Wednesday, September 30, 2009

ஹிரோசிமா நாகசாகி அன்றும் இன்றும்

1945 ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவால் ஜப்பானின் நகரங்களாகிய ஹிரோசிமா நாகசாகியில் இடப்பட்ட லிட்டில் பாய் அணட் ஃபாட் பாய் என்ற அணுக் குண்டு வீச்சுக்கு பின் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்தனர் 70 வருடங்களுக்கு புல் பூண்டு முளைக்காது என்று சொல்லப் பட்ட இரு நகரங்களின் இன்றய வளாச்சி உலகமே அதிசயக்கும் படி உள்ளது.
ஜப்பானியர்களின் தன்னம்பிக்கைக்கும் உழைப்புக்கும் இது முன்னுதரானமாகும்.
சுதந்திரம் கிடைத்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் நாம் அடைந்த முன்னேற்றம் என்ன ஓவ்வொரு இந்தியனும் சிந்திக்க வேண்டிய விசயம் குறிப்பாக அரசியல் வாதிகள், அவர்களின் சாதனையாக சுவிஸ் பாங்கில் மறைத்து வைத்திருக்கும் பணத்தைச் சொல்லலாம்.










Tuesday, September 29, 2009

இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?




அப்துல் கலாம் சென்னை வரும்போதெல்லாம் விரும்பிச் சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ருபா. எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020-இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அவர் கோருகின்ற இந்தியக் குழந்தைகளோ 2 ருபா கொடுத்து ரேசன் அரிசி வாங்க இயலாத வறுமையால் பட்டினியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“பருவ மழை பொத்து வறட்சி ஏற்பட்டாலும் நமது மக்கள் எவரும் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட அனுமதிக்க மாட்டோம்” எனக் கடந்த மாதம் மன்மோகன் சிங் முழங்கிக் கொண்டிருந்தபோதே, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பட்டினிச் சாவுச் செய்திகள் வெளிவரத் தொடங்கியிருந்தன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில மட்டும் ஜூலை 2008 முதல் ஜனவரி 2009 வரை, சத்தான உணவின்றி உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 676. அங்கு கர்ப்பிணிகளுக்குப் போதிய ஊட்டச்சத்தான உணவு இல்லாததால், ஒவ்வொரு நாலு நிமிடத்திற்கும் ஒரு குழந்தை இறந்தே பிறக்கிறது. தப்பிப் பிழைக்கும் குழந்தைகளில் 14 சதவீதம், தங்களது ஆறு வயதிற்குள் மடிந்து போகின்றன. ஊட்டச் சத்தின்மையால் வாடும் குழந்தைகளின் சதவீதம் 45-இல் இருந்து 60-ஆக இப்போது உயர்ந்துள்ளது.

அம்மாநிலத்தில் கிராமங்களைப் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கொழிந்து, பசியின் கொடுமையால் அண்மையில் இறந்து போன குழந்தைகளின் எண்ணிக்கையைக் கொண்டு அழைக்கும் வழக்கம் உருவாகி உள்ளது. அவற்றை “ஆறு பிள்ளைகளின் கிராமம்” என்றும் “பத்து பிள்ளைகளின் கிராமம்” என்றும் அழைப்பதைக் கேட்கவே கொடுமையாக உள்ளது. அந்தக் கிராமங்களில் உள்ள குழந்தைகள், உப்பிய வயிறோடும் வதங்கிய கை-கால்களோடும் பிதுங்கிய விழிகளோடும் � அவை மனிதக் குழந்தைகள்தானா என்று சந்தேகம் எழும் அளவு பட்டினியால் ஒடுங்கிப் போக் காணப்படுகின்றன.

இவ்வாறு குழந்தைகள் பட்டினியால் சாவது குறித்து அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான கணேஷ் சிங், “எதற்கெடுத்தாலும் அரசாங்கம்தான் வர வேண்டுமென இந்த மக்கள் ஏன் எதிர்பார்க்கிறார்கள்?”, “தன் கையே தனக்குதவி என இருப்பவர்களுக்குத்தான் அரசு உதவும்” என திமிரோடு கூறுகிறான்.

கணேஷ் சிங்கின் தொகுதியைச் சேர்ந்த மக்கள், எதற்கெடுத்தாலும் அரசை எதிர்பார்த்திருப்பவர்களும் அல்லர். கிராமங்கள் மீது எவ்வித அக்கறையுமில்லாத அரசு, விவசாயம் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்திவிட்ட பிறகு, சொத்துக்கே வழியில்லாத மக்கள் தங்களது நிலங்களை முதலில் அடமானம் வைத்தார்கள். வேறு வேலையும் கிடைக்காத நிலையில் ஒரு கட்டத்தில் மொத்த கிராமமுமே கடனில் மூழ்கி, பசிப் பிணியால் குழந்தைகள் செத்து மடியும் சூழல். அப்போதுதான் வேறுவழியின்றி அரசின் உதவியை அம்மக்கள் நாடினர். மக்கள் பிரதிநிதிகளாகக் கருதப்படுவோரோ அம்மக்களைப் பிச்சைக்காரர்களைப் போலச் சித்தரிக்கின்றனர்.

“உணவுக்கான உரிமை” என்ற பிரச்சார குழுவைச் சேர்ந்த சச்சின் ஜெயின், “இனம், மொழி, நிற பேதமின்றி அனைத்து தேசங்களிலும், குழந்தைகளுக்கு உணவளிப்பதைத்தான் தமது முதல் கடமையாகப் பெற்றோர்கள் கருதுகின்றனர். இங்கே குழந்தைகள் பஞ்சத்தில் மடிகிறார்கள் எனில், அதுதான் பஞ்சத்தின் உச்சம். இங்கு ஒட்டுமொத்த சமூகமே உணவின்றி வாடுகிறது என்று பொருள்” என்கிறார்.


இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா

மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பட்டினிச் சாவுகள் நடந்தவண்ணம் உள்ளன. நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டோம், நமது கிடங்குகளில் உள்ள தானிய மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் நிலவுக்கே கூட போய் வரலாம் எனப் பொருளாதார மேதைகள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் போதே, திசைகள் எங்கும் பட்டினிக் கொடுமை நீக்கமற நிறைந்திருக்கிறது. நெல்லின் பிறப்பிடமான ஒரிசாதான் இந்தியாவிலேயே பட்டினிக் கொடுமையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச இறப்பு விகிதம் உள்ள மாவட்டம் ஒரிசாவின் காலகந்தி ஆகும் (ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 140 பேர் செத்துப் போகிறார்கள்). பட்டினிக் கொடுமையின் இறுதி நிகழ்வான வயிற்றுப் போக்கால் இங்கு மக்கள் மடிந்து போவது வழமையாக உள்ளது. “இந்த கிராமத்தில் ஒருவன் நோயில் படுத்தால் அவன் செத்து போக வேண்டியதுதான்” என்கிறார், தனது மனைவியையும், குழந்தையையும் அடுத்தடுத்து பறிகொடுத்த மதன் நாயக் என்பவர். இவ்வாறு பட்டினியால் மக்கள் சாகும் காலகந்தி-போலன்கிர்-கோராபுட் பகுதியில் இருந்துதான் ஏழு கோடீஸ்வர வேட்பாளர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர் என்பது முரண்நகை.

காலகந்திக்கு அருகிலே உள்ள காசிப்பூர் பகுதியில் விவசாயம் பொத்துப் போனதால், உணவுக்கு வழியின்றி மக்கள் அல்லாடுகின்றனர். ஒரு காலத்தில் தமக்கென சொந்தமாக நிலம் வைத்திருந்த பழங்குடியினரும், சிறு விவசாயிகளும் கொஞ்சம் கொஞ்சமாக பெரு விவசாயிகளிடம் அற்ப விலைக்குத் தமது நிலங்களை விற்று விட்டு விவசாயக் கூலிகளாக மாறிப்போயுள்ளனர். விவசாயம் பொத்துப் போகும் போது உணவுக்கு வழியின்றி மாங்கொட்டைகளை அரைத்து உண்கின்றனர். பூஞ்சை படர்ந்து நஞ்சாகிப் போன மாங்கொட்டைகளை உட்கொண்டதால் 2001-இல் இந்தப் பகுதியில் 54 பேர் வாந்தி-பேதிக்கு பலியானார்கள்.

கடந்த சில வருடங்களில், இதுவரை 540 பேர் வரை பட்டினியால் மடிந்து போனது குறித்து ஒரிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கிடம் கேட்ட பொழுது “இங்கு பட்டினிச்சாவே இல்லை” என்று ஒரே வரியில் கூறி மழுப்பிவிட்டார். ஆனால் ஒரிசாவின் பழங்குடியினரும், விவசாயிகளும் வயிற்றுப் பிழைப்புக்காக சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களுக்குப் படையெடுக்கும் காட்சியோ, அவர் கூறுவது முற்றிலும் பொ என்பதை நிரூபிக்கிறது. அவர்கள் அந்நகரங்களில் கூலி வேலை பார்த்து சம்பாதிப்பதில் 70 சதவீதத்தை அந்நகரங்களில் செலவழித்தது போக, மிஞ்சும் அற்பத் தொகைதான் ஒரிசாவிலுள்ள அவர்களது குடும்பத்திற்கு உணவுக்குச் செலவிடப்படுகிறது.

நிலச் சீர்திருத்தத்தை முறையாகச் செய்த ஒரே மாநிலம் என சி.பி.எம். கட்சியினர் பெருமையுடன் பீற்றிக் கொள்ளும் மேற்கு வங்கத்தின், மேற்கு மித்னாபூரில் உள்ள அம்லாசோல் கிராமத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்தே பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து வருகின்றன. மேற்கு வங்க போலி கம்யூனிஸ்டு அரசு பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கதையளந்தாலும், இன்றும் அம்லாசோல் அதே நிலைமையில்தான் உள்ளது. பட்டினிச் சாவுகளை வெளிக் கொணர்ந்த அம்லாசோல்-ஐச் சேர்ந்த சி.பி.எம். கட்சி உறுப்பினரான கைலாஷ் முண்டா என்பவர், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார் என்ற ஒரேயொரு மாற்றம் தவிர்த்து, எதுவும் மாறிவிடவில்லை. அதேபோல, லால்கரை ஒட்டிய பகுதிகளில் உணவுப் பற்றாக்குறையும், குழந்தைகள் ஊட்டச்சத்தில்லாமல் தவிப்பதும் நிரந்தரமாக நிலவுகிறது.

இம்மூன்று மாநிலங்களில் மட்டுமல்லாது இன்னும் பிற மாநிலங்களிலும் விவசாயக் கூலிகளும் அவர்களது குழந்தைகளும் பட்டினியால் மரணமடைந்து வருகின்றனர். விஷம் போல ஏறும் விலைவாசி அவர்களது மரணத்தைத் துரிதப்படுத்திவருகிறது. இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்றிவருவதாக ஆளும் வர்க்கம் கூறி வருகிறது. ஆனால் உண்மையில் “மக்களின் வாழ்கைத் தரத்திலும், சுகாதாரத்திலும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்திலும் இந்தியா பஞ்சத்தில் அடிபட்ட ஆப்பிரிக்காவின் சஹாராப் பாலைவனப் பிரதேசங்களைப் போன்று நலிவுற்று உள்ளது” என நோபல் பரிசு பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் அமர்த்யா சென் கூறியுள்ளார். இதுதான் வல்லரசுக் கனவுகளோடு நோஞ்சான் தலைமுறையை அடைகாக்கும் இந்தியாவின் நிலைமை. வயிற்றை நிரப்ப உணவின்றிப் பச்சிளங்குழந்தைகள் ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருக்கும்போது நாட்டை வல்லரசாக்குவதையும், சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதையும் பற்றி மேதாவிகள் அளந்து கொண்டிருக்கின்றனர். கும்பி கூழுக்கு அழுததாம்! கொண்டை பூவுக்கு அழுகிறதாம்!
நன்றி:வினவு

தமிழா உங்களை தடுமாற்றமடைய செய்யும்?

Monday, September 28, 2009

சங்கே முழங்கு!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
பாரதிதாசன்.

Friday, September 25, 2009

உலகத்தில் கடவுள் என்ற மாமனிதர் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காது அல்லவா?

தடுப்பூசி மருந்து தனியாருக்கு – பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்

திருநெல்வேலி மாவட்டம், ஆலம்பட்டினம் பஞ்சாயத்து யூனியனின் ஆரம்ப சுகாதார நிலையத்தில், சரவணகுமார் என்ற இரண்டு வயது குழந்தை காச்சலுடன் கீழ்தாடை இறுக்கமாகி அசைக்க முடியாமல், ஜன்னி நோய்க்கு ஆளான நிலையில் அனுமதிக்கப்பட்டான். அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் மேற்கொண்டு சிகிச்சை செய்வதற்கு ஒவ்வாத நிலையில் உடல் மெலிந்து காணப்படுவதாகவும்; அவன் பிழைப்பதற்கான வாப்புகள் குறைவு என்றும் குடும்பத்தாரிடம் கூறிவிட்டனர். 6 மாதங்களுக்கு முன்பு சரவணகுமார் காலில் ஏற்பட்ட வெட்டு காயத்திற்கு உள்ளூரில் உள்ள கிளை சுகாதார நிலையத்தில் டி.டி. ஊசி (ஜன்னி நோய்க்கு எதிரான தடுப்பூசி) போடுவதற்கான மருந்து இல்லாமல் போனதால் ஏற்பட்ட விபரீதம் இது. சரவணக்குமாரின் பெற்றோர்கள் தங்கள் அன்பு மகனை எப்படிக் காப்பாற்றுவது என்று புரியாமல் பரிதவித்து நிற்கின்றனர்.

இது ஏதோ சரவணகுமார் என்ற குழந்தைக்கு மட்டும் விதிவிலக்காக நடந்த சம்பவம் அல்ல. நாடு முழுவதும் ஆண்டுதோறும் பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளின் எதிர்காலம் இதை நோக்கிதான் போய்க் கொண்டிருக்கிறது. இந்த செய்தியை அரசே உறுதிப்படுத்தியுள்ளது. டிசம்பர் 2008-இல் 13 மாநிலங்களை ஆய்வு செய்த சுகாதார துறை அதிகாரிகள் பீகார், சட்டிஸ்கர், அஸ்ஸாம், கேரளா மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் தொண்டை அழற்சி, ஜன்னி, காசநோய், கக்குவான் இருமல் மற்றும் அம்மை நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் இருப்பு இல்லை என்று அறிவித்துள்ளனர்.

இதேபோல் ஒரிசா, மேற்குவங்கம், திரிபுரா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் குழந்தைகளுக்கான பல்வேறு தடுப்பூசிகள் மிகவும் அற்பமான அளவில் மட்டுமே அரசு மருத்துவமனையில் இருப்பு உள்ளதாக செய்தி ஊடகங்களும் பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் கூறுகின்றன. மேற்கு வங்கத்தில் தொண்டை அழற்சி மற்றும் ஜன்னி நோய்க்கு எதிரான தடுப்பூசி அறவே இல்லை. கையிருப்பாக, ஒட்டுமொத்த தேவையில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ளது. இத்தகைய பற்றாக்குறையால் நாடு முழுவதும் 10 முதல் 30 சதம் வரை குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுதல் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளின் உடல் நலன் மற்றும் ஆயுட்காலம் கேள்விக்குள்ளாகி விட்டது. ஏன் இந்த அவலநிலை? இதற்கான பின்னணி என்ன?

2001-ஆம் ஆண்டு இந்திய அரசு, மருந்து மற்றும் தடுப்பூசி உற்பத்தியில் உலக தரத்தை எட்ட “மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள்” சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தது. அந்த சட்டத் திருத்தமானது, மருந்து மற்றும் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடுகின்ற நிறுவனங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பரிந்துரையான, “உற்பத்திக்கான சிறந்த முறைகள்” பின்பற்ற வேண்டும் என்பதே ஆகும். தேசிய ஒருங்கிணைப்பு ஆணையம் என்ற அமைப்பு, மேற்குறிப்பிட்ட பரிந்துரையைச் செயற்படுத்தவும், அவ்வப்பொழுது மருந்து மற்றும் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களை ஆய்வு செய்து பரிந்துரைகள் பின்பற்றப்படுகிறதா, இல்லையா என்பதைச் சோதித்து அறிவதும், அதன் அடிப்படையில் உரிமம் கொடுப்பது அல்லது நிராகரிப்பது ஆகியவற்றை மேற்கொள்ள அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இவ்விசயங்கள் நடைமுறையில் இருந்தால் மட்டுமே, ஒரு நாட்டின் நிறுவனங்கள் உலக சந்தையில் மருந்தையோ அல்லது தடுப்பூசிகளையோ விற்பனை செய்ய முடியும்.

கடந்த 20 ஆண்டுகளாக உலக வங்கி கட்டளைக்கிணங்க அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனியார்மயம், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. அண்மைக் காலம் வரை மத்திய சுகாதார துறையின் தடுப்பூசி போடும் திட்டங்களுக்குத் தேவையான 80 சதவீத தடுப்பூசிகளை பொதுத்துறை நிறுவனங்களே உற்பத்தி செய்து கொடுத்தன. குறிப்பாக நாய்க்கடிக்கான ரேபீஸ் தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்து வந்த குன்னூரில் அமைந்துள்ள பாஸ்டர் ஆராய்ச்சி மையம், சென்னையில் உள்ள பி.சி.ஜி. தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும் கிங் ஆராய்ச்சி மையம், மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியிலுள்ள பாம்புக் கடிக்கான தடுப்பூசி ஆராய்ச்சி மையம் ஆகியவை தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து கொடுத்து வந்தன.

இப்படி குழந்தைகளின் நலன்களுக்கு அடித்தளமாக இருந்த மூன்று நிறுவனங்களுக்கு கடந்த 20 ஆண்டுகளில் சொல்லி கொள்ளும் அளவில் அரசு நிதி ஒதுக்கீடோ அல்லது ஆட்கள் பற்றாக்குறையை போக்குவதற்கான நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. எந்த ஒரு நவீன வசதியும் இன்றி சுமார் 30 சதவீத விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறையின் ஊடாகவே இவை இயங்கிக் கொண்டிருக்கின்றன. பல்வேறு தருணங்களில் அரசு இந்நிறுவனங்களை மூட முயற்சி செய்தது. ஆனால் தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக, அரசால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இருப்பினும் வெறி நாய்க்கடிக்கான தடுப்பூசி மருந்தை தயாரித்து வந்த குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்தை பலத்த எதிர்ப்புடன் அரசு மூடியாது.

உலக சந்தையில் விற்பனைக்கு வரும் ஒட்டுமொத்த தடுப்பூசியில் 60 சதம் இந்திய நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதைத்தவிர, கணிசமான அளவில் மருந்துகளும் ஏற்றுமதி ஆகிறது. இவ்விரண்டின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 24,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த ஏற்றுமதி வியாபாரத்தில் பெரும்பான்மையாக தனியார் நிறுவனங்களே ஈடுபடுகின்றன. இந்த ஏற்றுமதி எந்த ஒரு தொய்வுமின்றி நீடிக்க வேண்டும் என்றால், ஆரம்பத்தில் கூறப்பட்ட உலக சுகாதார அமைப்பின் “உற்பத்திக்கான சிறந்த முறைகள்” நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பரிந்துரைகளைப் பின்பற்றாத நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட வேண்டும்.

இந்த பின்னணியில் கடந்த பல ஆண்டுகளாக எந்த ஒரு நிதி ஒதுக்கீடும் பெறாமலும் ஆட்கள் பற்றாக்குறையிலும் செயல்பட்டு வந்த பொதுத்துறை நிறுவனங்களின் தடுப்பூசி உற்பத்திக்கான உரிமத்தை, அன்புமணி இராமதாஸ் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த சுகாதாரத் துறை இரத்து செய்தது. இந்த பொதுத்துறை நிறுவனங்களை மாற்று வேலையில் ஈடுபடுத்தப் போவதாகவும் அறிவித்தது.

குழந்தைகளுக்குத் தேவையான 80 சதவீத தடுப்பூசிகளை நிறைவு செய்து அவர்களின் நலனைக் காப்பாற்றுவதைவிட, தனியார் நிறுவனங்கள் உலகச் சந்தையில் மருந்து மற்றும் தடுப்பூசிகள் விற்பதையே முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் அரசு கருதுகிறது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு லைசென்சு இரத்து செய்த பிறகு, சுகாதார துறையின் செயலாளர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் “பொதுத்துறை நிறுவனங்களை உற்பத்தி செய்ய அனுமதித்தால் 24,000 கோடி ரூபா மதிப்புடைய ஏற்றுமதியானது கேள்விக்குள்ளாகிவிடும்” எனக் கூறினார். அப்பட்டமாக, மக்களின் நலனை விட முதலாளிகளின் நலனே அதிமுக்கியம் என அரசு கருதுவதன் வெளிப்பாடுதான் இது.

பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களை மூடியபின், சுகாதார துறை தனது தடுப்பூசி திட்டங்களுக்குத் தேவையானவற்றை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா. பயாலாஜிக்கல் இவான்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களிடமும் மற்றும் இந்திய இம்யுனாலஜிக்கல் லிமிடெட் என்ற அரசு நிறுவனத்திடமும் கொள்முதல் செய்தது. இதில் “பயாலசிக்கல் இவான்ஸ்” என்ற நிறுவனம் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளைப் பின்பற்றுவதில் சந்தேகம் இருப்பதாக இந்நிறுவனத்தை ஆய்வு செய்த நாடாளுமன்றக் குழு அறிவித்துள்ளது. இருப்பினும் அரசு, தடுப்பூசி கொள்முதலைத் தொடர்ந்தது.

2007-08-இல் ஒட்டு மொத்தமாக குழந்தைகளுக்கு தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து 32.2. கோடி ரூபாய் விலையில் மைய அரசின் சுகாதாரத் துறை கொள்முதல் செய்தது. 2008-09-இல் அதைவிடக் குறைவான அளவிலான மருந்துகளை ரூ. 64.29 கோடிக்குக் கொள்முதல் செய்துள்ளது. தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ளையடித்ததற்கும், அரசு இத்தனியார்மயக் கொள்ளைக்கு உடந்தையாக நிற்பதற்கும் இப்புள்ளி விவரமே சாட்சியமாக உள்ளது.

தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு தேவை பற்றியோ, அரசின் தேவை பற்றியோ கண்டுகொள்வதில்லை. அவர்களின் கவனம் முழுவதும் உலகச் சந்தையில் விற்று கோடிக்கணக்கான இலாபத்தை கல்லா கட்டுவதுதான். அதையும் மீறி அரசின் தேவையை நிறைவேற்ற, தடுப்பூசிகளுக்கு யானை விலை கேட்டு நிர்ப்பந்தித்தார்கள். இந்த உண்மையை மனசாட்சியுள்ள அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்துகிறார்கள். சுகாதார துறையே கூட ஓர் அறிக்கையில் “ஒட்டு மொத்த நாடும் தடுப்பூசி பற்றாக்குறையில் தவிக்கும் போது, தனியார் நிறுவனங்கள் கை கொடுக்கவில்லை” என்று கூறுகிறது. இந்தப் பின்னணியில்தான், நாடு முழுவதும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பல்வேறு அவதிகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

தனியார்மய கொள்கை மற்றும் உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக அரசு எந்த ஒரு முதலீடுமின்றி பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்து கலாவதியாக்கியது. இரண்டாவதாக, தனியார் மருந்து மற்றும் தடுப்பூசி நிறுவனங்கள் உலகச் சந்தையைக் கைப்பற்றுவதற்கு ஏதுவாக பொதுத் துறை நிறுவனங்களின் உற்பத்தியை முடக்கி நாட்டு மக்களின் நலனை பறிகொடுத்தது. இதன் மூலம் ஆண்டுதோறும் பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளின் நலனும் இதர மக்கள் பிரிவினரின் நலனும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொண்டு தட்டம்மைக்கும், கக்குவான் இருமலுக்கும், வெறிநாய்க் கடிக்கும் நமது அன்புக் குழந்தைகளைப் பறிகொடுக்கப் போகிறோமா? அல்லது நாட்டு மக்களின் எதிர்கால வாழ்வையே பறித்து வரும் தனியார்மயக் கொள்ளையர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளான ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் எதிராக வீதியில் இறங்கிப் போராடப் போகிறோமா?
நன்றி:வினவு

Tuesday, September 22, 2009

10 வயது மாணவன் தீக்குளித்து சாவு! மொட்டு கருகியது ஏன்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஞானபிரகாசத்தின் 10 வயது மகன் பிரதீஷ் ஒரு நடுநிலைப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தான். காலாண்டு தேர்வில் தமிழ் பாடத்தை சரியாக எழுதவில்லை என ஆசிரியை விஜயலட்சுமி அவனை கண்டித்தார். இனி சரியாக எழுதவில்லை என்றால் அவனை 4ஆம் வகுப்பு அனுப்பி விடப்போவதாகவும் எச்சரித்தார்.

மதியம் மனமுடைந்த அந்த சிறுவன் அழுது கொண்டே வீடு வந்தான். ஆறுதல் கூறிய தாயார் மேரி லதா இது பற்றி ஆசிரியையிடம் பேசுவதாக தேற்றி அவனுக்கு உணவு வாங்குவதற்காக அருகாமை கடைக்குச் சென்றார்.

அந்நேரத்தில் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்த பிரதீஷின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவனோ வழியிலேயே இறந்து போனான். பின்னர் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் ஆசிரியை விஜயலட்சுமி கைது செய்யப்பட்டார்.

இது 19.09.2009 தினத்தந்தியில் வந்த ஒரு செய்தி.

ஆசிரியையை உண்மையிலேயே குற்றவாளியா?

அந்த மாணவன் படித்த பள்ளி அநேகமாக அரசுபள்ளியாக இருக்க வாய்ப்பு உண்டு. லாரி ஓட்டுநர் குடும்பத்தில், மண்ணெண்ணை வைத்து சமையல் செய்யும் வீட்டில் அந்த சிறுவனுக்காக சில ஆயிரங்கள் செலவழிக்கப்பட்டு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்திருப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும் பிரச்சினையே அந்த மாணவன் தமிழ் பாடத்தேர்வு சரியாக எழுதவில்லை என்பதே. தமிழுக்காக மெட்ரிகுலேஷன் பள்ளியில் திட்டு வருவதற்கும் வாய்ப்பில்லை.

ஆங்கிலக் கான்வென்டுகள் காளான்களைப் போல முளைத்து வளர்ந்திருக்கும் இந்த 10 அல்லது 20 வருடங்களுக்கு முன்னர் அநேகர் அரசு பள்ளியில்தான் படித்திருக்கக்கூடும். அரசு பள்ளிகளில் கண்டிப்பும், தண்டிப்பும் அங்கு படித்த எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். அப்போது நாம் அடைந்த பள்ளி தண்டனைகளை மீட்டுப் பார்ப்போம். அதிலென்ன பிரச்சினையை அன்று கண்டோம்?

அரசு பள்ளிகளில் அடிவாங்கி வளர்ந்த முந்தைய தலைமுறை மாணவர்கள் இது போல மனமுடைந்து போவதில்லை. வீட்டிலும், பள்ளியிலும் இப்போதை விட அப்போது கட்டுப்பாடு அதிகம். இந்த தண்டனைகளை கடந்துதான் அநேகம் பேர் வந்திருக்கிறோம்.

அதிலும் ஆரம்ப வகுப்பு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆசிரியப் பணியாற்றுவது இன்னும் சிக்கலானது. ஏழைப்பின்னணியிலும், உதிரியான குடும்ப வாழ்க்கையிலிருந்தும் வரும் இந்த சிறுவர்களை படிக்க வைப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டும்.

அரசு பள்ளிகளில் சேவை மனப்பான்மையோடு பணியாற்றும் ஆசிரியர்கள் கூட தேவை கருதி மாணவர்களை தண்டிப்பது, அடிப்பது உண்டு. ஆசிரியர்களை விடுங்கள் வீட்டில் சிறுவயது குழந்தைகளின் சேட்டை எல்லை மீறும்போது பெற்றோரே அடிப்பதில்லையா?

இங்கு விஜயலட்சுமி அடித்ததாக செய்தில்லை. சும்மா 4ஆம் வகுப்பிற்கு அனுப்புவதாக மிரட்டியிருக்கிறார். இதை ஒரு பெரிய குற்றமாக கருத முடியாது. மேலும் அவன் இனி நன்றாக எழுதவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் அந்த ஆசிரியை குற்றவாளியில்லை.

இப்போதும் தனியார் பள்ளிகளில் கூட 100 சதவீத வெற்றி ரிசல்ட்டுக்காக மாணவர்களை எந்திரங்கள் போல அடிமைகளாகத்தான் நடத்துகின்றனர். பெற்றோரும் அதை எதிர்மறையாக புரிந்து கொள்வதில்லை. சில சமயம் எல்லை மீறும் தனியார் ஆசிரியர்களால் கூட பல விபரீதங்கள் உடல் காயங்கள் நடந்திருக்கின்றன. பள்ளி நிர்வாகத்தின் வெற்றி விருப்பத்தை நிறைவேற்றியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகம். இதன்படி இவர்களும் இங்கே அடிமைகளாகத்தான் பணிபுரிகின்றனர். இப்படி ஆசிரியர்களும் அடிமை, மாணவர்களும் அடிமை என்றால் ஜனநாயகம் எங்கிருந்து பூக்கும்?

இறுதியில் தோல்வியுறும் மாணவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது முக்கியமாக 10,12 பொதுத்தேர்வுகளின்போது நடக்கிறது.

தேர்வு முடிவு வெளியாகும் காலத்தில் மனமுடைந்த மாணவர்களை பெற்றோர்கள் மருத்துவத்திற்காக அழைத்து வருவது ஆண்டுதோறும் நடப்பதாக மருத்துவர் ருத்ரனும் தெரிவிக்கிறார்.

தனியார் பள்ளிகளின் கல்வி தரத்திற்கு ஈடு கொடுக்கா விட்டால் ஒவ்வொரு அரசு பள்ளிகளும் அதை சாக்கிட்டு மூடப்படலாம், அல்லது வேறு பள்ளியுடன் இணைக்கப்படலாம், அல்லது அந்த ஆசிரியர்கள் இடம் மாற்றம் செய்யப்படலாம். இத்தகைய நிர்ப்பந்தங்கள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கின்றது.

குறிப்பாக இன்னும் நிலவுடமை பண்பாடு கோலேச்சும் இந்த சமூகத்தில் பெற்றோரும், ஆசிரியரும் வளரும் வாரிசுகளை தமக்கு விதிக்கப்பட்ட அடிமைகளாகத்தான் கருதுகின்றனர். இளையோருக்கு தேவைப்படும் சுதந்திரமும், அரவணைப்பும் இங்கு இல்லை. பயந்து கொண்டு வாழ்வதே சிறுவர்களின் பொது போக்கு. முக்கியமாக கீழ் மட்ட வர்க்கங்களில் இந்த போக்கு அதிகம். மேல் நோக்கிய வர்க்கங்களில் செல்லமும், ஆடம்பரமும் இருப்பதால் அங்கே சிறுவர்களைக் கண்டுதான் மற்றவர் பயப்படவேண்டும்.

இதனால் ஒரு மாணவனை நண்பனைப் போல மதிப்பு கொடுத்து கற்றுக் கொடுக்கும் பார்வையெல்லாம் நமது ஆசிரியர்களிடம் இருக்காது. அப்படியே ஒரு சிலர் முயன்றாலும் மாணவர்களின் சமூகச் சூழல் அதை மறுப்பதாகி விடுகிறது. பெரிதாகி வரும் வர்க்க முரண்பாடுகளுக்கேற்ப மாணவர்களும் தமது வர்க்கங்களைத் தாண்டி இப்போது இணைய முடிவதில்லை. முந்தயை தலைமுறைக்கு அந்த வாய்ப்பு இருந்தது. தனிமைப்படும் மாணவர்களின் பண்புகள் பிரச்சினை வரும்போது அதீதமாக வெளிப்படுவதும், அதை கட்டுப்படுத்த பெற்றோரும், ஆசிரியர்களும் திணறுவதும் இப்போது முகத்திலடிக்கும் உண்மை.

5ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் ஒரு ஆசிரியையின் நடத்தையால் தற்கொலை செய்து கொண்டான் என்ற அதிர்ச்சியும், வேதனையும் நம்மை தாக்குகிறது என்றாலும் ஆய்ந்து பார்த்தால் அந்தப் பெண்மணி அப்படி ஒன்றும் பெரிதாக தவறிழைக்கவில்லை.

பத்தாம் வகுப்பிலும், +2விலும் வருடந்தோறும் நடக்கும் தற்கொலைகள் இப்போது ஐந்தாம் வகுப்பிற்கே வந்து விட்டது என்பதைத்தான் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

முழுக்குடும்பமும் வேலைக்கு போனால்தான் வாழ முடியுமென்ற நிலையில் மேற்படிப்பில் ஏதாவது தேறினால்தான் உருப்படியாக ஏதும் ஒரு வேலை கிடைக்கும் என்ற சூழலில் குறிப்பாக தோல்வியுறும் பள்ளி இறுதியாண்டு மாணவிகளின் தற்கொலைகளைக்கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் பிரதீஷின் தற்கொலையை என்னவென்று சொல்வது?

பத்து வயதிலேயே அவன் வாழ்க்கை குறித்த அச்சத்தை அடையும் அளவுக்கு முதிர்ந்த சிந்தனை அவனிடம் வர வாய்ப்பில்லையே? பின் ஏன்? அறுபது வயது ரஜினியின் சேட்டைகளையோ, விரகதாபத்துடன் ஆடும் ஒரு குத்தாட்ட நடிகையையோ பார்த்து ஆடும் நடிக்கும் குழந்தைகளைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்வர். பள்ளி ஆண்டு விழாக்களிலும் இவை சாதாரணம். தனது உலகிற்கு எது அதிகம் தெரிகிறதோ அதைப் போலச்செய்யும் இந்த பாவனை பொருளறிந்து செய்யப்படுவதில்லை. உலகை, சமூகத்தை எளிமையாக அறியும் குழந்தைகள் உலகில் பெரியவர்களின் பாவனைகளே முக்கியமானதொன்றாக மாறிவிட்டால் பிஞ்சு பழுப்பதால் வரும் பிரச்சினைகளை நாம் எதிர் கொள்ளவேண்டும்.

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் விலங்கு நிலையிலிருந்து பின்னர் படிப்படியாக மனித நிலைக்கு வளருகிறது. இன்று இந்த மாற்றத்தை கையில் வைத்திருப்பவர்கள் பெற்றோர்களா, இல்லை மற்றவர்களா?

சக்திமான்/பவர் ரேஞ்சர் சாகசங்களைப் பார்த்து அப்படியே செய்தும் சில சிறுவர்கள் இறந்திருக்கிறார்கள். இதுவும் போலச்செய்தல்தான். நிழலை நிஜமென்று நம்பி உண்மையை மறுக்கும் சிந்தனை இத்தகைய தொடர்களைப் தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படுகிறது. ஆனால் இவையெல்லாவற்றையும் விட அதிக வேறுபாடு கொண்டது பிரதீஷின் தற்கொலை. இங்கே போலச்செய்தல் மட்டுமல்ல, கருத்து ரீதியாகவும் பல அலைக்கழிப்பிற்கு ஆளாகி அந்த சிறுவன் இந்த முடிவை எடுத்திருக்கிறான். இது எப்படி சாத்தியம்?

இங்கே குற்றவாளிக் கூண்டில் அந்த ஆசிரியை மட்டுமல்ல தமிழும் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆங்கிலப்பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் என்பது நவீனபாணியாக ஏற்கப்பட்ட காலத்தில், தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும், மக்கள் உரையாடல்களிலும் தமிங்கிலீஷே அதிகராப்பூர்வமான மொழியாக மாறிவிட்ட நேரத்தில் அந்த சிறுவன் தமிழை நல்லமுறையில் எப்படி எழுத முடியும்? விரைந்து சாகும் தமிழை ஒரு பிஞ்சு மனதில் துளிர வைக்கமுடியுமா என்ன? சுற்றியுள்ள உலகில் தமிழ் வழக்கழிந்து வரும் நேரத்தில் ஒரு மாணவனை அதுவும் ஐந்தாம் வகுப்பு மாணவனை தமிழ் பாடத்தில் தேற வைப்பது எப்படிப்பார்த்தாலும் கடினம்தான். எனில் தமிழை தின்று வரும் ஆங்கிலம்தான் இங்கே வில்லனா? இல்லை ஆங்கிலம்தான் இனி வாழ்க்கை மொழி என தீர்மானித்திருக்கும் சமூக சக்திகள் காரணமா?

இயற்கை உலகை தமிழாலும், செயற்கை உலகை ஆங்கிலத்தாலும் அறிய நேரும் சூழலில் ஆங்கிலத்தை அறிய முடியவில்லையே என குற்ற உணர்வு கொண்ட தமிழக இளைஞர்கள்தான் ஆகப்பெரும்பான்மையினர். தாய் மொழியால் வாழ முடியாது என்பது விதியாகி சகலத்திலும் கோலேச்சும் அன்னிய மொழியை கற்க முடியாமலும் திக்கி திணறியபடிதான் வாழ்க்கை நகர்ந்து வருகிறது. இதையெல்லாம் விஜயலட்சுமி போன்ற ஆசிரியப் பெண்கள் அறிய வேண்டும். அப்போதுதான் தமிழை ஒழுங்காக எழுத முடியாத சூழலைப் புரிந்து கொண்டு வேறு முயற்சிகளை எடுப்பதற்கு அறிவு ஆயத்தப்படும். இன்றைய சமூகத்தின் நவீன சூழல் குறித்து எந்த ஆசிரியருக்கும் அப்படி ஒரு புரிதல் இல்லை என்பதும் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பாடத் திட்டம் என்ற அளவுகோலின்படி கற்றுக் கொடுப்பதே என்பதும்தான் யதார்த்தம்.

விவரம் புரியாத குழந்தைகளை விட்டுவிடுவோம். விவரம் தெரியவேண்டிய இந்த ஆசிரியர்களுக்கு இதை யார் கற்றுக் கொடுப்பது?

ஐந்தாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புக்கு அனுப்பப்படுவோமோ என்பது அந்த சிறுவனை அப்படி ஏன் பாதித்திருக்கிறது? அந்த வகுப்பில் தமிழை சரியாக அதுவும் பாடத்திட்டத்தின்படி எழுதாமல் இருப்பதில் வேறு சில மாணவர்களும் இருந்திருக்கக்கூடுமே? எட்டாம் வகுப்பு வரை ஃபெயில் என்பதே இல்லை என்பது கூட இந்த சிறுவர்களுக்கு தெரியாமல் போயிருக்கிறது. எல்லாம் ஆசிரியர் தீர்மானிப்பதே பள்ளி வாழ்க்கை என்பதே இந்த மாணவர்களின் பொது அறிவாக இருக்கிறது.

தந்தையின் கடின வாழ்க்கையை அந்த சிறுவனும் அறிந்திருக்க வேண்டும். லாரி ஏறினால் இறங்குவதற்கு சில நாட்கள் ஆகிவிடும். குடும்பத் தொடர்பே மாதத்தில் சில நாட்கள்தான். இத்தகைய கடின வாழ்வுதான் நமக்கும் இறுதியில் கிட்டிவிடுமோ என அவன் எண்ணியிருப்பானோ? தேவாலயத்தில் பளீர் உடைகளுடன் வரும் மற்ற சிறுவர்கள் போல தானும் வாழமுடியாமல் போய்விடுமோ என்றும் அவன் சிந்தித்திருப்பானோ?

இன்பத்தையும், துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளும் தோழமைகள் அவன் வாழ்க்கையில் ஒரு வேளை சில விசேட காரணங்களினால் இல்லாமல் போயிருக்குமோ? நட்பு வட்டத்தில் வளைய வரும் சிறுவர்கள் இப்படி எளிதில் உணர்ச்சி வசப்படமாட்டார்கள். நட்பு வட்டத்திற்கு ஒதுக்க வேண்டிய நேரத்தை டி.வி எடுத்துக்கொண்டிருக்குமோ? ஏழைக் குடும்பமென்றாலும் டி.விதான் தமிழகத்தின் தேசியப் பொருளாகிவிட்டதே. கனாக்காணும் காலங்களும், சன் டி.வியின் தொடர்களும் எல்லா வகை வாழ்க்கை சதிகளையும், சம்பவங்களையும், திட்டமிடுதலையும் கற்றுத்தருகின்றன. பருவத்திற்கு வராத வயதிலேயே பாலியல் வேட்கை, பணத்திற்காக கொலை செய்ய திட்டமிடுதல், சக மாணவனை பணையக் கைதியாக்கி கொல்லுதல் போன்றவையெல்லாம் சமீபத்திய சிறுவரது வன்முறைகளில் சேர்ந்திருக்கின்றன. அப்படித்தான் தீக்குளிப்பையும் அந்த டி.வி பெட்டியைப்பார்த்து பிரதீஷ் பயின்றிருப்பானோ?

பிஞ்சிலே பழுக்கவைக்கும் முயற்சிகளில் தொலைக்காட்சி ஊடகம் பாரிய பங்களிப்பதன் மூலம் இன்றைய சிறுவர்களது ஆளுமை கூட டி.விதான் கட்டியமைக்கிறதா?

இல்லை அவனது தாய் மற்ற சிறுவர்களோடு பழகுவதை கண்டிப்புடன் நிறுத்தியிருப்பாரோ? இதெல்லாம் ஒரு நடுத்தர வர்க்கத்தில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் சமூகமாக வாழ்வது அத்தியாவசியமாகத்தானே இன்றும் இருக்கிறது? இல்லை அதுவும் மாறி வருகிறதா?

இந்தப் பிரச்சினையை தாய் தனது ஆசிரியையிடம் பேசுவாதக கூறினாலும் அதில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. இந்த உலகில் தனது பிரச்சினையை தாயால் கூட தீர்க்க முடியாது என்ற தனிமைச் சிந்தனை அந்தச் சிறுவனுக்கு எப்படி வந்தது? யார் அதைக் கற்றுக் கொடுத்தது?

அந்த மாணவனது பெற்றோர் தனது மகனது யாரும் எதிர்பார்த்திராத சாவு குறித்து இன்னமும் அழுது கொண்டிருப்பார்கள். அந்த செய்தியைப்படித்தவர்கள் அதை மறக்க முயற்சித்திருப்பார்கள். என்றாலும் குழந்தைகளும், சிறார்களும் ஏதோ ஒரு வீட்டில் மட்டும் வாழ்பவர்கள் அல்ல. அதனால் அடுத்த அதிர்ச்சிக்கு நாம் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.நன்றி:வினவு

Monday, September 21, 2009

வெடி விபத்தல்ல பச்சைப் படுகொலை!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கருமாத்தூர் அருகே வடக்குப்பட்டியிலுள்ள வி.பி.எம். பட்டாசு ஆலையில் கடந்த ஜூலை 7-ஆம் தேதியன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 18 பேர் கொல்லப்பட்டு 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதைக் கண்டு, அந்த வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஒன்றரை வயது குழந்தையோடு பெண்களும் பள்ளிச் சிறுவர்களும் கோரமாகக் கொல்லப்பட்ட துயரம் தாளாமல் மரண ஓலத்தில் துவண்டு கிடக்கிறது வடக்குப்பட்டி.

இறந்தவர்களில் 4 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளது. மற்றவர்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு வெந்து கரிக்கட்டையாகி கிடந்தனர். மாண்டவர்களைக் கட்டிப்பிடித்து அழுவதற்குக் கூட முடியாமல், உறவினர்கள் கதறியழுத காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையும் செங்கற்சுவரும் வெடித்துச் சிதறி தப்பியோடிவர்களைத் தாக்கியதால் தலை, கை-கால்கள் என பித்தெறியப்பட்டு பலர் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

துரைப்பாண்டியன் என்பவருக்குச் சோந்தமான இந்த வி.பி.எம். பட்டாசுத் தொழிற்சாலை, சிவகாசி பட்டாசுகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பிரபலம் அடைந்துள்ளது. சாதாரண திருவிழா பட்டாசு மருந்துகளுக்குப் பதிலாக, வீரியமிக்க அதிக ஒலியெழுப்பும் மருந்துகளைக் கொண்ட பட்டாசுகள் விதிமுறைகளை மீறி இங்கு தயாரிக்கப்படுகின்றன. தீபாவளி நெருங்குவதால், குறுகிய இடத்தில் இரவு-பகலாக இங்கு பெருமளவுக்குப் பட்டாசு தயாரிக்கப்பட்டுள்ளது. அதுவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல், பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இல்லாமல், குடிசைத் தொழில் போல பட்டாசுகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், விவசாயிகள் வறுமை-வேலையின்மையால் தத்தளிப்பதாலும் வடக்குப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களுக்கு வாழ்வளிப்பது இந்தப் பட்டாசு ஆலைதான். மக்களின் வறுமையைச் சாதகமாக்கிக் கொண்டு, எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி, இலாபவெறியோடு பட்டாசுகளை உற்பத்தி செய்து வந்துள்ளார், இந்த ஆலை முதலாளி. இதற்கு அதிகார வர்க்கமும் போலீசும் உரிய கப்பம் பெற்றுக் கொண்டு உடந்தையாக இருந்துள்ளன. எட்டு பெண்கள் மட்டுமின்றி, கொல்லப்பட்டவர்களில் 4 பேர் பள்ளிக்கூட மாணவர்கள் என்பதும், படுகாயமடைந்தவர்களில் கணிசமானோர் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், சட்டமும் விதிகளும் எந்த அளவிற்கு இங்கே அப்பட்டமான மீறப்பட்டுள்ளன என்பதற்குச் சாட்சியங்கள்.

வடக்குப்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த கோரமான விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து நடந்துள்ளது. சிவகாசி அருகே நமஸ்கரித்தான் பட்டியிலுள்ள கிருஷ்ணா பட்டாசு தொழிற்சாலையில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் கொல்லப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சிவகாசியில் அடுத்தடுத்து நடந்த பட்டாசு ஆலை விபத்துகளில் 22 பேர் கொல்லப்பட்டு, 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வடக்குப்பட்டி போலவே இங்கேயும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பரபரப்புச் செய்திகளும் விசாரணை நாடகங்களும் குறையவுமில்லை.

இப்பகுதிகளில், பாடுபட்டுப் பயிரிட்டாலும் உரியவிலை கிடைக்காமல் விவசாயிகள் போண்டியாவதால், வறுமையிலுள்ள விவசாயிகள், குழந்தைகள் உள்ளிட்டு தமது குடும்பத்தோடு வேறுவழியின்றி உயிருக்கே ஆபத்தான இத்தகைய தொழில்களில் ஈடுபடுகின்றனர். விபத்தும் உயிரிழப்புகளும் நடந்த பிறகும்கூட, ஊருக்கே சோறுபோடும் பட்டாசு ஆலையை மூடிவிடாதீர்கள் என்று கெஞ்சுகின்றனர். விவசாயம் செய்ய வாய்ப்பு-வசதிகளும் அரசாங்கத்தின் ஆதரவும் இருந்தால், இத்தகைய ஆபத்தான தொழில்களில் எவரும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் அரசோ, ஏற்கெனவே விவசாயத்தைப் புறக்கணித்து வருவது போதாதென்று, விவசாயத்தை விட்டே விவசாயிகளை விரட்டியடிக்கும் தனியார்மயம் – தாராளமயம்-உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, பிழைக்க வழியின்றி விவசாயிகள் நாடோடிகளாக அலைவதும், பட்டாசு தயாரிப்பு, கல்குவாரி, பாதாள சாக்கடையில் மூழ்கி அடைப்புகளை நீக்குதல் முதலான பல ஆபத்தான வேலைகளை எவ்விதப் பாதுகாப்புச் சாதனங்களுமின்றி செய்யுமாறு தள்ளப்படுவதும், விபத்துகளும் மரணங்களும் பெருகுவதும் கேள்வி முறையின்றித் தொடர்கின்றன.

இந்த அடிப்படையான உண்மைகளை மூடிமறைத்துவிட்டு, தொடரும் இத்தகைய விபத்துக்களைப் பற்றி முதலைக் கண்ணீர் வடிப்பதும், விதிமுறைகள் – பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கூப்பாடு போடுவதும், விசாரணை நாடகமாடுவதும் கடைந்தெடுத்த பித்தலாட்டமேயாகும். பிழைக்க வழியின்றி விவசாயிகளை வறுமைக்கும், ஆபத்தான தொழில்களுக்கும் தள்ளி உயிர்ப்பலி கேட்கும் மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பதுதான், இத்தகைய கொடுமைகளுக்கு முடிவுகட்டக் கூடிய உண்மையான அரசியல் பணியாக, உண்மையான நிவாரணப் பணியாக இருக்க முடியும்.

-புதிய ஜனநாயகம், ஆகஸ்டு -2009
நன்றி:வினவு.

Monday, September 14, 2009

ஆணி வேர்

Sunday, September 13, 2009

கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ங்களேன், இந்த வீடீயோவை பார்த்து மகிழுங்கள்.

இரவும் பகலும் துன்புறுத்தும் படையினர், எதிர்த்துப் பேசினால் துப்பாக்கியால் தாக்குதல்: முகாம் நிலை தொடர்பாக இளம் பெண் தகவல்

[திங்கட்கிழமை, 14 செப்ரெம்பர் 2009, 07:50 மு.ப ஈழம்] [வி.குணரட்ணம்]
இரவும் பகலும் சிறிலங்காப் படையினரால் தாம் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், முகாம்களில் உள்ள ஆண்கள் படையினரை எதிர்த்துப் பேசினால் துப்பாக்கிகளால் தாக்கப்படுவதாகவும் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்து அண்மையில் விடுதலையான இளம் தமிழ்ப் பெண் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

"எதற்காக நாம் இவ்வாறு நடத்தப்படுகின்றோம் என்பது தெரியவில்லை. உண்மையில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் சாதாரண அப்பாவி மக்கள்" எனவும் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு முகாம் நிலைமைகள் தொடர்பாக சுகந்தினி தேசமாணிக்கம் என்ற இந்த 22 வயதான இளம் பெண் தெரிவித்திருக்கின்றார்.

போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த சுகந்தினி, இந்தக் கடுமையான போரின் பின்னரும் தான் உயிருடன் இருப்பதை ஒரு அதிர்ஷ்டம் என்றே கருதுகின்றார். இரண்டு வருட காலமாக இடம்பெற்ற கடும் மோதல்களில் துப்பாக்கிச் சன்னங்கள் மற்றும் சீறிவரும் ஆட்டிலறிகளுக்கு மத்தியில் வாழ்ந்து உயிர் பிழைத்த சுகந்தினியின் மூன்று மைத்துனர்கள் போரின் இறுதிக்கால கட்டத்தில் கொல்லப்பட்டனர்.

போர்ப் பிடியிலிருந்து தப்பிவந்த இவர், கடந்த நான்கு மாத காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சிறிய கூடாரங்களில், பங்கீட்டு உணவுப் பொருட்கள் மற்றும் சுத்தமற்ற குடிநீரையும் அருந்திக்கொண்டு மக்களால் நிரம்பி வழியும், முட்கட்பி வேலிகளாலும் ஆயுதம் தாங்கிய படையினராலும் சூழப்பட்ட முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தார்.

அரசின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் விடுதலையான இவர், திருகோணமலை துறைமுகத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தனது தாயாரின் அரவணைப்பில் தற்போதுள்ள இவரின், கணவர் தொடர்ந்தும் இந்த முகாம்களில் ஒன்றிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

"எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரல்ல. இருந்தபோதிலும் யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமம்தான் அவரது சொந்தக் கிராமம் என்பதால்தான் அவர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தரைப் படையினர் தெரிவிக்கின்றார்கள். போர் இடம்பெற்ற காலத்தில் நாம் சந்தித்துக்கொண்டோம். ஆனால் இப்போது இல்லை. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" எனவும் சுகந்தினி தெரிவித்தார்.

வவுனியா முகாம்களில் உள்ள மூன்று லட்சம் இடம்பெயர்ந்த மக்களில் 5 வீதமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் சுகந்தினியின் சோகக் கதை போல பல கதைகள் இருக்க முடியும்.

தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாமின் நிலை தொடர்பாகத் தெரிவித்த சுகந்தினி, "சாக்குளால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறிய கூடாரங்களில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். அதிகளவு மக்கள் இந்த முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. மலசலகூடங்கள் நிரம்பி வழிகின்றன. குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு உள்ளது. சுகாதார வசதிகள் போதுமானதாக இல்லை. ஊடகவியலாளர்கள் இந்த முகாம்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை" எனக் குறிப்பிட்டார்.

மெனிக் பாம் தடுப்பு முகாமில் உள்ள ஒருவர் முகாம் நிலை தொடர்பாக செல்லிடப்பேசி மூலமாக தெரிவிக்கையில், முகாமில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் தூக்கிச் செல்லப்பட்டதாகவும், அவர்களுக்கு ஏதாவது நடந்திருக்கலாம் என முகாமில் உள்ளவர்கள் பேசிக்கொண்டதாகவும் தெரிவித்தார். முகாமுக்குள் கடத்திச் செல்லப்பட்ட செல்லிடப்பேசி ஒன்றில் இத்தகவலைத் தெரிவித்த அவர், தனது பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

"நாம் அங்கு முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக யாருக்கும் சொல்வதற்கு மக்கள் அஞ்சுகின்றார்கள். ஆனால் இது ஒரு சிறைச்சாலையாகவே இருக்கின்றது. இங்கு போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. அத்துடன் போதுமானளவு குடிநீரும் இல்லை" எனவும் அவர் தெரிவித்தார்.நன்றி:புதினம்

Friday, September 4, 2009

மும்பையில் கணபதி ஊர்வலம்.

வடமாநிலம் மும்பையில் கணபதிவிழா என்ற பெயரில் ஒரு சிலர் கடவுலை வலிபடுவது போல் பதினோரு நாட்கள் கணபதி உருவசிலையை வைத்து பூஜை, பிரஸ்தாதம், ஆடல், பாடல், என பதினோரு நாளும் அமர்க்கலப் படுத்தி விட்டு, (ஊரில் பெரியவர்கள் யாராவது தவரி விட்டால் தாரை தப்பட்டை முழங்க குடி போதையில் ஆடி செல்வார்கலே) அதே போல அட்டம் போடுகிறார்களே இது தான் ஆத்திகன் தன் கடவுலை வலிபடும் முறையா? இது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் சிறந்த ந்டன கலைகளில், ஒன்றான கரகாட்டத்தை வீதிகளில் அக்கரகாட்டக் கலைஞர்களை பண போதையை காட்டி கரகாட்ட பெண் கலைஞரை குறைவான உடையில் ஆட செய்து ரசிக்கிறார்களே இது தான் உங்கள் கடவுளுக்கு கொடுக்கும் மரியாதையா? இப்படி செய்தால் வடமாநிலவத்தரின் பார்வையில் தமிழ் த்ங்கைகள் பற்றிய நோக்கம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறேர்கள்?
இது விநாயக பெருமானின் உர்வலமா? இல்லையென்றால் இறுதி ஊர்வலமா? இதையெல்லாம் பார்க்கும் போழுது நாங்கள் நாத்திகனாக இருப்பதில் பெருமையடைகிறோம்,

Wednesday, September 2, 2009

சே குவேராவைப் படுத்திய நோய்

சே குவேராவைப் படுத்திய நோய்

புரட்சி நாயகன் சே குவேராவை இரண்டு விஷயங்கள் தீவிரமாகத் துரத்தின. ஒன்று அமெரிக்கா. இன்னொன்று ஆஸ்துமா. உலகம் முழுவதும் சுமார் 30 கோடிப் பேரைப் பாடாய்ப் படுத்திவரும் நோய் இது. இந்தியாவில் சுமார் 4 கோடிப் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
உலக ஆஸ்துமா தினம் உலகம் முழுவதும் மே மாதத்தின் முதல் செவ்வாய்கிழமை அனுசரிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோயைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இந்தத் தினத்தைப் பயன்படுத்துகிறார்கள். உங்கள் ஆஸ்துமாவை உங்களால் கட்டுப்படுத்து முடியும் என்பதுதான் இந்த வருட தீம்.

ஆஸ்துமா என்றால் என்ன?

மூச்சுக் குழல்களின் உட்புறச் சுவர்கள் வீங்கிக் கொள்வதுதான் ஆஸ்துமாவுக்குக் காரணமாக அமைகிறது. எதனால் மூச்சுக் குழல்கள் வீங்குகின்றன என்பதற்கு இதுவரை சரியான விளக்கமில்லை. சிறுவயதில் அலர்ஜி ஏற்படுத்தும் பொருள்களோடு புழங்குவது, புகைபிடி்பபது, சுற்றுப்புற சூழல் மோசமாக இருப்பது போன்றவற்றால், பிற்கால வாழ்க்கையில் அவர்களுக்கு ஆஸ்துமா வரலாம். பாரம்பரை பங்கும் இதில் உண்டு.

மூச்சுக் குழல்கள் வீங்குவதால், அலர்ஜி ஏற்படுத்தும் பொருள்கள் உள்ளே நுழையும்போது, அவை மேலும் வீங்கி காற்று உள்ளே நுழைவதையே தடுத்து விடுகின்றன. இதனால் நுரையீரலுக்குச் செல்லும் காற்று மிகவும் குறைகிறது. இதையடுத்து, மூச்சு விடுவதில் சிரமம், இருமல், மார்பில் தசைப்பிடிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன.

ஆஸ்துமா தாக்குதல் என்பது சிலருக்கு லேசாகவும் சிலருக்குத் தீவிரமாகவும் இருக்கும். சிலருக்கு உயிரைப் பறிக்கும் அளவுக்கும் இருக்கும். அதனால், ஆஸ்துமா இருப்பவர்கள் உடனடியாக ஒரு சிறப்பு மருத்துவரை சந்தித்தாக வேண்டும். ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நம்முடைய சூழலில் இருக்கும் அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய பொருள்கள் ஆஸ்துமாவை உருவாக்குகின்றன. சிலருக்கு வைரஸ் தாக்குதலால் ஆஸ்துமா ஏற்படலாம். சிலருக்கு உடல் ரீதியாக தீவிரமாக செயல்பட்ட பிறகு ஆஸ்துமா ஏற்படலாம். உதாரணமாக, உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு ஆஸ்துமா தாக்குதல் இருக்கும்.

பரவலாக, கீழ்கண்ட பொருள்களால் ஆஸ்துமா ஏற்படுவதாக வைத்துக்கொள்ளலாம்.

· அலர்ஜி ஏற்படுத்தும் பொருள்கள்.
· கரப்பான்பூச்சி
· மிருகங்களின் முடிகள்
· மரங்களிலும் புல்களிலும் இருக்கும் துகள்கள்
· காற்று மாசுபாடு
· புகை பிடிப்பது
· பருவநிலை மாற்றம்
· குளிர்ந்த காற்று
· அடத்தியான வாசனை
· வாசனை திரவியங்கள்
· பயங்கரமாகச் சிரிப்பது, அழுவது
· வைரஸ் தாக்குதல்

இம்மாதிரி பொருள்கள் ஆஸ்துமா தாக்குதலை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப் பட்டவருக்கு இருமல், மூச்சுத் திணறல், இளைப்பு, மார்புப் பிடிப்பு போன்றவை ஏற்படும். எல்லா தாக்குதலிலும் மேலே சொன்ன எல்லாமும் ஏற்படாது.

ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுப்படுத்தலாம். இதனால், ஆஸ்துமாவிற்கான மருத்துவம் என்பது நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் மருத்துவம்தான். முதல் கட்டமாக, உடனடி நிவாரணம் அளிக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதனால், ஆஸ்துமாவால் தாக்கப்பட்டவர், உடனடியாக அந்தத் தாக்குதலில் இருந்து விடுபடுவார். இவை பெரும்பாலும் மூச்சில் உறிஞ்சக்கூடிய மருந்துகளாகவே இருக்கும். இவை நேரடியாக நுரையீரலைச் சென்றடைந்து, காற்று செல்லும் வழிகளைத் திறக்கும். இதனால், எளிதாக மூச்சுவிட முடியும்.

தொடர்ந்து ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களுக்கு நீண்ட கால மருத்துவம் தேவைப்படுகிறது. மருந்துகளின் மூலம் மூச்சுப் பாதையின் வீக்கம் குறைக்கப்படுகிறது. மிகக் குறைந்த மருந்துகளின் மூலம் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருப்பதுதான் ஆஸ்துமாவுக்கான மருத்துவத்தின் உச்சகட்ட நோக்கம்.

ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமால், சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது, தொடர்ந்து உடல்நலத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். உங்களுக்கு எதனால் ஆஸ்துமா தாக்குதல் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தவிர்க்க வேண்டும். இதனால், தாக்குதலின் எண்ணிக்கை மிகவும் குறையும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அறிகுறிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். காரணம், ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்தால் பிறக்கும் குழந்தை ஊனமுற்ற குழந்தையாகப் பிரக்கலாம். ஒரே ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ஆஸ்துமா மருந்துகள் கர்ப்ப மான பெண்களிடம் பின்விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பதுதான்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் விளையாட்டு, தீவிர உடற்பயிற்சி இவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். இதனாலும் ஆஸ்துமா தாக்குதல் ஏற்படலாம். தவிர்க்க முடியாமல் ஈடுபட்டால், எப்போதும் மருந்துடன் கூடிய இன்ஹேலரைக் கையில் வைத்திருக்க வேண்டும்.
நன்றி:தெனாலி.

Tuesday, September 1, 2009

என் இனமே வீர பாடல்

என்னை கவர்ந்த சிறந்த கருத்துள்ள குறும்படம்.

அதோ .. அந்த மனிதர் போல வாழ வேண்டும் !

அதோ .. அந்த மனிதர் போல வாழ வேண்டும் !

கசங்கிக் கிடக்கும் பழந்துணியைப் போல அந்தப் பாட்டியின் தோற்றம் மார்க்கெட் சுவரோரம் தென்படும். அடிக்கடி கலைந்து போகும் சுண்டல் வற்றலை விட அதைக் கூறுபிரிக்கும் அவளது கைகளில் அதிகச் சுருக்கல்கள். இமைகளைக் கூட வேகமாக நிமிர்த்த முடியாதபடிக்கு தளர்ந்து போயிருந்தது அவளது உடல். வறுத்தெடுக்கும் வெயிலில் சுருளும் சுண்டை வற்றலை வைத்துக் கொண்டு, தலையில் சீலைத் தலைப்பை போட்டபடி அவள் உட்கார்ந்திருக்கிறாள் என்பதை விட அவளும் ஒரு கூறுகட்டிய சுண்டை வற்றலாக காட்சியளிப்பாள். இந்த வயதிலும் இவள் உழைத்து வாழும்படி என்ன கஷ்டமோ ? ஓய்வெடுக்க வேண்டிய வயதில் இப்படி ஒரு உழைப்பா ? எனப் பலவாறு பாட்டியின் மேல் பரிதாபம் மேலிடும்.

எனக்கு சுண்டை வற்றல் தேவையோ இல்லையோ, அந்தப் பாட்டிக்காகவே அடிக்கடி வாங்குவதுண்டு. அன்றும் அதே மனநிலையோடு பாட்டியின் தரைக்கடைப் பக்கம் போனேன். குத்துக்கால் போட்டுக் கொண்டு நான் பேச ஆரம்பித்தவுடன், நடுங்கும் முகத்தை ஒருவாறாக நேர்ப்படுத்திக் கொண்டு இமைகளை குழப்பி ஒரு வழியாக பார்வையை ஊன்றினாள் பாட்டி. ரெண்டு கூறுஎன்றேன். எடுத்துக்க ! என்பது போல பிதுங்கிய உதட்டசைவில் தாடையை அசைத்தாள் பாட்டி. எத்தன ரூபாய் ?” என்றவுடன், “ஆங்.. பத்துஎன்று உதடுகளை உதறினாள். வாங்கிய கூறுக்கு பத்து ரூபாயைக் கொடுத்தவுடன், நடுங்கிய விரல்களால் பணத்தைப் பிடித்து விரித்து ஒருமுறை சரிபார்த்துக் கொண்டாள்.

விரல்களின் நடுக்கத்துடனேயே அனிச்சைச் செயல் போல் அதை மடக்கி சுருக்குப்பையில் போட்டு சுமாராக கயிற்றை இழுத்து வைத்தாள். முதுமையின் அனுபவத்தையும் உழைப்பின் தீவிரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவன் இரக்கம் மேலிட பாட்டிக்கு உதவி செய்ய நினைத்து, ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து பாட்டி இந்தா வச்சுக்குங்கஎன்று நீட்டினேன். சட்டென எதுவும் புரியாத குழப்பத்தில் சுருங்கிய முகத்தை இன்னும் சுருக்கியபடி, சிரமப்பட்டு உற்றுப் பார்த்தாள் பாட்டி. என்னாது.. அதான் காசு குடுத்தியே.. எனக்குதான் வயசாகிப் போயிடுச்சுன்னா நல்லா நீயுங் கெடந்து தடுமார்ற உதடுகள் கோணலாய் போனதைப் பார்த்து, பாட்டி சிரிக்கிறாள் என்பது லேசாகப் புரிந்தது. அதில்ல பாட்டி.. இதச் சும்மா வச்சுக்குங்கஎன்று நான் கையை நீட்டியவுடன் அத்தனை பலம் பாட்டிக்கு எங்கிருந்துதான் வந்ததோ, கையை விலக்கி விட்டு சத்தமாக தே.. என்னா சும்மா கெடைக்குதா உனக்கு காசு.. காசோட அருமை தெரியலியா.. ஒத்த ரூபா சம்பாதிக்க என்னா பாடுபட வேண்டியிருக்கு. நீ பாட்டுக்கு ஈஸியா தூக்கித் தர்ற.. ஹூம் இந்தக் காலத்துப் புள்ளைங்களுக்கு வலி, வருத்தம் எங்க தெரியுது.. உழைக்கிற காசுதாம்பா உடம்புல ஒட்டும்.. நல்ல புள்ளப்பா நீ..என்று பணத்தை வாங்க மறுத்த பாட்டி எனக்கு புத்தி சொல்லி ஏதோ பெரும்பழியிலிருந்து தப்பியது போல முணுமுணுத்துக் கொண்டே வேறு வியாபாரத்தைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். ரொம்பதான் பிடிவாதக்காரப் பாட்டி போல இருக்கு என்று போகிற போக்கில் பக்கத்தில் நின்றவர் தனது புரிதலுக்கு ஏற்றவாறு சிரித்துக் கொண்டு போனார்.

ஆனால், பாட்டியின் உணர்ச்சியோ உழைப்பின் அருமையையும், உழைக்கும் மக்களின் சுயமரியாதையையும் எனக்குக் கற்றுக் கொடுத்தது போலவ இருந்தது. எப்படியாவது அடுத்தவன் பாக்கெட்டில் கையை நுழைப்பதையே மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், அரசியல் புத்திசாலித்தனம் என்று பேசுபவர்கள் மலிந்திருக்கும் இந்த நாட்டில் உழைக்கின்ற காசுதான் உடம்பில் ஒட்டும் என்ற பாட்டியின் வார்த்தையில் மிளிர்ந்த நேர்மையும், உழைப்பின் வலிமையும் எனக்கு புதிய கண்ணோட்டங்களை வழங்கியது. அம்பானி என்னடா அம்பானி தில்லுமுல்லுக்காரன்.. தெருவில் கிடந்து நேர்மையாக உழைக்கும் இந்தப் பாட்டியல்லவா நாட்டின் அச்சாணி என்ற பெருமிதத்தோடு பாட்டியைப் பார்த்தபடியே நகர்ந்தேன்.

உழைக்கும் வர்க்கத்தின் சுயமரியைதையையும், பொறுப்புணர்ச்சியையும் வெளிப்படுத்திய இன்னொரு சம்பவத்தை சமீபத்தில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது. இராமநாதபுரம் மாவட்டம் பொந்தம்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் 31 வயதுடைய முத்துராமலிங்கம். இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். நம் நாடு வெளிநாடுகளில் வாங்கியிருக்கும் கடனால் ஒவ்வொரு இந்தியனுக்கும் தலைக்கு ரூ. 30,000 கடன் உள்ளது என்ற செய்தியை பத்திரிக்கையில் படித்த இவர் இதில் தனது பங்கு இந்தியாவின் கடனை அடைக்க விரும்பினார். ஒரு நாளைக்கு ரூ.100 முதல் 150 வரை சம்பாதிக்கும் சுமை தூக்கும் தொழிலாளி முத்துராமலிங்கம் கடந்த மே 8 ஆம் தேதி இந்தியாவின் கடனை அடைக்கஎன்று குறிப்பிட்ட ரூ.5000-க்கு டி.டி. எடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ளார். தவிர முத்துராமலிங்கம் பாக்கித் தொகையையும் மெல்ல அடைப்பதாகவும் இனி என்னைக் கேட்காமல் என் பெயரில் கடன் வாங்கக் கூடாதுஎன்றும் கூறியிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த தொழிலாளியின் செய்கை ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கிண்டல், குத்தல் அல்லது ஒரு வகையான அதிரடி பாணி என்று கூட நினைக்கத் தோன்றலாம். ஆழமாகப் பரிசீலித்தால் உழைக்கும் வர்க்கத்திற்கேயுரிய சுயமரியாதை, நாட்டின் மானம் காக்கும் யதார்த்தமான தேசப்பற்று எல்லாவற்றுக்கும் மேலே என்னைக் கேட்காமல் என் பெயரில் இனி கடன் வாங்கக் கூடாது என்ற கண்டிப்பில் உழைக்கும் வர்க்கம் தனது அரசியலதிகாரத்தை பறைசாற்றும் தன்னிலையான போக்கு இதில் வெளிப்படுவதுதான் நாம் காண வேண்டிய, ரசிக்க வேண்டிய பகுதியாகும்.

பல ஆயிரம் கோடி கடனை வாங்கிக் கொண்டு, அரசை ஏய்த்து தொழில் செய்து கொண்டு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் தங்களுக்கான கடனைத் தள்ளுபடி செய்யச் சொல்லி நியாயம் பேசும் முதலாளிகளின் கேடுகெட்ட செய்கையை இந்த சுமைதூக்கும் தொழிலாளியின் நடத்தையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த நாட்டின் உண்மையான தேசப்பற்றாளர்கள் முத்துராமலிங்கம் போன்ற உழைக்கும் மக்களே என்ற உண்மை தெரிய வரும்.

நாட்டின் மீதான தனது உரிமையை ஒரு சிறிய செயலின் மூலமாக நிலைநாட்டிக் காட்டும் முத்துராமலிங்கம் போல மக்கள் உணர்வு பெற்றுவிட்டால் எங்களைக் கேட்காமல் எப்படிக் கடன் வாங்கினாய் என்ற கேள்வி முதல் .. எங்களைக் கேட்காமல் எப்படிக் கடன் வாங்கினாய் என்ற கேள்வி முதல் .. எங்களைக் கேட்காமல் ஏன் சிங்கள இனவெறி அரசுக்கு உதவி செய்தாய்?” என்ற அரசியல் கேள்விகள் வரை கேட்கும்படியாக நிலைமை மாறிவிடும். இந்த திசையில் சிந்திக்குமபடியாக செய்கிறது முத்துராமலிங்கத்தின் பாணி.

படிக்கலேன்னா மூட்டை தூக்கத்தான் லாயக்குஎன்று கேலி பேசும் படித்த வர்க்கம் ஒரு கணம் யோசிக்கவும். ஒரு சாதாரண சுமை தூக்கும் தொழிலாளி, அதிகம் படிக்காதவர், தேசத்தையே சுமக்கும் அளவுக்கு உழைக்கும் வர்க்கத்தின் சுயமரியாதையுடன் தமது ஆளுமையை வளர்த்துக் கொண்டு முன்னுதாரணமாக நம்முன்னே நிற்கிறார். இப்படிப்பட்ட வழிகாட்டிகளிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. இப்படிக் கற்றுக் கொள்வதன் மூலமாகவே நாம் உருப்படுவதற்கும் வழி இருக்கிறது என்று நம்புகிறேன் நான். நீங்களும் மறுக்க மாட்டீர்கள்தானே ?

http://www.vinavu.com/2009/09/01/life/