்கமுடியவில்லை. இனவாதம் மராட்டியத்தில் இனிமேலும் எடுபடாது என்றாலும் அதற்கும் போட்டி என வந்து விட்ட பிறகு தாக்கரேவும் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. இச்சூழலில்தான் டெண்டுல்கரின் ஒண்ணுமில்லாத விசயத்திற்கு தாக்கரே பதிலடி கொடுத்து தான்தான் மராட்டியர்களின் நாட்டாமை என காட்டுவதற்கு முயன்றார்.

70களில் மும்பையில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கை முறியடிக்க காங்கிரசாலும், முதலாளிகளாலும் வளர்த்து விடப்பட்ட இனவெறி சிவசேனா இப்போது முதலாளிகளுக்கு தேவைப்படவில்லை. போலிக் கம்யூனிஸ்டுகளும் தங்கள் செயல்பாடுகளால் முதலாளித்துவத்தை வெளிப்படையாக ஆதரிக்தகும் நிலைமைக்கு முன்னேறியிருக்கிறார்கள். இதுபோக மராட்டிய மக்களும் பெரும்பான்மையாக இனவெறிக்கு முன்பு போல ஆதரவு தருவதில்லை. இப்படி ஒரு சூழலில்தான் தாக்கரே எதாவது அவ்வப்போது பேசி நானும் உள்ளேன் ஐயா என்று காட்ட வேண்டியிருக்கிறது.

ஆனால் டெண்டுல்கரின் சூழலோ வேறுமாதிரி. கிரிக்கெட்டில் தனது ஆட்டத்தால் பிரபலமான அவரை முதலாளிகள் இந்திய அளவில் ஒருவெற்றிகரமான பிராண்டாக மாற்றி விட்டு ஆதாயம் பார்த்துவிட்டார்கள். சச்சினுக்கும் கிரிக்கெட் மூலம் வந்த வருவாயை விட விளம்பரங்கள் மூலம் வந்த வருவாய்தான் பல நூறு கோடிகள் இருக்கும். இப்படி தன்னை ஒரு பில்லியனராக மாற்றியது இந்திய அளவிலான சந்தை என்பதும் அவருக்கு புரியாத ஒன்றல்ல. அதனால்தான் தான் முதலில் இந்தியன் அப்புறம்தான் மாரட்டியன் என்று அவர் சொல்கிறார். அவரது இந்தியப் பற்றின் பின்னே ஒளிந்திருப்பது இந்தியாவின் நுகர்பொருள் சந்தையின் மதிப்பு.

காரணம் அவருக்கு மாபெரும் வருவாய் அளித்தது மராட்டிய இனமல்ல, இந்திய மக்கள். இந்திய அளவிலான புகழே அவரது பிராண்டு மதிப்பை பல மடங்கு உயர்த்தியது. இந்திய அளவிலான ரசிகர்களின் செல்வாக்கே சச்சினது மதிப்பை முதலாளிகளின் உலகத்தில் கொண்டு போய்சேர்த்தது. அவரது உடலில், உடையில் எல்லா பன்னாட்டு நிறுவனங்களது முத்திரையும் உள்ளன. அவர் பெப்சிக்கும், அடிடாசுக்கும் மாய்ந்து மாய்ந்து போஸ் கொடுப்பதன் பொருள் என்ன?

மற்றபடி இந்த நாட்டின் ஜீவாதாரமான பிரச்சினைகள் எதற்கும் அவரிடமிருந்து ஒரு சொல் கூட அல்லது ஒரு சொட்டு கண்ணீர் கூட வந்ததில்லை. முக்கியமான பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்ட அவரது திருமணத்தின் வி.ஐ.பியே பால்தாக்கரேவின் குடும்பத்தினர்தான். அதற்கு முன்னர்தான் மும்பையில் பலநூறு முசுலீம் மக்களைக் கொன்று சிவசேனா பெரும் கலவரத்தை முடித்திருந்தது. அந்த அநீதிக்காக கோபம் கொண்டிருந்தால் தாக்கரேவை எப்படி தனது திருமணத்திற்கு அழைத்திருக்க முடியும்? அப்போது மட்டுமல்ல பாபர்மசூதி இடிப்பை பற்றியோ, குஜராத் இனப்படுகொலை பற்றியோ, அல்லது விதர்பாவில் கொத்து கொத்தாய் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை பற்றிய இந்த இந்திய தேசபக்தர் ஒரு சொல் கூட சொல்லாதது மட்டுமல்ல அந்தக்காலங்களில் பன்னாட்டு முத்திரைகளுடன் கூடிய தனது உடையில் அகமதாபாத்திலும், மும்பையிலும் பவுண்டரி, சிக்சர்கள் அடித்து தனது நாயக இமேஜை கூட்டிக் கொண்டிருந்தார்.

இதுதான் டெண்டுல்கரின் தேசபக்தி எனும்போது அதை காறி உமிழ்வதை விடுத்து அவருக்கு புகழாரம் சூட்டுவதைத்தான் சகிக்க முடியவில்லை. டெண்டுல்கர் தனது வருவாய்க்கு விசுவாசமாக இருக்கிறார். அது முதலாளிகளின் கைக்குள் இருக்கும் இந்தியாவின் தேசபக்தி. மாறாக இந்திய மக்களின் இரத்தமும், சதையுமாய் இருக்கும் இந்திய மக்களது வாழக்கையோடு தொடர்புள்ள தேசபக்தியல்ல.

இந்துமதவெறியை எதிர்த்து எத்தனை அமைப்புகள், தனிநபர்கள் போராடி வருகிறார்கள்? அவர்களுக்கெல்லாம் இல்லாத விளம்பரம் ஒரு வாக்கியத்தை சொன்ன சச்சினுக்கு கிடைக்கிறது என்றால் இந்த நாட்டில் இந்துமதவெறியர்கள் யாரும் வெல்ல முடியாது என்றே அர்த்தம். ஏற்கனவே தோற்றிருக்கும் தாக்கரேவுக்கு எதிராக மாபெரும் போராளியாய் டெண்டுல்கரை நிறுத்துவதிலிருந்தே ஊடகங்களின் யோக்கியதை தெரிகிறதல்லவா? ஊடகங்களுக்கும் விளம்பரங்களின் வழி வரும் வருவாய்க்கு சச்சினும் காரணாமாக இருக்கிறார் என்பதால் அப்படி தாங்கமுடியாத அளவிற்கு சச்சினே வெட்கப்படுமளவுக்கு ஊதிப்பெருக்குகிறார்கள்.

டெண்டுல்கரை வைத்துத்தான் இந்திய தேசபக்தி அளவிடப்படும் என்றால் இந்தியாவை எந்த ‘கடவுளாலும்’ காப்பாற்ற முடியாது.

Thursday, November 12, 2009

தந்தை பெரியாரின் சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள் காணோலி ...............